search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீரடி சாய்பாபா பளிங்கு சிலை உருவான விதம்
    X

    சீரடி சாய்பாபா பளிங்கு சிலை உருவான விதம்

    இன்று பல லட்சக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபட்டு வரும் சீரடி சாய்பாபா பளிங்கு சிலை உருவான கதையை அறிந்து கொள்ளலாம்.
    பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு
    பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்னதானங்களும் விமரிசையாக நடந்தன. முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர்.

    அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

    உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியில் இருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.

    சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார்.

    அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.

    பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்சக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடப்பட்டு வருகின்றது.
    Next Story
    ×