search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று தொடக்கம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று தொடக்கம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு 8 மணிக்கு வந்து சேருகிறார். பின்னர் அங்கிருந்தவாறு நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பாடாகி உள்வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    திருவிழாவின் இரண்டாம் நாளான நாளை(திங்கட்கிழமை) மாலை ஹனுமந்த வாகனத்திலும், 20-ந் தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், 21-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 22-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 23-ந் தேதி யானை வாகனத்திலும் உள்வீதிகளில் வலம் வருகிறார். திருவிழாவின் 7-ம் நாளான 24-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, 8-ம் நாளான 25-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 26-ந் தேதி காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×