search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம்.
    • உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம். பூவுலகில் மனிதனாய் அவதரித்து, தர்மத்தின் பாதையில் நடந்து, ஓர் உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி. பங்குனி மாத வளர்பிறை நவமியே ராமநவமியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம பகவான் நவமியை யொட்டி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். மேலும், பல கோயில்களில், ராமபஜனைகள் நடைபெறும்.

    ஸ்ரீராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். வீட்டில் ஸ்ரீராமநவமி தினத்தில் வாசல், பூஜை அறை சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    சுவாமிக்கு நிவேதனமாக நீர்மோர், பானகம், பாயசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • ஸ்ரீசிவஞான சுவாமி நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, சித்திரை 4 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி இரவு 6.59 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம்: பூசம் காலை 8.51 மணி வரை. பிறகு ஆயில்யம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று ஸ்ரீராம நவமி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்திலும், இரவு அனுமார் வாகனத்திலும் பவனி. சங்கரன்கோவில் சுவாமி அம்பாள் இருவரும் வெள்ளி விருஷப சேவை. சீர்காழி ஸ்ரீசிவபெருமான், குடந்தை ஸ்ரீராமபிரான் தேரோட்டம். ஸ்ரீசிவஞான சுவாமி நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. அயோத்தி ஸ்ரீராமபிரான் புறப்பாடு. அயோத்தி ஸ்ரீராம் லாலா சிறப்பு அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-துணிவு

    ரிஷபம்-உறுதி

    மிதுனம்-பரிசு

    கடகம்-நன்மை

    சிம்மம்-லாபம்

    கன்னி-உயர்வு

    துலாம்-பணிவு

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- போட்டி

    மகரம்-நன்மை

    கும்பம்-நிறைவு

    மீனம்-கவனம்

    • மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.
    • தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.

    மண்ணச்சநல்லூர்:

    தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியில் இருந்து மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும்.

    பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மிகுந்த உற்சாகத்துடன் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்ரனர். இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

    இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் திருவிழாவையொட்டி 7 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

    இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துறையூர் வழியாக சென்னை செல்வதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக மரக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 48 இடங்களில் மண்டகப்படி பூஜைக்கான அம்பாள் நேற்று இரவு புறப்பட்டார்.

    பல்வேறு இடங்களில் பூஜைகளை பெற்றுக் கொண்டு பின்னர் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் தேரில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேர் திருவிழாவை கண்டுகளிக்க குவிந்தனர்.

    இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.

    இதையொட்டி நாளை மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதன்கிழமை (18-ம் தேதி) இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

    கடந்த நிதி ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரையில் மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது.

    திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்து 511 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 553 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூல் ஆனது.பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.
    • வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி புதன்கிழமை அன்று, மாலை 5.21 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குரு தன்னுடைய பார்வையால், 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார்.

    இந்த குருப்பெயர்ச்சிக்கு முன்னதாக, குரு சன்னிதியில் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த குருவானவர், தன்னுடைய பகை கிரகமான சுக்ர வீட்டிற்கு அல்லவா செல்கிறார். அதற்காக நாம் பயப்படவும் தேவை இல்லை. 'குரு பார்க்க கோடி நன்மை' என்றும், குரு சேர்ந்தால் கோடி தோஷம் நிவர்த்தி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

    எதிரியாக இருந்தாலும் எதிரில் வந்து குரு பார்த்தால், பகை உணர்வு மாறி பாச உணர்வு கூடும். எனவே இந்த குருப்பெயர்ச்சி எல்லோர் வாழ்விலும் எதிர் பாராத மாற்றங்களையும், ஏற்றங்களையும் வழங்கப்போகிறது. குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக, கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் குரு நேரடியாக பார்க்கிறார். எனவே அந்தராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    விரும்பியபடியே காரியம் நடைபெறும். வருமானம் உயரும். வாகன யோகம் வந்து சேரும். செல்வாக்கு மிக்கவர்களாக தேசத்தில் பவனி வரும் வாய்ப்பு உண்டு.

    இவை தவிர, ஜென்ம குருவாக ரிஷபத்திற்கும், அர்த்தாஷ்டம குருவாக கும்பத்திற்கும், அஷ்டமத்து குருவாக துலாத்திற்கும், விரய குருவாக மிதுனத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்களும், வளர்ச்சி பெற நினைப்பவர்களும் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் தசாபுத்தி பலம் பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டியது அவசியம்.

    அவ்வாறு செய்வதால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு, வீடு கட்டும் யோகம், வழக்கில் வெற்றி உத்தியோக உயர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை தக்கவிதத்தில் நடைபெறும்.

    ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இடையில் வக்ரம் பெறுகிறார். வக்ர காலத்தில் சிலருக்கு வளர்ச்சியும், சிலருக்கு தளர்ச்சியும் ஏற்படும். இதற்கிடையில் 26.4.2025 அன்று ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ்கிறது. இவற்றைப் பொறுத்தும், சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும் குருப்பெயர்ச்சி பலன்கள் இப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    ரிஷப குருவின் சஞ்சாரம்

    1.5.2024 முதல் 11.6.2024 வரை கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் (சூரியன் சாரம்)

    12.6.2024 முதல் 18.8.2024 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்)

    19.8.2024 5 7.12.2024 நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

    8.12.2024 முதல் 10.2.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ரம்

    11.2.2025 முதல் 4.4.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ர நிவர்த்தி

    5.4.2025 முதல் 11.5.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

    • அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் என்று பொருள்.
    • மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர்.

    அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி) என்று பொருள். சோகத்தை நீக்கி, மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் இந்நாளுக்கு அசோகாஷ்டமி என்று பெயர்.

    சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்சோலையிலே சிறைவைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர்ச் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளை சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம்.

    அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்த பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது, அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோகமரங்களை நோக்கி, "என்ன வரம் வேண்டும்?" என கேட்டார். "அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது'' எனக் கேட்டது.

    சீதாதேவியும் "மருதாணி மரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக்கொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.

    ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே "அசோகாஷ்டமி'' நாளாகும். பங்குனி மாத அமாவாசையில் இந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்குத் துன்பத்தை போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.

    கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி மருதாணி அரைத்து பூசிக் கொள்ளலாம். மருதாணி உடல் பிணிகளையும் தீர்க்கும், அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

    த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ

    பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.

    • மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் வேடம்பறி லீலை.
    • முருகப்பெருமாள் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, சித்திரை 3 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி மாலை 5.46 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: புனர்பூசம் காலை 7.13 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமாள் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். இலஞ்சி ஸ்ரீசிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடையாற்று. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் வேடம்பறி லீலை. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் வீதி உலா.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அனுபவம்

    ரிஷபம்-கணிப்பு

    மிதுனம்-ஆரோக்கியம்

    கடகம்-திடம்

    சிம்மம்-நட்பு

    கன்னி-நற்செய்தி

    துலாம்- வரவு

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- துணிவு

    மகரம்-பொறுமை

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-சுபம்

    • கேரள மாநிலம் `கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
    • இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது.

    இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய கேரள மாநிலம் `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இன்றைய குமரி மாவட்டமும், கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக, அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. எனவே குமரி மாவட்டமும் இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சமணர்களின் பெருமைகளைச் சொல்லும் சிதறால் மலைக்கோவிலும் ஒன்று.

    இங்குள்ள திருச்சாணத்து மலை மீது அமைந்திருக்கும் குடைவரைக் கோவில், பல்வேறு வரலாற்று அதிசயங்களைத் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

     சமணத் துறவிகள்

    இந்தியாவில் தோன்றிய பல சமயங்களில் சமணமும் ஒன்று. இந்த சமயத்தை பின்பற்றியவர்கள் 'சமணர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். எதிலும் பற்று இல்லாத துறவற வாழ்க்கையை வாழ்வது சமண மதக் கொள்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் சிதறால் மலைப்பகுதியில் வசித்து வந்ததாக சான்றுகள் சொல்கின்றன.

    இந்த சிதறால் மலைக்கிராமம், குமரி மற்றும் கேரள எல்லையோரம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. குமரியின் 2-வது பெரிய நகராக கருதப்படும் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.

    தொலைவில் இருந்து பார்க்கும்போது மலை உச்சியில் ஒரு சிறிய புள்ளியைப்போன்று இந்த சிதறால் மலைக் கோவில் மிக அழகாகத் தெரியும். சுற்றிலும் உயர்ந்தோங்கிய பாறைக்கூட்டங்கள், மலையில் இருந்து பார்க்கும் திசை அனைத்தும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாய், பூமிப் பந்து பசுமைப் பட்டாடையை உடுத்தியது போன்று காட்சி அளிக்கிறது.

    மலை அடிவாரத்தில் இருந்து அரை கி.மீ. தூரம் வரை படிகள் வழியே மேலே நடந்து சென்றால் குகைக் கோவிலை அடைந்து விடலாம். முன்பு திருச்சாணத்துப்பள்ளி அல்லது திருச்சாணத்து மலை என்று அழைக்கப்பட்ட இந்த ஊா், திகம்பர சமண மதத் துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்தான், இந்த சிதறால் மலை குடைவரைக் கோவில்.

    இதய வடிவில் குளம்

    இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் உள்ளேயும், வெளியேயும் சமண மதம் தோன்றவும், வளரவும் காரணமாக இருந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் முதலாம் மகேந்திரவா்மனின் உதவியால் சமண மதம் வளா்ந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் இந்த குகைக்கோவில், பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது.

    இந்த சிதறால் மலை 'சொக்கன் தூங்கி மலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதறால் குகை, அனைத்து தரப்பினரையும் கவரும் அழகிடமாகத் திகழ்கிறது. இங்கு 9-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.

    கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மகாவீரர் சிலை, அம்பிகா இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் காட்சி, பறக்கும் வித்யாதாரர் போன்ற சிற்பங்கள் அவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிற்பங்களுக்கு கீழ் உள்ள ஒரு சிறு குகையில், கல்லில் வடிக்கப்பட்ட 5 தலை நாகர் சிலையும், பார்ச்சுவநாதர் உருவமும், பத்மாவதி உருவமும் உள்ளது.

    ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதைச் செதுக்கியவர்களின் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள், உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    சிதறால் மலையில் இதய வடிவில் அமைந்த குளம் ஒன்று, அந்த இடத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது. சமணத் துறவிகளால் இயற்கையான முறையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள குளம் இதுவாகும்.

    ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறையில், இயற்கையாக அமைந்த குகைக்குள் பகவதி கோவில் அமைந்திருக்கிறது. குகை மேற்குப் பார்த்து உள்ளது. திருச்சாணத்து மலையில் காணப்படும் தற்போதைய பகவதி கோவில், ஒரு காலத்தில் தென்னாட்டில் வாழ்ந்த சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக திகழ்ந்துள்ளது.

    இங்கு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளி அல்லது சமணப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டதாகவும், அதில் பல நூறு மாணவர்கள் படித்ததாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற மகாராணி சொத்துகளை அளித்தது பற்றியும், தமிழ்-பிராமி மொழியில் கல்வெட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மறைந்த பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த சமயத்தில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவரிடம், அந்த நாட்டு தலைவர் சுவன்லாய், திருச்சாணத்து மலையைப் பற்றி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த சமணக் கோவிலாக சிதறால் கோவில் இருந்திருக்கிறது.

    அதன்பிறகு நேருவின் உத்தரவுப்படி, இன்று அந்தக் கோவில் மத்திய தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கி.பி. 8-ம் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியால் இந்தியாவில், குறிப்பாக தென் பகுதிகளில் சமண, புத்த மதங்கள் வீழ்ச்சியடைந்தன. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப்பின் பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றிக் கிடந்த இந்தக் கோவில், இரண்டாம் ராஜராஜன் காலத்தில்தான் சற்று புதுப்பொலிவு அடைந்திருக்கிறது. பின்னர் பத்மாவதி சிலை, பகவதி சிலையாக மாற்றப்பட்டுள்ளது.

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில், சிதறால் குகையில் `சிதறாலம்மா' என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    • வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழா.
    • நாட்டார்கள் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையாக கொண்டு சுற்றி உள்ள 58 கிராமங்கள் இணைந்து வெள்ளலூர் நாடு என பல நூறு ஆண்டுகளாக அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளலூர்நாடு வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி என 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் மூண்டவாசி, வேங்கைப்புலி, சமட்டி, நைக்கான், சாவடைதாங்கி, வெக்காளி, சலிப்புளி, திருமான், செம்புலி, நண்டன்கோப்பன், பூலான் மலவராயன் என 11 கரைகளாக மக்கள் வாழ்கின்றனர்.

    ஆண்டுதோறும் இங்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி வெள்ளலூர் கருங்கல் மந்தையில் நாட்டார்கள் அனைவரும் கூடி வெற்றிலைப்பிரி விழா கொண்டாடுவது வழக்கம். அதாவது வீடுதோறும் வெற்றிலைகளை வழங்கி அதை வைத்து வழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்குவதே இந்த விழாவாகும்.

    அதன்படி நேற்று வெற்றிலைப்பிரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கருங்கல் மந்தை முன்பு நாட்டார்கள் வழிபாடு செய்தனர். பின் அருகில் உள்ள சுனை பாறையில் தமிழ் எழுத்து ப வடிவில் அம்பலகாரர்களும், இளங்கச்சிகளும், பொதுமக்களும் அமர்ந்தனர்.

    குவித்து வைக்கப்பட்ட வெற்றிலை கட்டுகளை பிரித்து முதலில் விவசாய பணிகளில் முக்கிய உதவிகள் செய்பவர்களுக்கு வெற்றிலைகள் வழங்கப்பட்டன. பின்னர் பாரம்பரிய வழக்கப்படி 11 கரையினருக்கும், 5 மாகாணத்திற்கும் வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டு அந்த வெற்றிலைகள் ஆங்காங்கே தனித்தனியாக 56 கிராமத்தினர்களும் வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.

    ஒவ்வொரு குடும்பத்தினரும் அந்த வெற்றிலைகளை தங்களுடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்கி கலப்பை, மண்வெட்டி, நெல் அளக்க பயன்படும் மரக்கால், கடப்பாரை ஆகியவற்றின் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்ட இயற்கை உரங்களை எடுத்து அவரவர்களின் வயல்களில் கொட்டி நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். இவ்வாறு செய்வதால் ஆண்டுதோறும் மழை பெய்து, செல்வம் செழித்து விவசாயம் நன்றாக நடைபெறும் என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கை ஆகும்.

    • சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 25-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.

    திருவையாறு:

    திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தேரோட்டம்

    விழாவில் வருகிற 18-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

    22-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர்வீதி உலா வருகிறது. அப்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    சப்தஸ்தான பெருவிழா

    விழாவில் 25-ந்தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    26-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குகளுடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

    விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 16 நாட்களுக்குள் கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.
    • கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும்.

    இறந்தவருக்கான கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாள் கசப்புத்தலை நாள் என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் சொல்வது வழக்கம். இந்த நாளை சுபஸ்வீகரண நாள் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது, ஒருவர் இறந்தவுடன் அவரது வாரிசுகளும், பங்காளிகளும் பத்துநாள் தீட்டு என்ற பெயரில் தலையில் எண்ணெய் தடவாது, நெற்றியில் மங்கல சின்னங்களை அணியாது இறந்தவரின் நினைவாகவே இருப்பார்கள்.

    இந்த நாட்களில் உணவுப் பழக்கத்திலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பத்து இரவுகள் முழுமையாக கடந்த பின்னர் அவரவருக்கு உரிய சம்பிரதாயப்படி 11 முதல் 16 நாட்களுக்கு உள்ளாக கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.

    கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாளில் இருந்து இறந்தவரின் வாரிசுகளும், பங்காளிகளும் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மற்ற வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுபஸ்வீகரணம் என்ற நிகழ்வினைச் செய்வார்கள். அதாவது, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, ருசிமிகுந்த நல்ல உணவுகளை உட்கொண்டு புத்துணர்ச்சியோடு வழக்கமான பணியில் ஈடுபடுவர்.

    தீட்டு காப்பவர்களின் தலை காய்ந்துபோய் வறட்டு நிலையில் இருக்கும் என்பதால் இந்த நாளில் நன்றாக எண்ணெய் தேய்த்து தலைமுடியினை கசக்கிக் குளித்து பார்ப்பவர்களின் கண்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நாளை கசப்புத்தலை நாள் என்று அழைத்தார்கள். கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.

    அதாவது, எவ்வாறு வைகுண்ட ஏகாதசியின்போது விரதம் இருந்து மறுநாள் துவாதசி நாளில் 21 வகையான காய்கறிகளுடன் உணவினை உட்கொள்கிறோமோ, அதேபோல விதவிதமான காய்கறிகளை அந்த நாளில் உண்டு மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி வைத்தார்கள்.

    ஆனால், இந்த சொல்வழக்கு காலப்போக்கில் மருவி, கசாப்புக்கடையில் தலைக்கறி எடுக்க வேண்டும் என்பதால் இந்த நாளுக்கு கசப்புத்தலை என்று பெயர் என்றும், இந்த நாளில் கட்டாயம் அசைவ உணவினை சாப்பிட வேண்டும் என்றும் ஒரு சிலர் மாற்றுக் கருத்தினை பரப்பி வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று.

    கசப்புத்தலை நாளில் கட்டாயம் கறி என்று சொல்லப்படும் அசைவ உணவினைச் சாப்பிட வேண்டும் என்று நம் பெரியவர்கள் யாரும் விதிமுறையை வகுக்கவில்லை. சுபஸ்வீகரணம் என்று சாஸ்திரம் சொல்வது சுபத்தினை அதாவது, மங்களகரமானவற்றை சுப ஸ்வீகரணம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இறந்தவரைப் பற்றிய துக்க நினைவுகளை மறந்து, அந்தநாள் முதல் வழக்கம்போல் உலக வாழ்வினில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கசப்புத்தலை அல்லது சுபஸ்வீகரண நாள் ஆகும். அதனை விடுத்து கசப்புத்தலை நாளில் அசைவ விருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வது அபத்தமான வாதம்.

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    ×