search icon
என் மலர்tooltip icon

    திருப்பாவை

    உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன், எனத்தொடங்கும் திருப்பாவை பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
    கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
    பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்;
    செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள் :
     
    "நந்தகோபலன் மருமகளே! நப்பின்னையே! கதவைத் திற" என நப்பின்னையிடம் வேண்டும் பாடல்.
     
    நப்பின்னையே! மதங்கொண்ட யானைகளை, சர்வசாதாரணமாகத் தள்ளக் கூடியவர்; (ஏராளமான யானைகளைக் கட்டி வாழக் கூடியவர் என்பதும் உண்டு) எதிரிகளைக் கண்டு பயப்படாத தோள் ஆற்றலை உடையவர்; நந்த கோபர்.

    அப்படிப்பட்ட நந்தகோபரின் மருமகளே! வாசம் கமழும் கூந்தலைக் கொண்டவளே! கதவைத்திற. இதோபார், கேள். சேவல்கள் எல்லாத் திசைகளிலும் கூவுகின்றன. அந்த அழைப்பைக் கேளாயோ? குயிலிணங்கள் கூவுகின்றன. அதுவும் கேட்கவில்லையா? பொழுது விடிந்து விட்டது. பந்தை அணைத்தபடி படுத்திருப்பவளே! உன் கணவனான கண்ணனை போற்றிப் பாட வந்திருக்கிறோம். வளையல்கள் சப்தமிட, தாமரை மலர் போன்ற உன் கைகளால் கதவைத் திற. வா. 
     
    இப்பாடலின் பெருமை: ஸ்ரீ இராமானுஜர், திருப்பாவையைப் பாடிய படியே பிக்‌ஷைக்குப் போவது வழக்கம். ஒரு நாள் அவர் தன் குருநாதர். பெரியநம்பிகள் திருமாளிகைக்கு, பிக்‌ஷைக்குப் போன போது, இப்பாடலைப் பாடினார்.
     
    பெரிய நம்பியின் திருமகளான அத்துழாய் என்னும் பெண் ஒடிவந்து கதவைத் திறந்தாள். அப்போது இராமானுஜர் 'செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்மாவாய்' என்னும் வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்.

    கதவைத் திறந்த அத்துழாயைக் கண்ட ஸ்ரீராமானுஜர், அவளை நப்பின்னையாகவே நினைத்து வணங்கினார். அத்துழாய் உள்ளே ஓடிப்போய், "அப்பா! ஸ்ரீராமானுஜர் என்னைக் கண்டு, மயக்கமடைந்து விட்டார்" என்றார். பெரியநம்பிகளோ", அவர் வந்து மதகளிறு என்னும் பாசுரத்தைப் பாடியிருப்பார்" என்றார். ஸ்ரீராமானுஜரைப் போன்ற மகான்களையே சொக்க வைத்த பாடல் இது.

    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
    கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
    அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்;
    செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
     
    பொருள் :
     
    நந்தகோபாலர், யசோதை, பலராமன் ஆகியவர்களை எழுப்பி கண்ணனையும் எழுப்பும் பாடல்.
     
    நந்தகோபாலா! ஆடைகளையே, சோற்றையே தர்மம் செய்கின்ற எம்பெருமானே! எழுந்திரு.
     
    யசோதையே! எம்பெருமாட்டியே! பூங்கொம்பு போன்ற எங்களுக்கெல்லாம், குலத்துக்கு உண்டான மங்கள தீபம் போன்றவளே எழுந்திரு.
     
    திருவடியால் கண்ணா! திரிவிக்ரமனாகி ஆகாயத்தையும், பூமியையும் அளந்த சுவாமியே! எழுந்திரு.
     
    பலராமா! தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்ட வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடையவனே! உன் தம்பியான கண்ணனும், நீயும் துயில் நீங்கி எழுவீராக.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
    கோவில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
    ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
    வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

    நாங்கள் போற்றி வழிபடும் இறைவன், நந்த கோபாலனின் திருக்கோவிலை காக்கின்ற காவலனே! இறைவன் புகழ் எட்டு திக்கும் பரப்பும் வண்ணம், உயரத்தில் பறக்கின்ற, கொடி விளங்கும், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்ட வாயிலைக் காப்பவனே! மணிகள் பதிக்கப்பட்ட திருக்கதவை திறப்பாயாக! 

    ஆயர்குடி சிறுமிகளுக்கு விரும்பி வேண்டி நிறைந்த செல்வங்களை கொடுப்பதாக, கிருஷ்ணன் நேற்றைய தினம் வாக்கு அளித்துள்ளான். அவனை துயில் எழுந்தருளுமாறு கூறி திருப்பள்ளியெழுச்சி பாட வந்துள்ளோம் நாங்கள். அதனால் மேன்மை பொருந்திய திருக்கதவினைத்திறப்பாயாக! 
     
    திருக்கோவில் வாயில் காப்போனே, கதவினை திறந்துவிட்டால் நாங்கள் உள்ளே சென்று இறைவனைப்பாடி, துயில் எழுப்பி, அவன் வழங்கும் செல்வத்தை பெற்று இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வோம்.
    'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ?' எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ?'
    'சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்'
    'வல்லை உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!'
    'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'
    'ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை?'
    'எல்லாரும் போந்தாரோ?' போந்தார், போந்தெண்ணிக்கொள்;
    வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய். 
     
    பொருள்: ''ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! ''நாங்கள் அழைத்தும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ''இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள். 

    தோழிகள், ''உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.'' என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ''சரி..சரி... நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,'' என்கிறாள்.

    ''அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?'' என்று கடிந்து கொள்கிறார்கள்.

    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    பொருள் :
     
    "உங்களையெல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்ன பெண், அதை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளை எழுப்பும் பாடல்.
     
    இ‌னிமையாகப் பேசக்கூடிய நாக்கைக் கொண்டவளே! "உங்களை எல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்னாய். ஆனால், அதைச் செயலில் காட்ட மறந்துவிட்டாய். அத்துடன் அதைப்பற்றி வெட்கப்படவும் இல்லை. பெண்ணே! எழுந்திரு.
     
    இதோ பார். உங்கள் புறங்கடையில் செங்கழு நீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன. (காலைப் பொழுதில் குவிந்து கொள்ளும்) ஆம்பல் பூக்கள் குவிந்து (மூடிக்) கொண்டுவிட்டன. காவி உடை அணிந்தவர்களும், தூய்மையான பற்களை உடையவர்களுமான துறவிகள் அவர்களது திருக்கோவிலில், சங்கை முழக்குவதற்காகப் போகின்றார்கள்.
     
    சங்கு, சக்கரம் முதலியவைகளைக் கொண்ட பரந்த திருக்கரங்களை உடையவனும், தாமரை போன்ற திருக்கண்களை உடையவனுமான கண்ணனைப் பாடு.
    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
    கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய் 
    பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார் 
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று 
    புள்ளும் சிலம்பினகாண்; போது அரிக் கண்ணினாய் 
    குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே 
    பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ 
    நன்னாளால் கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!

    பொருள்: நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர். விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!
    கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
    நினைத்து முலை வழியே நின்று பால் சோர 
    நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
    பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி 
    சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் 
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
    அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்

    விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்புகிறார்களாம் இந்தப் பாடலில். பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. 

    இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் உறங்கிக்கொ ண்டிருக்கின்றாய். 
    கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
    குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
    புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

    பொருள் :
     
    குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாடல் இது.
     
    கன்றுகளுடன் கூடியவை; இளமை மாறாமல் இருப்பவை; இப்படிப்பட்ட பசுக் கூட்டங்கள் பலவற்றைக் கறந்த கோபாலர்கள், தங்கள் பகைவர்களின் வலிமை அழியும்படியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று போர் செய்வார்கள். அப்படிப்பட்ட கோபாலர்களின் குலத்தில் தோன்றிய பொற்கொடியைப் போன்றவளே!
     
    காட்டில் வாழும் மயிலைப் போன்ற சாயல் கொண்டவளே! வீதியில் நின்று இறைவன் புகழைப்பாட வேண்டிய நாங்கள், இப்போது உன் வீட்டின் முன் வாயிலில் வந்து பாடிக்கொண்டிருக்கிறோம். கார்மேகத்தைப் போல வடிவழகும், கருணையும் கொண்ட கண்ணனது திருநாமங்களைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.
     
    ஆனால் நீயோ-உன் உடம்பைக்கூட அசைக்க மாட்டேன் என்கிறாய், வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன் என்கிறாய். செல்வமும், உத்தமமான குணங்களும் வாய்க்கப்பெற்ற நீ, எதை நினைத்து இப்படித் தூங்கிக் கொண்டிருக்கின்றாய். இப்படித் தூங்கலாமா? எழுந்து வா.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
    நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுடொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
    தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
     
    பொருள்:
     
    முற்பிறவியில் எப்பெருமான் நாரயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணெ! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமனம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.
    தூமணி மாடத்துச் சுற்றம் விளக்கெரியத் எனத்தொடங்கும் திருப்பாவை பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    தூமணி மாடத்துச் சுற்றம் விளக்கெரியத்
    தூபங் கமழத் துயிலணைமேற் கண்வளரும்
     மாமான் மகளே! மணிக்கதவத் தாள்திறவாய்
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
    ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

    தூய ஒளிபொருந்திய மாணிக்கங்களால் இழைக்கப்பட்ட மாடம், அதனை சுற்றிலும் ஒளி விளக்குகள் எரிகின்றன. மணம் வீசும் புகை கமழ்கிறது. அங்கே படுக்கையில் உறங்கிக்கொண்டு இருக்கிற மாமன் மகளே, வீட்டின் வாசல் கதவைத் திறப்பாயாக! மாமியாரே, உன் மகள் ஊமையோ? செவிடோ, சோம்பல் கொண்டு உறங்குகிறாளா? அவளை எழுப்ப மாட்டீர்களா? நாராயணனைப்பாடுவதால் மயக்கம் கொண்டு தூங்குகிறாளா? அவளை எழுப்பி விட்டால், அவளோடு சேர்ந்து பல நாமங்கள் கூறி, பரந்தாமனை வழிபடுவோம்.
    கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு என தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
    கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
    பாவாய்! எழுந்திராய் ; பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
    ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

    பொருள் :
     
    பொழுதுவிடிந்ததற்கு உண்டான அடையாளங்களைச் சொல்லி, எழுந்த பின் செய்ய வேண்டியனவைகளைச் சொல்லி, அதனால் உண்டாகும் பயன்களைச் சொல்லி, பெண் ஒருத்தியை எழுப்புவதாக அமைந்த பாடல். கீழ்வானம் வெளுத்துவிட்டது. பனிப்புல் மேய்வதற்காக, எருமை மாடுகள் நான்கு திசைகளிலும் பரவின. நீயே பார்.

    நோன்பிற்காக நீராடக் கிளம்பிய பெண்களைத் தடுத்து நிறுத்தி, உன்னைக் கூப்பிடுவதற்காக நாங்கள் வந்து நிற்கின்றோம். கண்ணனுக்கு மிக நெருங்கியவளான நீ தூங்கிக் கொண்டிருக்கலாமா? எழுந்திரு.

    குதிரை வடிவான அசுரனின் வாயைப் பிளந்தவனும், மல்லர்களை அழித்தவனும், தேவாதிதேவனும்-ஆகிய பெருமாளை நெருங்கி, வணங்கினால், "ஆஹா! இவர்களைத் தேடிப் போய் நாம் அருள் செய்ய வேண்டியதிருக்க, நம்மைத் தேடி இவர்கள் வரும்படியாகச் செய்துவிட்டோமே" என்று சுவாமி இறங்கி, நமக்கு அருள் புரிவான். அப்படிப்பட்ட பெருமாளை நாடிச் செல்லுவோம். எழுந்திரு வா.
    கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து என்று தொடங்கும் திருப்பாவை பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
    பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
    காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
    வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
    ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
    நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
    தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

    விளக்கம்: சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள். ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும்.

    இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம்துணையுடன் கீச்... கீச்...ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம். திருஆய்பாடியில் ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே... தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர்கடைவதை தடுத்து விடுவானே.. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைவதால் அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது.
    ×