search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த காட்சி. (உள்படம்: அங்காளம்மன்).
    X
    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த காட்சி. (உள்படம்: அங்காளம்மன்).

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா தேரோட்டம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.

    விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    7-ம் திருவிழாவான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார்.


    அம்மன் வேடம் அணிந்து வந்தவர்கள், பக்தர்கள் மீது நடந்து சென்று ஆசி வழங்கிய காட்சி.

    தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலின் வடக்கு வாயில் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவ அம்மனை மேளதாளங்களுடன் அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கும், தேருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.15 மணிக்கு உற்சவ அம்மன் தேரில் எழுந்தருள, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஓம் சக்தி அங்காளம்மனே என்றும் பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் 7.30 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.

    தேரோட்டத்தின் போது பக்தர்கள் பலர் கரகம் எடுத்தும், தீச்சட்டி கையில் ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். மேலும் மேல்மலையனூர் வள்ளலார் திருச்சபை, செஞ்சி வட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் நீர்மோர், கஞ்சி, கூழ் ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×