search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில் - திருச்சி
    X

    அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில் - திருச்சி

    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.
    திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது, அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.

    ஆங்கிலேயர் நம் நாட்டை திருச்சி ஆண்ட போது படைவீரர்கள் தங்கும் பகுதியாக இருந்த இடம்தான் கண்டோண்மெண்ட் பகுதி. அவர்களது முழுமையான ஆளுகையின் கீழ் இருந்த இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தங்களது விருப்ப தெய்வமாக காளிகாபரமேஸ்வரியை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உருமாறியது.

    வடக்கு திசைநோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பழமையானது.

    முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ஆனால் அழகிய நுழைவு வாசல் உள்ளது. இதைக் கடந்ததும் நீண்ட மண்டபம். அதையடுத்து மகாமண்டபம் உள்ளது.

    எதிரே அர்த்தமண்டப நுழைவு வாயிலின் இடதுபுறம் ஜெயன், விஷ்ணு திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் விஜயன், ஆஞ்சநேயர் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார்.

    மகா மண்டபத்தின் வலதுபுறம் காளிகா பரமேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க அன்னையின் சன்னிதியின் முன் சூலம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. பிரகாரத்தின் தென் திசையில் நெடிதுயர்ந்த துளசிமாடம் உள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் சொர்ண கணபதி, நாகராஜா, தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். சுந்தரேஸ்வர், மீனாட்சி இருவர் முன்பும் நந்தியம் பலிபீடமும் இருக்க இருவரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அடுத்து சண்டிகேசுவரர் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறார். அடுத்து ஐய்யப்பன் மண்டபம் உள்ளது. அருள்மிகு முருகன் வள்ளி தெய்வானையுடன் தனிக் கோவில் கொண்டு அருள்கிறார்.

    இக்கோவிலின் தேவக்கோட்டத்தின் வடபுறம் காலைபரவர் தென்திசை நோக்கி இருக்கிறார். முருகன் சன்னிதிக்கு எதிரே மயிலும் பலிபீடமும் உள்ளன. அடுத்து ராஜ கணபதியின் சன்னிதி உள்ளது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தின் வலது புறம் விஷ்ணு துர்க்கை தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன. துர்க்கை எட்டு கைகளுடன் சூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்கு தடைபட்ட திருமணம் நடந்தேறவும் விரைவாக திருமணம் நடக்க பிரார்த்தனை செய்பவர்களும் வெள்ளிக் கிழமை அன்று ராகு கால அர்ச்சனை செய்வதுடன் எலுமிச்சை விளக்கிட்டு வேண்டிக் கொள்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு மாத பவுர்ணமிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்னைக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் கூட்டம் கணிசமாகக் காணப்படும். சித்திரை முதல் நாள் காளிகா பரமேஸ்வரி புறப்பாடும் நடைபெறுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை இங்கு குத்து விளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மார்கழி திருநாட்கள், கார்த்திகை, சிவராத்திரி, பொங்கல், ஆண்டு பிறப்பு போன்ற நாட்களில் இங்கு இறைவன் இறைவிக்கு சிறப்பான பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.

    பக்தர்களிடம் பணம் வசூலிக்க இந்த ஆலயத்தில் மகா உண்டியல்கள் கிடையாது. உபயமாக ஆலயத்திற்கு பொருட்கள் வாங்கித் தருபவர்களின் பெயர்களை அந்தப் பொருட்களின் மீதோ வேறு எங்கேனுமோ காண இயலாது.

    இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர் என இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குணமாக இங்குள்ள கிருஷ்ண பரமாத்மாவை வேண்டிக் கொண்டு ரோகிணி நட்சத்திரத்தில் இறைவனுக்கு பால், தயிர் மற்றும் பழச்சார் அபிஷேகம் செய்தால், அந்த குழந்தைகள் ஓரளவோ அல்லது முற்றிலுமோ குணமடைகின்றனர் என்பது கண்கூடான உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    தங்களது கோரிக்கை நிறைவேறத் தொடங்கியதும் வேண்டியவர்கள் கிருஷ்ணனுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வது இங்கு சர்வ சாதாரணமாகக் காணும் காட்சியாகும்.

    காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்தி ருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு உரியடி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அன்னதானமும் நடைபெறும். பின்னர் கிருஷ்ணர் உலா வருவது வழக்கம்.

    வெண்ணெய் திருடனான பால கிருஷ்ணன் சிறார்களின் குறைகளை இந்த ஆலயத்தில் நிவர்த்தி செய்து வைப்பது கண்கூடான நிஜம்.

    அமைவிடம் :

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது இந்த ஆலயம்.
    Next Story
    ×