search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில்
    X

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில்

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் ஏராளமானோர் சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பஞ்சம் பிழைக்க நிலக்கோட்டை வந்ததாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதி மக்கள் பிளேக் நோய், காலரா, அம்மை போன்ற நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள்.

    இதை அறிந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்த பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம்தான் காரணம் எனக் கருதினார்கள். எனவே அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அப்போது முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் மிகச்சிறிய அளவில் கோவிலை ஏற்படுத்தினார்கள். மேலும் கோவில் அருகே ஒரு தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். அதன் எதிரொலியாக நிலக்கோட்டையில் ஏற்பட்ட நோய் தாக்குதல் விரைவாக குறைந்தன.

    அம்மனின் அருளால்தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் 1912-ம் ஆண்டு அந்தக் கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

    அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் பல்வேறு வேலைப்பாடுகளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து மிகப்பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்தக் கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர், பைரவர், லிங்கோத்பவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளின் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் நேர்த்திக்கடனை சொல்லி வழிபட்டு வருவதும், அதை நிறைவேற்றித்தரும் தெய்வமாக அம்மன் வீற்றிருக்கிறாள் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    கரும்பு தொட்டில் குழந்தை

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து அதை கரும்பு தொட்டில் கட்டி குழந்தையை அதில் வைத்து நிலக்கோட்டை முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள். பின்னர் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    இதையடுத்து தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் ஒப்படைத்து காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கரும்புகள் பெருகிய வண்ணம் இருக்கிறது. இதுகுறித்து கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கூறும்போது, அம்மனின் அருளால் ஆண்டுதோறும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்கள்.

    நோய்களுக்கு அருமருந்தாகும் தீர்த்தம்

    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடை காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய் தீர அம்மனை மனதார வேண்டிக் கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இதுபோல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும் தெரிவித்தனர்.

    மிளகு, உப்பு காணிக்கை


    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பல இடர்பாடுகளும், துன்பங்களும் நீங்குகின்றன. மனிதர்களுக்கு ஏற்படும் பருக்கள், உடலில் தோன்றும் பல தொந்தரவுகள் தீர அம்மனுக்கு மிளகு, உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் திருவிழாவின்போது அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் மிளகு, உப்பு காணிக்கையை கொடிக்கம்பத்தில் செலுத்துவார்கள். இதேபோன்று உடலிலும், மனதிலும் இன்னல்களுக்கு ஆளாகும் போது அதனை சரியாக்க அம்மனை வேண்டி வருவார்கள். இதனை தீர்த்துவைக்கும் அம்மனுக்கு பிடித்த மிளகு, உப்பை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதை அந்தகாலம் முதல் இன்று வரை இப்பகுதி மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

    மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்


    நிலக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவில் பக்தர்களின் அக்னிசட்டி ஊர்வலத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். 
    Next Story
    ×