search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா தேரோட்டம்

    திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் அம்மன் பூஞ்சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், சிம்ம வாகனம், காளை வாகனம், வேதாள வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், மான் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேரில் அம்மன் எழுந்தருளினார்.

    காலை 6.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான ஆண்களும், பெண்களும் பக்தி கோஷங் களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர், காலை 7 மணிக்கு மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் பாரதி, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மனோரஞ்சிதம், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் சந்தானகிருஷ்ணன், அலுவலர் பிச்சையா, மணியம் நவநீதகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×