search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பித்ரு தோஷம் தோஷம் நீக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவில்
    X

    பித்ரு தோஷம் தோஷம் நீக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவில்

    பித்ரு தோஷம் தோஷம் நீங்கிட திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலச யாகம் செய்ய வேண்டும்.
    நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும், நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது ‘பித்ரு தோஷம்’. இந்த தோஷம் நீங்கிட திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலச யாகம் செய்ய வேண்டும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு - ஒரு மாபெரும் வரப் பிரசாதம் இந்தத் திருத்தலம். நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அற்புத சக்தி படைத்த திருத்தலமான விஜயாபதி பற்றி இங்கே பார்க்கலாம்.

    வசிஷ்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர் விசுவாமித்திரர். ஆனால், அந்தப் பட்டம் அவருக்கு உடனே கிடைத்து விடவில்லை. கடுமையான தவம் இயற்றிய பிறகே, அவருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது.

    ஒரு நாட்டின் மன்னனாக இருந்தவன் கவுசிகன். இவர் ஒரு முறை வேட்டையாடுவதற்காக படை பரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமத்தின் பக்கமாக வந்தான். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கவுசிக மன்னனையும் படை பரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிஷ்டர், கவுசிகனிடம் ‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன். நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’ என்றார்.

    அதற்கு கவுசிகன், ‘எனக்கும் என் படையினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது. காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் உங்களால் எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியும்?’ என்று கேட்டான்.

    ‘முடியும் மன்னா! நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்றுநேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகிவிடும்’ என்றார் வசிஷ்டர்.

    பிறகு அவர் ஆசிரமத்தின் பின்புறம் இருந்த காமதேனுவிடம் சென்று, ‘வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்’ என்றார். அப்படியே சற்றுநேரத்தில் அறுசுவை விருந்து தயாரானது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.

    வசிஷ்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்வீகப் பசு இருப்பதைக் கண்ட கவுசிகன், ‘‘கேட்டதைத் தரும் அட்சய பாத்திரமான காமதேனு, சாதாரண முனிவரான உங்களிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம் தான் இருக்க வேண்டும்’ என்று சொல்லி, அந்த தெய்வீகப் பசுவைத் தனக்குத் தருமாறுக் கேட்டார். அதற்கு வசிஷ்டர் மறுத்து விட்டார்.

    வசிஷ்டரின் மகிமை தெரியாத கவுசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் பசுவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரிந்து சாம்பலாகும்படி வசிஷ்டர் சாபமிட்டார். அதன்படி படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள்.

    வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கவுசிகன், ‘தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டான்.

    ‘கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’ என்று வசிஷ்டர் சொல்ல, ‘படைபரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்’ என்று கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றான்.

    தன் தவத்தின் பயனாக ஆகச்சிறந்த மகரிஷியான அந்த மன்னனே விசுவாமித்திரர் ஆவார். தவத்தின் பலனாக சிறந்த ஆற்றல் பெற்றிருந்த விசுவாமித்திரர், ஒரு முறை திரிசங்குவுக்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் அனைத்து தவ பலன்கைளயும் இழந்து விட்டார். மீண்டும் தவ ஆற்றலைப் பெறுவதற்காக யாகம் செய்ய நினைத்தார்.

    யாகம் செய்ய அவர் தேர்வு செய்த இடம்தான் விஜயாபதி. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத் திருமேனியாக இறைவனையும், இறைவியையும் உருவாக்கி ஓமகுண்டம் வளர்த்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொல்லை கொடுத்தாள். இதனால் அவளை அழிக்க ராம- லட்சுமணர்களை அழைத்து வந்தார் விசுவாமித்திரர். ராமரும் லட்சுமணரும் தாடகையை அழித்து, விசுவாமித்திரர் யாகம் சிறப்பாக நடைபெற துணை புரிந்தனர்.

    யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் தோன்றி ‘இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய். காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஷ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிஷ்டரே உனக்கு குருவானவர். நீ தவம் புரிந்த இந்த இடத்துக்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று அருளினர். விசுவாமித்திரரும் காசிக்குச் சென்று, வசிஷ்டர் வாயாலேயே ‘பிரம்ம ரிஷி’ என அழைக்கப்பட்டார்.

    ‘விஜயம்’ என்றால் வெற்றி, ‘பதி’ என்றால் இடம். விஜயாபதி என்றால் ‘வெற்றிக்கான இடம்’ என்று பொருள். விசுவாமித்திரர் யாகம் செய்த இடம், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்ட இடம் என்பதால் இங்கு விசுவாமித்திரருக்கு தனிக்கோவில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோவில் இருப்பது விஜயாபதியில் தான்.

    கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. அருகிலேயே உள்ளது விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவில். இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால், இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இறைவனும், இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோவிலின் தல விருட்சம் வில்வமரம்.

    விசுவாமித்திர மகாலிங்க சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம், வெள்ளை அரளி மாலை அணிவித்து, அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு சிவப்பு நிற பட்டு, செவ்வரளி மாலை சாத்தி நெய் தீபமிட்டு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். தைமாதம் தைப்பூசத்தில் இறைவனையும், இறைவியையும் விசுவாமித்திரர் பிரதிஷ்டை செய்ததால், தைப் பூசத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    ஓமகுண்ட கணபதி

    விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டு விட்டுத் தான் யாகம் செய்துள்ளார். அதனால் இங்குள்ள விநாயகருக்கு ‘ஓமகுண்ட கணபதி’ என்று பெயர். கணபதி சன்னிதிக்கு வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம், தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது. விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம்.

    விசுவாமித்திரரின் ெஜன்ம நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும், பவுர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அர்ச்சனையும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்களின் சாபம் நீங்குவதாகச் சொல்லப்படுகிறது. கடலில் நீராடி, ஈர ஆடையுடனே ஓமகுண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து, விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை சாத்தி, 11 நெய் தீபமேற்றி, விசுவாமித்திரர் சன்னிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, மறுபடியும் ஒரு முறை விசுவாமித்திரரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்.

    திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி திருத்தலம். 
    Next Story
    ×