search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம்.
    • உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம். பூவுலகில் மனிதனாய் அவதரித்து, தர்மத்தின் பாதையில் நடந்து, ஓர் உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி. பங்குனி மாத வளர்பிறை நவமியே ராமநவமியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம பகவான் நவமியை யொட்டி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    பகவானின் அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் ராம அவதாரமாகும். பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமர் அவதரித்த தினம் ஆகும். ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராமநவமி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்களுக்கு விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமருக்கு கோயில்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். அதைத் தரிசித்தால் பாவங்கள் விலகும். மேலும், பல கோயில்களில், ராமபஜனைகள் நடைபெறும்.

    ஸ்ரீராம நவமி நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம். வீட்டில் ஸ்ரீராமநவமி தினத்தில் வாசல், பூஜை அறை சுத்தம் செய்து இறைவனுக்கு விளக்கேற்றி புதிய மலர்கள் அணிவிக்க வேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் பட்டாபிஷேக படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    சுவாமிக்கு நிவேதனமாக நீர்மோர், பானகம், பாயசம் வைத்து வழிபடலாம். வழிபாடு முடிந்த பின் பானகத்தை அனைவருக்கும் கொடுத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் என்று பொருள்.
    • மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர்.

    அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி) என்று பொருள். சோகத்தை நீக்கி, மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் இந்நாளுக்கு அசோகாஷ்டமி என்று பெயர்.

    சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்சோலையிலே சிறைவைத்தான் ராவணன். குளிர்ந்த அந்த மலர்ச் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச் சுட்டது. சீதையின் இந்த சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளை சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம்.

    அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்த பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது, அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோகமரங்களை நோக்கி, "என்ன வரம் வேண்டும்?" என கேட்டார். "அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது'' எனக் கேட்டது.

    சீதாதேவியும் "மருதாணி மரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக்கொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.

    ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே "அசோகாஷ்டமி'' நாளாகும். பங்குனி மாத அமாவாசையில் இந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்குத் துன்பத்தை போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.

    கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி மருதாணி அரைத்து பூசிக் கொள்ளலாம். மருதாணி உடல் பிணிகளையும் தீர்க்கும், அப்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

    த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ

    பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.

    • கேரள மாநிலம் `கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
    • இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது.

    இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய கேரள மாநிலம் `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இன்றைய குமரி மாவட்டமும், கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக, அதாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. எனவே குமரி மாவட்டமும் இயற்கை பேரழகில் காண்போரை சொக்க வைக்கிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அந்த வரிசையில் சமணர்களின் பெருமைகளைச் சொல்லும் சிதறால் மலைக்கோவிலும் ஒன்று.

    இங்குள்ள திருச்சாணத்து மலை மீது அமைந்திருக்கும் குடைவரைக் கோவில், பல்வேறு வரலாற்று அதிசயங்களைத் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது.

     சமணத் துறவிகள்

    இந்தியாவில் தோன்றிய பல சமயங்களில் சமணமும் ஒன்று. இந்த சமயத்தை பின்பற்றியவர்கள் 'சமணர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். எதிலும் பற்று இல்லாத துறவற வாழ்க்கையை வாழ்வது சமண மதக் கொள்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் சிதறால் மலைப்பகுதியில் வசித்து வந்ததாக சான்றுகள் சொல்கின்றன.

    இந்த சிதறால் மலைக்கிராமம், குமரி மற்றும் கேரள எல்லையோரம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. குமரியின் 2-வது பெரிய நகராக கருதப்படும் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் இருக்கிறது.

    தொலைவில் இருந்து பார்க்கும்போது மலை உச்சியில் ஒரு சிறிய புள்ளியைப்போன்று இந்த சிதறால் மலைக் கோவில் மிக அழகாகத் தெரியும். சுற்றிலும் உயர்ந்தோங்கிய பாறைக்கூட்டங்கள், மலையில் இருந்து பார்க்கும் திசை அனைத்தும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாய், பூமிப் பந்து பசுமைப் பட்டாடையை உடுத்தியது போன்று காட்சி அளிக்கிறது.

    மலை அடிவாரத்தில் இருந்து அரை கி.மீ. தூரம் வரை படிகள் வழியே மேலே நடந்து சென்றால் குகைக் கோவிலை அடைந்து விடலாம். முன்பு திருச்சாணத்துப்பள்ளி அல்லது திருச்சாணத்து மலை என்று அழைக்கப்பட்ட இந்த ஊா், திகம்பர சமண மதத் துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்தான், இந்த சிதறால் மலை குடைவரைக் கோவில்.

    இதய வடிவில் குளம்

    இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் உள்ளேயும், வெளியேயும் சமண மதம் தோன்றவும், வளரவும் காரணமாக இருந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் முதலாம் மகேந்திரவா்மனின் உதவியால் சமண மதம் வளா்ந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் இந்த குகைக்கோவில், பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது.

    இந்த சிதறால் மலை 'சொக்கன் தூங்கி மலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதறால் குகை, அனைத்து தரப்பினரையும் கவரும் அழகிடமாகத் திகழ்கிறது. இங்கு 9-ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.

    கோவில் சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மகாவீரர் சிலை, அம்பிகா இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் காட்சி, பறக்கும் வித்யாதாரர் போன்ற சிற்பங்கள் அவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிற்பங்களுக்கு கீழ் உள்ள ஒரு சிறு குகையில், கல்லில் வடிக்கப்பட்ட 5 தலை நாகர் சிலையும், பார்ச்சுவநாதர் உருவமும், பத்மாவதி உருவமும் உள்ளது.

    ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதைச் செதுக்கியவர்களின் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள், உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    சிதறால் மலையில் இதய வடிவில் அமைந்த குளம் ஒன்று, அந்த இடத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது. சமணத் துறவிகளால் இயற்கையான முறையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள குளம் இதுவாகும்.

    ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறையில், இயற்கையாக அமைந்த குகைக்குள் பகவதி கோவில் அமைந்திருக்கிறது. குகை மேற்குப் பார்த்து உள்ளது. திருச்சாணத்து மலையில் காணப்படும் தற்போதைய பகவதி கோவில், ஒரு காலத்தில் தென்னாட்டில் வாழ்ந்த சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக திகழ்ந்துள்ளது.

    இங்கு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளி அல்லது சமணப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டதாகவும், அதில் பல நூறு மாணவர்கள் படித்ததாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற மகாராணி சொத்துகளை அளித்தது பற்றியும், தமிழ்-பிராமி மொழியில் கல்வெட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மறைந்த பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த சமயத்தில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவரிடம், அந்த நாட்டு தலைவர் சுவன்லாய், திருச்சாணத்து மலையைப் பற்றி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த சமணக் கோவிலாக சிதறால் கோவில் இருந்திருக்கிறது.

    அதன்பிறகு நேருவின் உத்தரவுப்படி, இன்று அந்தக் கோவில் மத்திய தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கி.பி. 8-ம் நூற்றாண்டில் சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியால் இந்தியாவில், குறிப்பாக தென் பகுதிகளில் சமண, புத்த மதங்கள் வீழ்ச்சியடைந்தன. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப்பின் பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றிக் கிடந்த இந்தக் கோவில், இரண்டாம் ராஜராஜன் காலத்தில்தான் சற்று புதுப்பொலிவு அடைந்திருக்கிறது. பின்னர் பத்மாவதி சிலை, பகவதி சிலையாக மாற்றப்பட்டுள்ளது.

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில், சிதறால் குகையில் `சிதறாலம்மா' என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    • சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 25-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.

    திருவையாறு:

    திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தேரோட்டம்

    விழாவில் வருகிற 18-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.

    22-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர்வீதி உலா வருகிறது. அப்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    சப்தஸ்தான பெருவிழா

    விழாவில் 25-ந்தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    26-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குகளுடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

    விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 16 நாட்களுக்குள் கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.
    • கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும்.

    இறந்தவருக்கான கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாள் கசப்புத்தலை நாள் என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் சொல்வது வழக்கம். இந்த நாளை சுபஸ்வீகரண நாள் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது, ஒருவர் இறந்தவுடன் அவரது வாரிசுகளும், பங்காளிகளும் பத்துநாள் தீட்டு என்ற பெயரில் தலையில் எண்ணெய் தடவாது, நெற்றியில் மங்கல சின்னங்களை அணியாது இறந்தவரின் நினைவாகவே இருப்பார்கள்.

    இந்த நாட்களில் உணவுப் பழக்கத்திலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பத்து இரவுகள் முழுமையாக கடந்த பின்னர் அவரவருக்கு உரிய சம்பிரதாயப்படி 11 முதல் 16 நாட்களுக்கு உள்ளாக கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.

    கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாளில் இருந்து இறந்தவரின் வாரிசுகளும், பங்காளிகளும் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மற்ற வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுபஸ்வீகரணம் என்ற நிகழ்வினைச் செய்வார்கள். அதாவது, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, ருசிமிகுந்த நல்ல உணவுகளை உட்கொண்டு புத்துணர்ச்சியோடு வழக்கமான பணியில் ஈடுபடுவர்.

    தீட்டு காப்பவர்களின் தலை காய்ந்துபோய் வறட்டு நிலையில் இருக்கும் என்பதால் இந்த நாளில் நன்றாக எண்ணெய் தேய்த்து தலைமுடியினை கசக்கிக் குளித்து பார்ப்பவர்களின் கண்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நாளை கசப்புத்தலை நாள் என்று அழைத்தார்கள். கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.

    அதாவது, எவ்வாறு வைகுண்ட ஏகாதசியின்போது விரதம் இருந்து மறுநாள் துவாதசி நாளில் 21 வகையான காய்கறிகளுடன் உணவினை உட்கொள்கிறோமோ, அதேபோல விதவிதமான காய்கறிகளை அந்த நாளில் உண்டு மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி வைத்தார்கள்.

    ஆனால், இந்த சொல்வழக்கு காலப்போக்கில் மருவி, கசாப்புக்கடையில் தலைக்கறி எடுக்க வேண்டும் என்பதால் இந்த நாளுக்கு கசப்புத்தலை என்று பெயர் என்றும், இந்த நாளில் கட்டாயம் அசைவ உணவினை சாப்பிட வேண்டும் என்றும் ஒரு சிலர் மாற்றுக் கருத்தினை பரப்பி வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று.

    கசப்புத்தலை நாளில் கட்டாயம் கறி என்று சொல்லப்படும் அசைவ உணவினைச் சாப்பிட வேண்டும் என்று நம் பெரியவர்கள் யாரும் விதிமுறையை வகுக்கவில்லை. சுபஸ்வீகரணம் என்று சாஸ்திரம் சொல்வது சுபத்தினை அதாவது, மங்களகரமானவற்றை சுப ஸ்வீகரணம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இறந்தவரைப் பற்றிய துக்க நினைவுகளை மறந்து, அந்தநாள் முதல் வழக்கம்போல் உலக வாழ்வினில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கசப்புத்தலை அல்லது சுபஸ்வீகரண நாள் ஆகும். அதனை விடுத்து கசப்புத்தலை நாளில் அசைவ விருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வது அபத்தமான வாதம்.

    • சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு நவாப் பஞ்சாங்கம், சமஸ்தான அரண்மனை பஞ்சாங்கம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு பஞ்சாங்கத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ந்தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவிலின் உதயகுமார் குருக்கள் வாசித்தார். பஞ்சாங்கத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

    தங்கம் விலை ஏற்றம்

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வாரி வழங்க நேரும். உலக அளவில் இந்தியா முதலிடத்தில் பதவி வகிக்கும். புற்று நோய்க்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து சாதனை படைக்கும். இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் நிகழும். குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். சொத்து பிரச்சினை அதிகம் ஏற்படும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    பணத்தேவைகள் அதிகரிப்பதுடன் ஆன்லைன் வியாபாரமும் பெருகும். விலைவாசி ஏற்றம், இறங்குமுகமாக இருக்கும். தங்கம், வெள்ளி, மஞ்சள் விலை ஏற்றம், இறக்கமாக இருக்கும்.

    விளையாட்டுத்துறையில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க நேரும். போதைப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக புழக்கத்தில் இருக்கும். தவறு செய்பவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்கும். கல்வி கட்டணங்கள் உயரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்விக் கொள்கை மூலம் சுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.

    எல்லைகள் எப்போதும் போர் பதற்றமாக இருக்கும். புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வவ்வால் தொல்லை அதிகமாக இருக்கும். பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். குற்றம் செய்து தலைமறைவாக வாழ்ந்தவர்கள் இச்சமயம் மாட்டிக் கொள்ள நேரும்.

    அரசியல் மாற்றம்

    அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். கட்சி கூட்டணிகள் மாறுபடும். அரசியல்வாதிகள் வழக்குகளில் சிக்கும் நிலை உருவாகலாம். இந்த ஆண்டு புதிதாக இருமல், கண் நோய் அதிகமாக பரவும். இந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும். காட்டில் உள்ள புலி, சிங்கம் உள்ளிட்டவைகளுக்கு உணவு பஞ்சம் இருக்காது. எல்லா உயிரினங்களுக்கும் உண்ண உணவும், இடமும் கிடைக்கும்.

    இந்த ஆண்டு இந்தியா கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். பல புதிய வரிகள் விதிக்க நேரும். விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மஞ்சள் விலை உச்சத்தை தொடும். கல்வி கட்டணம், கம்ப்யூட்டர், தொலை தொடர்பு சாதனங்கள், மின்சார கட்டணம் ஆகியவை விலை உயரும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படலாம்.

    புதிய வரிகளால் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு வெப்பமும், மழையும், குளிர்ச்சியும் அதிகமாக இருக்கும். வெளி மாநிலத்தவர்களால் திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    • 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். காலை 9.30 மணிக்கு அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடாகி கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.

    தீர்த்தவாரி உற்சவம்

    அங்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர் குருக்கள் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவரை எடுத்துச் சென்று திருக்குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு நின்ற பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் புதிய புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன் செட்டியார், பூலான்குறிச்சி சுப.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
    • விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விழா நாட்களிலும், விடுமுறை நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     இந்த நிலையில் சித்திரை மாதம் 1-ம் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     பஞ்சாங்கம் வாசித்தல்

    மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழ் புத்தாண்டையொட்டி நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தனர். மேலும் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை பக்தர்கள் பலர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    ஆரணி

    ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சப்த மாதாக்களுக்கும், அரியாத்தம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல புதுக்காமூர் பகுதியில் உள்ள குழந்தை வரம் அருளும் பெரியநாயகி சமேத புத்திர காமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வரதராஜ பெருமாள் கோவில், பாப்பாத்தி அம்மன் கோவில், ஆண்டாள் அம்மன் கோவில், கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பூமிநாதர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மேலும் நகராட்சி அருகே உள்ள வீரஆஞ்சநேயர் கோவில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அகல் தீபம் ஏற்றி லட்சதீப வழிபாடு செய்தனர்.

    போளூர்

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போளூரில் உள்ள கைலாசநாதர் கோவில், சோமநாத ஈஸ்வரர் கோவில், நற்குன்று பாலமுருகன் கோவில், குன்னத்தூர் தண்டபாணி முருகர் கோவில் ஆகிய கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு ஆகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு, வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகை எதிரொலியாக படிப்பாதை, யானைப்பாதை, சன்னதி வீதி, கிரிவீதிகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்திலும் கூட்டம் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    தமிழப் புத்தாண்டையொட்டி முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமான் சந்நியாசி அலங்காரத்திலும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்திலும் அருள்பாலித்தார். பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் செய்யப்பட்டது.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    பின்னர் உச்சிகால அபிஷேகமும், 10.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு திருச்செந்தூரில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
    • வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினந்தோறும் வள்ளி தெய்வ யானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை என இருவேளைகளிலும் புலி வாகனம், சிங்க வாகனம், வெள்ளி நாக வாகனம், ஆட்டுக்கிடாவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்திரை பிரம்மோற்சவ தொடக்க விழாவையொட்டி இன்று அதிகாலையில் மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலவருக்கு தங்க கவசம், பச்சைக்கல் மரகத மாலை. அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவிலில் இருந்து 1008 பால்குடங்கள் எடுத்து வந்தனர். இதில் கோவில் இணைஆணையர் ரமணி,அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் உஷாரவி,மோகனன். சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது.
    • காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது. `விருப்பன் திருநாள்' என்றும் இந்தத் திருவிழா கூறப்படுகிறது. ஒரு வரலாற்று சம்பவத்தினால் இப்பெயர் வந்துள்ளது. தென்னகத்தை முற்றுகையிட்ட மாலிக்கபூர், திருவரங்கத்தில் இருந்து பெருமாளை 1310-ம் ஆண்டில் எடுத்துச் சென்றார். பின்னர் 1371-ம் ஆண்டில் விருப்பண்ண உடையார் என்னும் நாயக்கர் வம்சத்து மன்னரால் அந்த பெருமாள் மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

     60 ஆண்டுகள் கோவிலில் இல்லாமல் இருந்த பெருமாள் மீண்டும் வந்தவுடன், சித்திரை மாதத்தில் அந்த பெருமாளை தேரில் வைத்து திருவீதி உலா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, மன்னர் விருப்பண்ண உடையார் செய்தார். அதனால் இந்த சித்திரை தேர் திருவிழா `விருப்பன் திருநாள்' என்று பெயர் பெற்றது. சித்திரை மாதம் பவுர்ணமி அன்றுதான் திருவரங்கம் காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

     புராணத்தில் முதலை வாயில் சிக்கிய யானை, 'ஆதிமூலமே' என்று பெருமாளை அலறி அழைக்க, பெருமாள் அந்த யானையை முதலை வாயில் இருந்து மீட்ட புராண கதையின் நினைவாக கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி இன்றும் நடந்து வருகிறது. கோவில் யானையை காவிரி ஆற்றிற்கு அழைத்து வந்து, வெள்ளியாலான முதலை கவ்வுவது போலவும், யானைக்கு நம்பெருமாள் மோட்சம் அளிப்பது போலவும் அந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்படும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை கட்டிக்கொண்டும், பால்குடம் எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும், சாரை சாரையாக தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஈரத்துணியுடன் அருள் வந்து, ஆர்ப்பரித்து சென்று, மாரியம்மனை தேரில் கண்டு வழிபடும் பெரும் விழா இதுவாகும்.

    மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக சமயபுரத்தில் உற்சவ அம்மன் (பஞ்சலோக) திருவுருவம் 2 உள்ளது. சித்திரை தேருக்கு முதல்நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவதற்கு ஒரு உற்சவ அம்பாளும், மறுநாள் திருத்தேரில் பவனி வருவதற்கு ஒரு உற்சவ அம்மன் திருவுருவமும் இருப்பது, சமயபுரத்தில் மட்டுமே.

    இதுபோல் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறும். கோவில்களில் இசை, கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள், சித்திரையில்தான் இரவு முழுவதும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
    • சித்திரை முதல் நாள் இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    கோவிலின் முகப்புத் தோற்றம்

    திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாபவிநாசர் -உலகாம்பிகை கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10-ம் நாளில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

     முன் காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில், சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி-அம்பாளை தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.

    எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன், அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் 'சுவாமி-அம்பாளின் திருமணக்காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமே' என்று அகத்தியர் வருந்தினார்.

    அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன், `இங்கு நடைபெறும் திருமணக் கோலத்தில் பொதிகை மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்தில், சித்திரை மாதப்பிறப்பு நாளில், சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம், தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக் கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.

    சித்திரை 1-ந்தேதி பாபநாசத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது.

    சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு, ஆண்டு தோறும் பாபநாசம் கோவிலில் 10 நாள் உற்சவமாக நடைபெறும். சித்திரை மாத முதல் நாள் அன்று இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    இந்த ஆண்டுக்கான 10 நாள் உற்சவம், கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்வான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி-அம்பாள் இருவரும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

     பாபநாசம் கோவிலில் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அருளியது பற்றி, கல்வெட்டிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ×