search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
    X

    வரதராஜப் பெருமாள் திருக்கோவில்

    வடவண்டையில் மேற்கு நோக்கி வரதராஜப் பெருமாள் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வடவண்டையில் மேற்கு நோக்கி வரதராஜப் பெருமாள் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளார். பல இடங்களில் சிவன் கோவில்களில் பெருமான் சன்னதி, கோவிலுக்குள்ளேயே அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். சீதேவி, பூதேவி இல்லாமல் திருமால் மட்டும் மேற்குப் பக்கம் நோக்கித் தனிக்கோவில் தனித்துத் திருக்காட்சி அளிப்பது இங்கே தான். பிரயோக சக்கரமும், சங்கும் விளங்க அபயஹஸ்தத்துடன் நமக்கு நெடியோன் வேங்கடவன் அருள்புரிகிறார். கம்பீரமான ஆறடி உயரம். அற்புதமான திருக்காட்சி.

    சீதேவியும், பூதேவியும் நாச்சியார் கோவிலில் இருப்பதாகவும், சுவாமி மட்டும் வக்கிராசுரனுடன் போர்தொடுக்க இங்கே வந்து, போர் முடிந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த இடம் என்றும் தல வரலாறு கூறுகிறது. கோவிலுக்குள், ஒரே கல்லில் ராதா, ருக் மணி சமேதராக ராஜகோபாலன் உள்ளார். கிருஷ் ணாவதாரத்துடன் ராமாவதாரத்தையும் இணைத்து கண்ணன் கைகளில் வில்லும், அம்பும் மிளிர்கின்றன. கோவிலின் எதிரில் ஆஞ்சநேயரும் கருடாழ்வார் பக்தியின் வடிவமாக எழுந்தருளியிருக்கிறார்கள்.

    இத்திருக்கோவிலை எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது எடுத்து, ‘உலகம் ஆண்ட திருக்குலத்துவனச் சோழன் கோச்செங்கணான் செங்கல்லால் கட்டினான்’ என்னும் செய்தி நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. செங்கட் சோழன் காலம் கடைச்சங்க காலம், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ‘இக்கோவில் அதிராசேந்திரனுடைய இரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி.1072) கற்கோவிலாகக் கட்டப்பெற்றது’ என்று கல்வெட்டு கூறுகிறது.

    சஹஸ்ர லிங்கம் :

    பெருமாள் கோவிலின் பின்புறம் கிழக்கு நோக்கி இச்சிறிய சஹஸ்ர லிங்கக் கோவில் இருக்கிறது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒப்புயர்வற்ற கலைத் திறனைக் காணக் காண வியப்படைகிறோம். மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிதான அதைக் கண்டதும், நம் கைகள் தாமாகவே குவிந்து வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றன. பக்தர்கள் கண்டு மகிழ்ந்து வணங்க வேண்டிய முக்கிய இடம், இது. இக்கோவிலுக்கு முன்னர், தென்புறம் நோக்கி வள்ளி, தெய்வானையோடு ஆறுமுகப் பெருமாள் காட்சி தருகிறார்.

    அலங்கார முன் மண்டபம் :

    இத்திருமண்டபத்தை, கி.பி.1286-ல் அரசி உலக முழுதுடையாள் கட்டினாள். ‘ஸ்வஸ்திஸ்ரீ பெருமாள் விக்கிரம பாண்டிய தேவர் நம்பிராட்டியார் உலக முழுதுடையார் செய்வித்த திருமண்டபம் யாண்டு’ என்று கல்வெட்டு கூறுகிறது. அலங்கார முன் மண்டபத்தினுள் வலப்பக்கம் ராஜசிம்ம பல்லவன் காலத்திய பதினாறு பட்டை லிங்கமும், இடப்பக்கம் அகோர வீரபத்திரர் சிலையும் நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன. வாயிலின் இருபுறமும் கதைகளின் மீது கால்களைத் தூக்கி வைத்து நிற்கும் 12 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான துவாரபாலகர் இருவரையும் பார்த்துப் பிரமிப்படைகிறோம். இருவருக்கும் பின் பக்கம் இரண்டு சிம்மங்கள் கம்பீரமாக நிற்கின்றன.

    இந்தத் துவாரபாலகரைப் பார்த்ததும், திண்டிவனம் பஸ் நிலையத்தின் அருகேயுள்ள கிடங்கில் பூமிக்கு அடியிலிருந்து கிடைத்த பெரிய அழகிய கொற்றவையின் சிலை நினைவுக்கு வருகிறது. அந்தக் கொற்றவையின் அதே பாங்கில், சுமார் ஒன்றரை அடி அகலம் உள்ள பலகைக் கற்களில் இந்தச் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிரில் பார்த்தால், சிங்கத்தின் மீது நிமிர்ந்து அமர்ந்துள்ளதைப் போன்ற மாயத்தோற்றமும் உள்ள, இச்சிற்பங்களைத் தெய்வத் தச்சன் அல்லவா கைபுனைந்து இயற்கைக்குக் கவின் பெருவனப்புடன் படைத்துள்ளான்.

    உள்சுற்று :

    திருக்கயிலாய நாதரைத் தரிசிக்கச் செல்லும் இனிய உணர்வுடன் கயிலாய மலைக்குள் நுழையும் உடல் சிலிர்ப்புடன் உள்ள திருச்சுற்றில் சென்றால், நால்வர், தட்சிணாமூர்த்தி, கணபதி, லட்சுமி பிரயோகச் சக்கரத்துடன் கூடிய திருமால், அகத்தியர் பூசித்த லிங்கமும், வள்ளி தெய்வானையோடு ஆறுமுகப் பெருமான், அஷ்டபுஜ துர்க்கை, சண்டேசுர தேவர் முதலியவர்களுடன் பல்லவர் கால... சோழர் காலச் சிற்பங்களாகிய பரிவாரத் தேவதைகளையும் தரிசிக்கலாம்.

    முதல் பிரகாரத்தில் சிலைகள் மயம் :


    கருவறையை சுற்றி உள்ள முதல் பிரகாரத்தில் முருகன் சன்னதி எதிரில் வரிசையாக சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்ரீலிங்கம், வாதாபி விநாயகர், பிச்சாண்டவர், ஸ்ரீலிங்கம், லிங்கோத்துபர், ஸ்ரீலிங்கம், பிரம்மி, பைரவர், அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீலிங்கத்தை அடுத்தடுத்து காணலாம். இதைத் தொடர்ந்து ஸ்ரீலிங்கம், துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம். அதே வரிசையில் குண்டலினி மாமுனிவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவருக்கு அருகே நாகேஸ்வரர் பிரதீஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    அடுத்த அரங்கில் கால பைரவர், சண்டீகேஸ்வரர்கள் உள்ளனர். அந்த வரிசை இறுதியில் அகத்தியர் நிறுவி வழிபட்ட லிங்கத்தை காணலாம். பல நூறு ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னமும் அந்த அகத்திய லிங்கம் பளபளவென இருப்பது பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளது.
    Next Story
    ×