search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்னைக்கு அருகில் அருள்பாலிக்கும் கல்யாண லட்சுமி நரசிம்மர் கோவில்
    X

    சென்னைக்கு அருகில் அருள்பாலிக்கும் கல்யாண லட்சுமி நரசிம்மர் கோவில்

    சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.
    சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ தலங்களில் நரசிங்கபுரம் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று. ‘நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்’ என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

    மகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.

    மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு.

    ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக் கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார்.

    நாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச்சிறப்பு.

    மரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். 16--ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார். இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

    காலை : 7.30 மணி முதல் 12 மணி வரை
    மாலை: 4.30 மணி முதல் 8 மணி வரை
    (பிற விஷேச காலங்களில் நேர மாற்றம் உண்டு)

    இரண்யனை வதம் செய்து கோபம் தீராத நரசிம்மரை தாயார் சாந்தப்படுத்தி, பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வது போன்ற இந்தத் தோற்றம், வேறு எத்தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.

    சிறந்த பிரார்த்தனைத் தலமான நரசிங்கபுரம் பிரத்யட்ச தெய்வ சக்தி நல்கி, துன்பம் நீங்கி உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது. ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6--ம் இடமாகிய ருண (கடன்), ரோக (வியாதி), சத்ரு (பகை) ஸ்தான தோஷத்தை உடனுக்குடன் நிவர்த்தி செய்பவர் இந்த லட்சுமி நரசிம்மன்.
    தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திரத்தில் சேவித்தால் தீராத கடன், பிணி, திருமணத் தடை, சகலவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும்.

    கோவிலின் கட்டிட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறனைப்பறை சாற்றும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அடித்தளமும் அதன் மேல்பாகமும் கற்களாலும், விமானம், செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. கருவறை விமான கோபுரத்தில் சுண்ணாம்பு சுதையால் ஆன அழகிய உருவங்கள் ஐந்துள்ளன.

    இங்கு மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோயிலை 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
    Next Story
    ×