search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாரங்கபாணி திருத்தல மகிமை - கும்பகோணம்
    X

    சாரங்கபாணி திருத்தல மகிமை - கும்பகோணம்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ளது சாரங்கபாணி ஆலயம். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்படும் கோவில் இதுவாகும். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    வில்லுடன் பெருமாள்

    பொதுவாக அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியபடி தான் காட்சி தருவார். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள இறைவன், தன்னுடைய கரங்களில் ‘சார்ங்கம்’ என்னும் வில்லை வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர், உற்சவர் இருவருமே கையில் வில் வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். சார்ங்கம் என்ற வில்லை வைத்திருப்பதாலேயே, இத்தல இறைவன் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார்.

    நாலாயிர திவ்ய பிரபந்தம்


    திருமாலைப் பற்றி, 12 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்களே ‘நாலயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைக்க வழி செய்தவர் இத்தல பெருமாள் ஆவார். நாதமுனி என்பவர் இத்தல இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை “ஓராயிரத்துள் இப்பத்தும்” என்று சொல்லி பாடினர். அதைக் கேட்டு, “இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா?” என்று வியந்த நாதமுனி, மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார். ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், “ஆழ்வார்திருநகரி சென்று, நம்மாழ்வாரை வணங்கினால் மீதி பாடல்கள் கிடைக்கும்” என்றார். ஆனால் வந்த இடத்தில் ஆயிரம் பாடல்களுக்கு பதிலாக நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. அந்த தொகுப்பு தான் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்னும் நூல்.

    சொர்க்கவாசல் இல்லை

    திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் இல்லை. இத்தல இறைவன், நேராக வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்தார். எனவே இத்தல இறைவனை வணங்கினாலே முக்தி கிடைத்து விடும் என்பதால், தனியாக சொர்க்கவாசல் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது. தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயண வாசல் வழியாகவும் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும். இரண்டில் ஏதாவது ஒரு வாசல் தான் திறந்திருக்கும்.

    பக்தனுக்கு திதி கொடுத்த பரந்தாமன்


    இத்தல சாரங்கபாணியின் மீது அதீத பக்தி கொண்டவர், லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர். இந்த ஆலயத்தின் கோபுரத்தை கட்டியவர் இவர்தான். தன்னுடைய இறுதி காலம் வரை இறைவனுக்கு சேவை செய்தார். ஆனால் அவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு தீபாவளி நாளில் லட்சுமி நாராயணசாமி, இறைவனடி சேர்ந்தார். இறந்த பெற்றோருக்கு பிள்ளைகள் திதி கொடுக்காவிட்டால், அவர்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும். எனவே தன்னுடைய பக்தனுக்கு, தானே மகனாக இருந்து திதி கொடுத்தார் சாரங்கபாணி என்று தல வரலாறு சொல்கிறது. தீபாவளியன்று உச்சி காலத்தில் தன் பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் இதனை பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    வீட்டோடு மாப்பிள்ளை

    இந்த தலம் கோமளவல்லி தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவரை திருமணம் செய்து கொண்ட திருமால், இங்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக சுவாமி சன்னிதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இந்த ஆலயத்தில் கோமளவல்லி தாயார் சன்னிதியின் முன்பாக நடத்துகின்றனர். அதன்பிறகே சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடைபெறும். தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி இருப்பதால், அதற்கு ஏற்றால்போல் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, இறைவனின் சன்னிதிக்கு செல்லும் வகையில் ஆலய வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

    பாதாள சீனிவாசன்

    இத்தல இறைவியான கோமளவல்லி தாயாரை திருமணம் செய்வதற்காக, பூலோகம் வந்தார் திருமால். தாயாரிடம் விளையாட நினைத்து, பூமிக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டார். எங்கு தேடியும் திருமாலைக் காணாததால், தாயார் கலக்கம் அடைந்தார். கொஞ்ச நேர கண்ணாமூச்சி விளையாட்டுக்குப் பிறகு, அவர் முன்பு தோன்றிய பெருமாள், தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் ‘பாதாள சீனிவாசர் சன்னிதி’ என்ற பெயரில் இந்த ஆலயத்தில் இருக்கிறது. அதே போல் திருமணத்திற்கு பிறகு, மேடான பகுதியில் நின்ற சீனிவாசர், ‘மேட்டு சீனிவாசர்’ என்ற பெயரில் தாயாருடன் தனிச் சன்னிதியில் அருள்கிறார். ஒவ்வொருவரின் வாழ்வும் இல்லறத்தை தழுவிய பின்பே, மேன்மை பெறும் என்ற தத்துவத்தை இந்த அமைப்பு உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

    உத்தான சயனம்

    பெருமாள் படுத்தபடி இருக்கும் ‘சயனம்’ என்னும் நிலைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அதில் ஒரு சயனம் ‘உத்தான சயனம்’ ஆகும். சாரங்கபாணி ஆலயத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், இத்தல இறைவனை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர் “நடந்து திரிந்ததால் கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?” என்ற பொருளில் பாடினார். அதைக் கேட்ட பெருமாள் எழ முயன்றார். உடனே திருமழிசை ஆழ்வார், “அப்படியே காட்சி தா” என்று கேட்க, இறைவனும் அப்படியே அருளினார். படுத்தபடி சற்றே தலையைத் தூக்கி எழ முயலும் கோலத்தில் இங்கு இறைவன் அருள்கிறார். இந்த கோலத்திற்கு `உத்தான சயனம்’ என்று பெயர்.
    Next Story
    ×