search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள்
    X

    தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள்

    தமிழகத்தில் 8 இடங்களில் காட்சி தந்த நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

    இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

    பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள். இவையன்றி இன்னும் பல தலங்களில் நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார். நரசிம்ம ஜெயந்தி நாளில், தன் பக்தனுக்காக நொடிப் பொழுதில் தோன்றி காத்து ரட்சித்த அந்த உலக நாயகனை வணங்கிப் பேறு பெறுவோம்.

    பூவரசங்குப்பம் :

    இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.
    தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கோவில் அலைபேசி எண்: 95851 78444.

    சிங்கிரிக்குடி :

    பிரகலாதன் வேண்டு கோளுக்கிணங்கி, 16 கரங் களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.

    இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

    கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.
    இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்ம உற்சவ விழா 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம். வருகிற 17--ந் தேதி (வெள்ளிக்கிழமை) நரசிம்மர் ஜெயந்தி மற்றும் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடை பெற உள்ளது.

    இதனையட்டி காலை 4 மணி அளவில் விஸ்வ ரூப தரிசனமும், 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று தேரில் அமர்த்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6 மணிக்கு பக்தி கோஷத்துடன் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதி வழியாக கொண்டு செல்கிறார்கள். பின்னர் தேர் நிலையை அடைகிறது. மாலை வரை சாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    6 மணிக்கு நரசிம்மருக்கு மீண்டும் சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். இரவு 9 மணிக்கு நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடை பெற உள்ளது. அதன் பின்னர் கொடிஇறக்கம் செய்யப்படுகிறது.

    கோவில் தொலைபேசி எண்: 04142-224328.

    பரிக்கல் :

    இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.

    யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

    சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

    இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வருகிற 17-ந் தேதி நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையட்டி காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. 9 மணிக்கு சாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    10 மணிக்கு சாமிக்கு வைரகிரீடம் சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.

    மதியம் 1 மணிக்கு நடை சாற்றப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில்நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு சாமி சிம்ம வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு வீதிஉலா நிறைவு பெறுகிறது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் அலைபேசி எண்: 96776 42002.

    சோளிங்கர் :

    சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் சுதாவல்லி, தாயார் அமிர்தவல்லி.

    விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

    சிங்கப்பெருமாள் கோவில் :

    ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    நாமக்கல் :

    திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.

    கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.

    அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    கோவில் அர்ச்சகர் ராஜா பட்டாச் சாரியார் கூறியதாவது:-

    நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையட்டி நாமக்கல் நரசிம்மர் கோவி லில் 17-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூலவர் தரிசனம் கிடையாது.
    உற்சவ மூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்யப்படும். மூலஸ்தான நரசிம்மமூர்த்திக்கு சுமார் 9 மணி அளவில் ஆரம் பித்து மாலை 5.30 மணி வரை நடக்கும் தைலகாப்பு நிகழ்ச்சியில் நல்லெண்ணையால் சுத்தம் செய்து, வேறு புதிய வஸ்திரங்கள் சாத்துப்படி செய்து எம்பெருமானிடத்தில் நித்யபடி உள்ள கவசங்களை தேவஸ்தான பொற்கொல்லர் மூலம் சுத்தம் செய்து, அதை மறுபடியும் சாமியிடம் சமர்ப்பிக்கப்படும். பிரதோஷ நேரமான மாலை 6 மணி அளவில் விஷேசமான தீபாராதனை நடைபெறும்.

    ஜெயந்தி தினத்தில் மாலை 6 மணிக்கு பிறகு சாமியை தரிசிப்பவர்களுக்கு பொருளாதாரத்தினுடைய வளர்ச்சி, தோஷங்கள் நிவர்த்தியாகும். உத்யோகம், வாழ்வியலில் நம்முடைய நேர்மையான கோரிக்கைகளை சாமி அனு கிரகம் செய்து கொடுப்பார்.

    சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக உபாதைகள் தங்களிடம் குறையும். கிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்கள் குறையும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும். எந்தவித பிரார்த்தனைகளும் உடனே அனுகிரகமாக கூடிய தினம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் தொடர்பு எண்:04286-233999

    சிந்தலவாடி :

    ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.

    திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

    அந்திலி :

    நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.
    எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

    திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத் திருக்கிறது அந்திலிதிருத்தலம்.
    Next Story
    ×