search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் சிலர் திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்ய வந்தபோது எடுத்தபடம்.
    X
    பக்தர்கள் சிலர் திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்ய வந்தபோது எடுத்தபடம்.

    சிவாலய ஓட்டம் நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் நிறைவடைந்தது

    சிவராத்திரியையொட்டி 2-வது நாளாக சிவாலய ஓட்டம் நடந்தது. நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் இந்த ஓட்டம் நிறைவடைந்தது.
    சிவராத்திரியையொட்டி கல்குளம், விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சுமார் 110 கிலோ மீட்டருக்குள் உள்ள பிரசித்தி பெற்ற 12 சிவ திருத்தலங்களை கால்நடையாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் முன்சிறை சிவன் கோவிலில் இருந்து தொடங்கியது.

    இந்த சிவாலய ஓட்டம் நேற்று மாலை நட்டாலத்தில் அமைந்துள்ள சங்கர நாராயணர் திருக்கோவிலில் முடிவடைந்தது. சிவாலய ஓட்டத்தால் குமரிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிவாலய ஓட்டத்தில் குமரி, நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த பக்தர்கள் முதலில் முன்சிறையில் அமைந்துள்ள திருமலை மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு தங்களது சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.

    பின்னர் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மலை, திருப்பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு ஆகிய 11 கோவில்களில் தரிசனம் செய்த போது பக்தர்களுக்கு பிரசாதமாக விபூதி வழங்கப்பட்டது. 12-வது நிறைவு சிவ திருத்தலமான நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் கொடுக்கப்பட்டது.

    சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக 2-வது நாளாக நடந்த இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா... கோபாலா...” என்று கோஷமிட்டபடி ஓடினர். மேலும் பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறி ஒன்றையும் கையில் எடுத்துச் சென்றனர். கோவிலில் சாமி கும்பிடுவதற்கு பதிலாக இறைவனை விசிறியால் வீச வேண்டும் என்பது சிவாலய ஓட்டத்தின் சம்பிரதாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்காகத்தான் அனைவரும் கையில் விசிறி எடுத்துச் சென்றனர்.

    அவர்கள் காவி நிற உடை அணிந்தும், துண்டை உடலில் போர்த்திக்கொண்டும் கையில் ஒரு சுருக்குப்பை மற்றும் விசிறியுடன் ஓட்டமும், நடையுமாக சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு மோர் உள்ளிட்ட இயற்கை பானங்கள் மற்றும் தர்ப்பூசணி பழம் ஆகியவை பொதுமக்களால் வழங்கப்பட்டன. சில பக்தர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் 12 கோவில்களுக்கும் சென்றனர்.
    Next Story
    ×