search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆற்றின் நடுவில் சுயம்பு ஐயப்பன் கோவில்
    X

    ஆற்றின் நடுவில் சுயம்பு ஐயப்பன் கோவில்

    கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) கோவில்.
    கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) ஆலயம்.

    தல வரலாறு :

    சாம்பரன் எனும் முனிவர் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில், நிலா (பாரதப்புழா) ஆற்றின் நடுவில் இருந்த சிறிய தீவு தென்பட்டது. அந்தத் தீவுக்குச் சென்ற முனிவருக்கு, அதன் அழகும், அமைதியும் பிடித்துப் போனது. முனிவர் அந்த இடத்திலேயே தியானத்தில் அமர்ந்தார்.

    நீண்ட கால தியானத்தில் இருந்த அவரின் முன்பு ஒரு ஒளி வட்டம் தோன்றியது. உடனே அவர், இறைவன் விஷ்ணு தனக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று நினைத்து, இறைவன் விஷ்ணுவை நினைத்துத் தியானத்தில் ஆழ்ந்தார். ஆனால், அவர் நினைத்தது போல், அவருக்கு விஷ்ணு காட்சியளிக்கவில்லை. அவ்விடத்தில் ஒளி வட்டம் அப்படியே இருந்து கொண்டிருந்தது.

    அதன் பிறகு, இறைவன் சிவபெருமான் தமக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று முனிவர் நினைத்தார். அதனால் சிவபெருமானை நினைத்துத் தியானித்தார். ஆனால் சிவபெருமானும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. அதே நேரம் ஒளி வட்டமும் மறையாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், துர்க்கா என்று முனிவர், ஒவ்வொரு தெய்வமாகத் தியானித்தார். அவர் தியானித்த எவரும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ஒளி வட்டம் மட்டும் அப்படியே இருந்தது.

    தன் முன்னேத் தோன்றிய ஒளி வட்டத்தை, முனிவர் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அந்த ஒளி வட்டத்தினுள் சாஸ்தா, அவரது மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் இருப்பது தெரிந்தது. அதனைக் கண்ட முனிவர், சாஸ்தாவை வணங்கினார். அதன் பின்னர் சிறிது நேரத்தில், அந்த ஒளி வட்டம் மறைந்து போனது.

    பின்னர் முனிவர், ஆற்றங்கரையில் இருந்த குட்டிசேரி மணாவைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவரிடம், தான் ஆற்றின் நடுவில் இருந்த தீவில் கண்ட காட்சியைச் சொன்னார். அவ்விடத்தில் சாஸ்தாவுக்குக் கோவில் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்யும்படிச் சொல்லி, சாஸ்தா வழிபாட்டுக்கான விதிமுறைகளையும் அவருக்குச் சொல்லிச் சென்றார். இதையடுத்து நிலா ஆற்றின் நடுவிலிருந்த தீவில் ஆலயம் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    ஆலய அமைப்பு :

    ஆற்றிற்குள் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில், சுயம்புவாக இருக்கும் சாஸ்தா தவிர்த்து, விஷ்ணு, கணபதி, சிவா, பிரபா, துர்க்கா, சத்யகன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, சத்யகன், துர்க்கா, பத்ரகாளி மற்றும் சிவபெருமான் ஆகியோருக்கான சன்னிதியும் உள்ளது. சாஸ்தாவிற்கு வழிபாடு செய்யப்படும் போது, இங்கிருக்கும் அனைத்துத் தெய்வங்களுக்கும் வழிபாடு செய்யப்படுகின்றன.

    இங்குள்ள இறைவனுக்கு சத்தச்சாதம், பனப் பாயசம், நெய் பாயசம் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இத்தல இறைவனுக்கு தூபம், தீபம் காட்டப்படுவதில்லை. வழிபாட்டு நேரத்தில் மணியும் அடிப்பதும் இல்லை.

    ஆலயத்திற்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைக் காலம் மற்றும் வெள்ளக் காலங்களில், இக்கோவிலைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து விடுகிறது. இக்காலங்களில் பூைஜ செய்பவர் மட்டும் படகில் சென்று வழிபாடு செய்து திரும்புகிறார்.

    இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும், தீராத நோயுடையவர்கள் வந்து வழிபட்டால், அவர்களது நோய் நீங்கி, நீண்ட வாழ்வைப் பெறுவர் என்பதும் இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், ஆலயம் வந்து வழிபடுபவர்களுக்கு, சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நல்ல பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.

    ஆலயம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற நாட்களில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை வேளையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், திரிப்பிரங்கோடு ஊராட்சியில் சாம்ராவட்டம் என்ற இடத்தில் ஆலயம் உள்ளது. திரூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்ல, திரூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    Next Story
    ×