search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நடந்த போது எடுத்த படம்.
    X
    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நடந்த போது எடுத்த படம்.

    முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு

    தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு தை அமாவாசையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.

    இரவு 8 மணிக்கு சுசீந்திரம் ஆசிராமம் காசி திருப்பனந்தாள் திருமடம் சார்பில் மண்டகப்படி நடந்தது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. அப்போது, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    அதன்பிறகு நள்ளிரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது. பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி விட்டல் போற்றி, கீழ்சாந்திகள் ஸ்ரீதர்போற்றி, சீனிவாசன் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி ஆகியோர் ஆறாட்டு நடத்தினர்.

    தொடர்ந்து, வருடத்தில் 5 நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பரிவேட்டை ஆகிய நாட்கள் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாள பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
    Next Story
    ×