search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்
    X

    திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்

    திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.
    திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய தல வரலாறு

    காசிப முனிவரின் பத்தினிகளாக கர்த்துரு, விநதை இருவரும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இருவரின் பக்தியில் இறைவன் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றி இருவருக்கும் ஒவ்வொரு அண்டத்தைக் (முட்டையை) கொடுக்கிறார்.

    இதனைக் குறிப்பிட்ட காலமான ஒரு வருடம் பூஜை செய்து பாதுகாத்து வந்தால், உலகம் பிரகாசிக்கும் சத்புத்திரன் பிறப்பான்” என்று கூறி மறைந்தார். இருவரும் அண்டத்தைப் பாதுகாத்துப் பூஜை செய்து வந்தனர்.

    ஒரு வருடம் கழித்து விநதை யின் அண்டத்திலிருந்து ஒரு பட்சி பிறந்தது. உடனே விநதை ஈஸ்வரனை நினைத்து, “என்ன இறைவா! எனக்குத் சத்புத்திரன் பிறப்பான் என்று கூறினாய். ஆனால் பட்சி பிறந்துள்ளதே” என்று வருந்தி வேண்டுகிறாள்.

    இறைவன், “நான் கூறியது போல் அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாய் கருடன் என்ற பெயரில் உலகமெங்கும் பிரகாசிப்பான்” என்றார்.விநதைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஏக்கத்தில் அவசரப்பட்டு கர்த்துரு தான் பாதுகாத்துப் பூஜை செய்து வந்த அண்டத்தை பிட்டப் பார்த்தாள். அதிலிருந்து தலை முதல் இடுப்பு வரை வளர்ந்த அங்கஹீனனாய் ஒரு குழந்தை பிறந்தது.

    அவளும் இறைவனை நினைத்து, “இப்படி ஆகி விடடதே!” என்று இறைஞ்சினாள். இறைவன், “நான் கூறியது போலவே இவன் சூரியனுக்குச் சாரதியாய் இருந்து உலகம் முழுவதும் பிரகாசிப்பான்” என்றார்.

    அங்கஹீனனான அருணன் தான் கைலாசம் சென்று ஈஸ்வரனைத் தரிசனம் செய்து வர எண்ணி சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியனோ, “நீ அங்கஹீனன் (நொண்டி). உன்னால் ஈஸ்வரனைத் தரிசனம் செய்ய முடியாது” என்றெல்லாம் பரிகசித்தான். மனம் தளராத அருணன் இறைவனை நினைத்து தவமிருந்தான்.
    மமதை கொண்ட சூரியன் அருணனின் தவத்தை எள்ளி நகையாடியதோடு பல தொல்லைகளும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பம் தாங்காது அருணன், முன்னிலும் முனைப்பாக இறைவனை நினைத்து வேண்டினான்.

    இறைவன் அருணனுக்குக் காட்சியளித்து அருள் புரிந்தான். சூரியனிடம் “என்னைத் தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய உன் மேனி கிருஷ்ண வர்ணமாய்ப் போகக் கடவது” என்று சாபமிட்டார். இதன் விளைவாக உலகமே இருண்டு போனது.

    பரமேஸ்வரி சிவபெருமானிடம் “இப்படி சாபமிட்ட வீட்டீர்களே! உலகமே இயங்காது போகுமே” என்று வினவ, “அருணன் தவ பலத்தால் உலகம் பிரகாசமடையும்” என்றார். தன் தவறை உணர்ந்த சூரியன் இறைவனிடம் வேண்ட, “நீ எம்மை ஏழுமாத காலம் பூஜை செய்தால் உனது உருவம் கருமை நிறத்திலிருந்து விடுபட்டுக் குணமடையும்” என்றார்.

    தான் சாபவிமோசனம் அடை வதற்காக சூரியன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை ஏழு மாதம் பூஜை செய்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட பின்னரும் தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, “ஹேமிகுரா” என்று கதறுகிறார்.

    அப்போது சுவாமியுடனிருந்த அம்பாள் தங்களது ஏகாந்தத்தில் குறுக்கிட்ட சூரியன் மேல் கோபம் கொண்டு மீண்டும் சபிக்க முற்பட்டாள். சிவபெருமான் தடுத்து, “நான் கொடுத்த சாபம் நீங்கவில்லையென்ற வருத்தத்தில் என்னை அழைத்துள்ளான். மீண்டும் நீ சாபமிட்டால் உலகம் மறுபடியும் இருண்டு போகும்.

    நீ பரமசாந்தையாயும் உலகம் பிரகாசிக்கவும் தவமிருப்பாயா” என்று அம்பாளைச் சாந்தப்படுத்தி, அம்பாளின் கோபம் தணிய தவமிருக்கப் பணிந்துவிட்டு, சூரியனுக்கு சாபவிமோசனம் அளித்தார். அம்பாள் சாந்த நாயகியாகிறார். அன்னை பராசக்தியின் திருவாயிலிருந்து வசினீ என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் திருவாய் மலர்ந்ததுவ சகஸ்ர நாம ஸ்தோத்திரம் எனப்படுகிறது. அம்பாளே அருளியதால் அவரின் பெயர் கொண்டு லலிதா சகஸ்ர நாமம் எனப் பெயர் பெற்றதாகச் சொல்வர்.

    இத்தலத்தில் பூஜை செய்து சூரியன் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்படையிலேயே மீயச்சூர் எனப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி முடிய சூரிய கிரணங்கள் உதயமாகும் நேரத்தில் இவ்வாலயக் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும்.

    சூரியன், அருணன், காசிப முனிவரின் மனைவி களான கர்த்துரு, விநதை ஆகியோர் இத்தலத்திலிருந்து சிவபெருமானை வழிபட்ட தோடல் லாமல் எமன் இத்தலத்தில் பிறந்து எந்நேரமும் சிவ சிந்தனையுடன் இருந்து பூஜித்ததாகவும், அகத்திய முனிவரும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பூஜை செய்தார்.

    100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளைக் கெட்டிப்படுத்தும் தெய்வீக சக்தி உண்டு. சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன் ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் ஸ்தல விருட்சங்களில் ஒன்றானதுமான பிரண்டை கலந்த அன்னதானம் செய்து சிவபெருமானை வழிபட்டார் என்பது ஐதீகம்.

    ஸ்ரீ ஹயக்கிரீவர் (பரிமுகப் பெருமான்) அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் செய்கையில், “லலிதாம்பாளை எங்கு தரிசனம் செய்யலாம்?” என்று அகத்தியர் வினவ, “அருணனும் சூரியனும் பூஜை செய்த ஸ்தலம் பூலோகத்தில் மீயச்சூர் எனும் ஊரில் உள்ளது. அங்கு சென்றால் அன்னை ஸ்ரீ லலிதாம்பாளைத் தரிசிக்கலாம். அந்த லலிதா சகஸ்ரநாமம் வாசிப்பதனால் பெற வேண்டிய பலன்களையும் அங்கு சென்றால் நிச்சயம் அடையலாம்” என்றார்.

    அகத்தியரும் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ மேகநாத சுவாமியையும் அன்னை லலிதாம்பாளையும் வணங்கி, பூஜை செய்து லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையின் பூரண பலனைப் பெற்றார் என்பது வரலாறு. பவுர்ணமி தினத்தன்று இவ்வர்ச்சனை செய்து அம்பாளை வழிபட்டால் சகல நன்மைகளும் அடையலாம்.

    அகத்தியர், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையை இவ்வன் னைக்காக அழகிய தமிழில் இயற்றியுள்ளார். இதனை தினமும் பாராயணம் செய்ய சகல செல்வமும், நற்பலன்களும் கிட்டும்.

    அமர்ந்த திருக்கோலத்தில் கலையழகு மிளிர வடிவமைக் கப்பட்டுள்ள அன்னை ஸ்ரீ லலிதாம்பாள் சிலையின் கால்களில் கொலுசு அணிவதற்கு ஏற்ப இடைவெளிகளோடு அமைக் கப்பட்டுள்ளதை அண்மையில் அறிந்து, பக்தர்கள் சிலர் சேர்ந்து கொலுசு செய்து அணிவித் துள்ளார்கள்.

    இத்தலத்தில் தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட் சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் சிவபெருமானை பூஜித்து, அத்தாமரை இலையிலே அன் னத்தை படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமளித்து தாமும் உண்டால் எக்கடுமையான நோய்களால் துன்பப்பட்டாலும் அந்நோயிலிருந்து நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ காலனும், சிவபெருமானும் அருள் புரிவர் என்பது நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவைகளைச் செய்தால் பூரண ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழ்வர்.

    வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டார சன்னதிகள் அவர்கள் இத்தலத்தின் பரம்பரை அறங்காவலராக இறைபணியாற்றி வருகிறார்கள். ஆதீன இளவரசு சீர்மிகு சத்திய ஞான மகாதேவ சுவாமிகள் தம் தந்தையாரோடு இணைந்து இறைபணியை நிறைவுடன் ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவில் அமைப்பு :

    திருமீயச்சூர் கோவிலின் ராஜகோபுரம் 5 நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும் கோவிலின் இரண்டாவது உள் கோபுரம் 3 நிலைகளுடன் 5 கலசங்களுடன் காணப்படுகின்றன.

    முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தில் உள்ளது. அதனை அடுத்து பெருங்கோவிலின் 2-வது உள் கோபுரத்தில் நுழையும்போது விநாயகர் நம்மை வரவேற்கிறார்.

    முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட்பிரகாரத்தின் தென் பகுதி பிரதிஷ்டைகள், சேக்கிழார் போன்றோரது திருஉருவங்களும், சப்த மாதாக்கள் பூதலிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில் அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், லிங்கங்களும் உள்ளனர்.

    இக்கோவில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தில் சேத்திர புராணேஸ்வரர் திருஉருவம் அமைந்துள்ளது.

    இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் புறத்தில் இருந்து பார்க்கும் போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து பார்க்கும்போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக் கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் அவர்களை காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்ற ஈஸ்வரனுக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.

    இப்பெருமானைப் பார்த்து விட்டு அப்படியே சுற்றிவரும்போது தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர் ஆகியோர் திருஉருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோவிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோவிலின் வடப்பக்கத்திலே இளங்கோவிலை தரிசனம் செய்யலாம்.

    இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று கவனித்தால் 5 கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.

    கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோவிலின் சுற்று லிங்கோத்பவர், பிரம்மா, மகா விஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு கிடைக்கிறது.

    இக்கோவிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, சது சண்டிகேஸ்வரர் உள்ளனர். தல விநாயகர், சண்டிகேஸ்வர், அருணாசலேஸ்வர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

    இத்திருக்கோவில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும். இக்கோவிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

    அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் :

    சர்வலாங்கார அம்பிகையாக கைகளில் வளையல்களும் அமர்ந்த நிலையில் கால்களில் கொலுசும் இடுப்பில் ஒட்டியானமும் கழுத்தில் சகல விதமான ஆபரணங்களும் அணிந்து அற்புதமாக காட்சி அளிக்கின்றாள் திருமீயச்சூர் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.

    சிறப்பு வாய்ந்த ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மாசி மாத அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஆதி சைவ சிவாச்சார்யர்களும் அன்னையின் பக்தர்களும் அம்பாள் உபாசகர்களும் கூடி இணைந்து ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஹோமம் பள்ளயம் எனப்படும் அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் போன்ற வழிபாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    லட்சார்ச்சனையின் போது 10 காலத்திற்கும் 10 விதமான பிரசாதங்கள் காலம் ஒன்றிற்கு 10 கிலோ வீதம் 100 கிலோ பிரசாதம் நைவைத்தியம் செய்யப்படுகின்றது. உச்சிகாலத்தில் விசேஷமாக பிரண்டை சாதம் 10 கிலோ நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

    அர்ச்சனையின் போது காலை முதல் மாலை வரை 10 ஆயிரம் ஆவர்த்தி ஹோமமும் அதன் அங்கமாக ஆயிரம் ஆவர்த்தி தர்ப்பணமும் நடைபெற்று அம்பிகைக்கு மகா அபிஷேகமாக பால், பழம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்றவை செய்விக்கப்பட்டு கலசாபிஷேகம் செய்து சர்வலாங்கார பூஷிதையாக அலங்காரம், மலர் கிரீடம் தரித்து காட்சி தரும் அம்பிகைக்கு மஹா நைவேத்தியம் செய்யப்படும்.

    அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர் சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

    சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டுகளித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.



    சூரியன் அருள்புரிந்த திருமீயச்சூர்  :


    அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அருளும் அற்புதத்தலம் திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர். இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
    திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ள தலம். திருமீயச்சூர் மற்றும் இளங்கோவில் இரண்டும் ஒரே ஆலயத்துககுள் திகழ்கின்றன. இவை சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்றன.

    மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி (மேகநாதர்), அம்பாள் சவுந்தரநாயகி, லலிதாம்பிகை, கோபுரங்கள் கஜப்பிருஷ்ட விமான அமைப்பில் உள்ளன. இக்கோவிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள இளங்கோவில் இறைவன் ஸ்ரீசகலபுவனேஸ்வரர். அம்பிகை மின்னல் மேகலாம்பாள்.

    உட்பிராகாரத்தில் விநாயகர், வில்லேந்திய முருகர், பஞ்ச பூதலிங்கங்கள் தனித்தனியே அஷ்ட திக் பாலகர்கள், சப்த மாதர்கள் பூஜித்த லிங்கங்கள், சேத்ர புராணேஸ்வரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோவி லின் உட்பிராகாரங்களில் மொத்தம் 25 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    இங்கே 12 ராசிகளுக்கான 12 நாகர்களையே அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். அருணனும் சூரியனும் வழிபட்ட தலம். சூரியன் சுவாமியையும் அம்பாளையும் யானை மீது வைத்து மேக மண்டலத்திலிருந்து பூஜை செய்ததால் சுவாமிக்கு மேகநாதர் என்று பெயர். எமனும், சனிபகவானும் இத்தலத்தில் சூரியனுக்கு மகன்களாகப் பிறந்தனர். சங்கு புஷ்பங்களை தாமரை இலையில் வைத்து அர்ச்சனை செய்தும், வஸ்ரவள்ளி எனப்படுகின்ற பிரண்டையால் சாதம் செய்து நிவேதித்துவம் எமன் வழிபட்டாராம்.

    இன்றும் இங்கே பக்தர்கள் தங்களின் தேக ஆலோக்கியத்துக்காக, 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்தும், சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும், பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்தும் கோவிலில் விநியோகித்து வழிபடுகிறார்கள்.

    கிளியை தூது அனுப்பும் துர்க்கை :

    திருமீயச்சூர் தலத்துக்கு நாம் எதை வேண்டி ஸ்ரீ லலிதாபர மேஸ்வரியை வழிபட வந்துள்ளோமோ அதனை ஸ்ரீ துர்க்கையிடம் “தாயே நான் இன்ன கோரிக்கையாக வந்துள்ளேன். நீதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியிடம் சிபாரிசு செய்ய வேணும்” என பிரார்த்தித்தால், ஸ்ரீ துர்க்கை தன் கையில் உள்ள கிளியை நமக்காக தூது செல்ல அனுப்பி வைக்கிறாள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சந்நிதி எதிரிலுள்ள கொடி மரத்தில் அந்தக் கிளி அமர்ந்து நமது கோரிக்கைகளை அம்பாளிடம் சமர்ப்பிக்கிறதாம்.

    ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் சாந்தம் :

    சூரியன் இங்கே மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளி பெற்று இன்புற்றார். மேகநாதர் சந்நிதி கோஷ்ட தெய்வமாக விளங்குவது சேத்திர புராணேஸ்வரர் சிற்பம். சிவசாபத்திலிருந்து விமோசனம் பெற சூரியன் திருமீயச்சூரில் தங்கினான்.

    சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார்.

    இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.

    7 பிறவிகள் பாவம் தீரும் :

    இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது. பீஷ்ம பிதாமகர் முக்தி அடைந்த தினம். பரமேஸ்வரனால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் (கருமை நிறம்) நீங்கி மேகநாதரையும், லலிதாம்பிகையையும் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்து முழுமையான பிரகாசம் அடைந்த தினம் இது.
    ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார். அப்போது, எருக்கம் இலை, அருகம்புல், பசுஞ்சாணம் மூன்றையும் சிரசில் வைத்து சங்கல்ப ஸ்நானம் செய்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கப் பெறும் என்பது முன்னோர் வாக்கு.

    பிரண்டை சாத நைவேத்தியம் :

    100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக்காலம் உள்ளது என்பதால், சத்ய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளை சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தல விருட்சமான பிரண்டை கலந்து சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இந்த கோவிலின் ஐதீகம்.

    மென்மையானவள் :

    ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம். லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் என்றும் அர்த்தம்.
    Next Story
    ×