search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்
    X

    முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்

    தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.
    தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.

    தல வரலாறு :

    படைப்புக் கடவுளான பிரம்மா, ஒருமுறை பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். பூலோகத்தின் இயற்கை அழகில் மகிழ்ந்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பது தெரிந்தது. அந்த நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைப் பார்ப்பதற்காக அருகே சென்றார்.

    நெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. மேலும், அந்த இடம் அவருக்கு வைகுண்டமாகத் தோன்றியது. பூலோகத்தில் இறைவன் விஷ்ணுவின் வைகுண்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், மகாவிஷ்ணு சிலையை உருவாக்கி, அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, விஷ்ணு சிலையை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பாகத் தோன்றினார்.

    அப்போது பிரம்மன் விஷ்ணுவிடம், ‘இறைவா! இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.

    அவரது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, ‘பிரம்மனே! இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்’ என்று அருள்கூறி மறைந்தார்.

    அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மகாவிஷ்ணு கோவில் உருவானதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.

    மற்றொரு வரலாறு :

    ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்த, மலைப் பகுதிக்குத் தவமிருக்க முனிவர்கள் சிலர் வந்தனர். வந்த இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இருக்கும் தங்களுக்குத் தேவையான உணவும், நீரும் கிடைக்க உதவும்படி விஷ்ணுவிடம் வேண்டினர்.

    விஷ்ணு, அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நெல்லிமரமும், அதனருகில் நீர்நிலை இருப்பதையும் காண்பித்து உதவினார். அவர்கள் அந்த நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப்பிட்டு, நீர்நிலையில் இருந்த நீரைப் பருகி, தங்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொண்டனர்.

    விஷ்ணு காட்டிய நெல்லிமரத்தை, ‘அருள்புரிந்த நெல்லி’ என்ற பொருள்படும்படி ‘திருநெல்லி’ என்று போற்றியதுடன், அந்த மரத்தின் அருகில் விஷ்ணுவிற்குச் சிலை நிறுவி கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, அங்கு தற்போதிருக்கும் விஷ்ணு கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு கதையும் இக்கோவிலின் தல வரலாறாகச் சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு :

    கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் மூலவராக மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் கணபதி, நாகர்கள் உள்ளிட்ட துணைத் தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குப் பகுதியில், ஐந்து புனித ஆறுகளின் நீர் இணைந்திருப்பதாகக் கருதப்படும் ‘பஞ்சதீர்த்தம்’ எனும் குளம் இருக்கிறது. இக்குளத்தினுள் நடுவில் அமைந்திருக்கும் பாறையின் மேற்பகுதியில் விஷ்ணுவின் கால் தடம் பதிந்திருக்கிறது. கால் தடத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. விஷ்ணு இவ்விடத்திலே நின்றுதான் பிரம்மனுக்குக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.

    ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மன் நீராடிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சியைப் ‘பாபநாசினி’ என்கின்றனர். இங்கிருக்கும் மலை, பிரம்மனின் பெயரால் ‘பிரம்ம கிரி’ என்று அழைக்கப்படுகிறது.


    தீர்த்தக்குளத்தின் நடுவில் அமைந்த விஷ்ணு பாதம்

    இத்தலத்தில் விஷ்ணுவுக்குரிய அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் முதல் அமாவாசை நாளில் பாபநாசினி நீர்வீழ்ச்சி அருகில் வாவுபலி எனும் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) நடைபெறுகிறது. துலாம் (ஐப்பசி) மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் புத்தரி கொண்டாட்டம் எனும் கதிர் அறுவடைத் திருநாள் விழா, மேடம் (சித்திரை) முதல் நாளில் விசுத்திருநாள் விழா, தனு (மார்கழி) மாதம் 18-ம் நாளில் சுட்டுவிளக்கு விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

    இந்த ஆலயம் பித்ருக்கடன் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாடு செய்வதற்கு முதன்மையான இடமாக இருக்கிறது. இங்கு முன்னோர் வழிபாட்டுக்குக் கட்டணம் செலுத்தினால், அதற்குத் தேவையான தர்ப்பை, அரிசி, எள், துளசி அடங்கிய பொருட்கள் தரப்படுகின்றன. அதைப் பெற்றுக் கொண்டு, கோவிலில் இருக்கும் இறைவன் மகாவிஷ்ணுவை வழிபட்டுப் பின்பு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பாபநாசினி’ நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவபெருமான் கோவில் மற்றும் பஞ்சதீர்த்தக்குளம் ஆகியவற்றை வழிபட்டுச் செல்லலாம்.

    பாபநாசினி நீர்வீழ்ச்சி நீரில் குளித்துவிட்டு வந்த பின்பு, அங்கிருக்கும் பாறையில் நீண்ட பள்ளமாக அமைந்திருக்கும் ‘பின்னப்பாரா’ என்று அழைக்கப்படும் வாய்க்காலில் அதற்கான சடங்குகள் செய்யப்படுகின்றன. பத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்த பின்பு, குழுவாக இவ்வழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இச்சடங்குகள் நிறைவடைந்தவுடன், மீண்டும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பலாம்.

    ஆலய சிறப்புகள் :

    * முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்த இடமாக இருப்பதால், திருநெல்லியைத் தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கின்றனர்.

    * ராமரும் லட்சுமணரும் தங்களது தந்தையான தச ரதன் மறைவுக்குப் பின்னர், இங்கு வந்துதான் முன்னோர் வழிபாட்டை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

    * இங்கு அமாவாசை, திதி என்று எந்தவொரு குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியதில்லை. எந்த நாளிலும் முன்னோர் வழிபாடு செய்யலாம்.

    * இங்கு பெண்களும் முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    * நெல்லி மரத்தின் கீழ் இறைவன் விஷ்ணு இருந்த இடம் என்பதால், இவ்விடம் ‘திருமால் நெல்லி’ என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘திருநெல்லி’ என்று மருவிவிட்டதாக கூறுகின்றனர்.

    * இந்த ஆலயம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் பாதியில் நின்றுள்ளது. இன்றும் அப்படியே இருக்கிறது.

    * இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பிரம்மகிரி மலையில் இருந்து பாறைகளில் வாய்க்கால் வெட்டப்பட்டுத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போதும் அது பயன்பாட்டில் உள்ளது.

    கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது மன்னந்தாவடி. இங்கிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். கண்ணூரில் இருந்து 121 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரில் இருந்து 136 கிலோமீட்டர், ஊட்டியில் இருந்து 165 கிலோமீட்டர், மைசூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. மன்னந்தாவடியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. 
    Next Story
    ×