search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைத்தியநாதசாமி, சுந்தராம்பிகை
    X
    வைத்தியநாதசாமி, சுந்தராம்பிகை

    திருமண வரம் அருளும் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதசாமி கோவில்

    அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதசாமி கோவில் உள்ளது.
    அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி கிராமத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூர் ‘வடகரை மழபாடி’ என அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மழவர்கள் என்கிற பழங்குடியினர் வாழ்ந்தனர். சிறந்த போர்வீரர்களான மழவர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்றாயிற்று. இதுவே பின்னாளில் திருமழப்பாடி என்று ஆனதாக சொல்லப்படுகிறது.

    மார்க்கண்டேய முனிவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, மழு எனும் படையை தாங்கி ஆடல் செய்தருளிய தலம் இது என்பதால் ‘மழுபாடி’ என்ற பெயர் வந்ததாக புராண தகவல் ஒன்றும் சொல்கிறார்கள்.

    இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.

    மனித தலை மிருக உடலமைப்பைக் கொண்ட புருடாமிருகரிஷி வழிபட்ட தலம் இது என்று தல வரலாறு சொல்கிறது. நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.

    ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.

    இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.

    இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கை.

    இந்த கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    தஞ்சை மாவட்டம் திருவையாற்றை அடுத்த அந்தணர்புரம் எனும் தலத்தில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் தனக்கு புத்திரப் பேறு இல்லாததை நினைத்து ஈசனை நோக்கி தவம் இருந்தார். அவர் முன் தோன்றிய ஐயாறப்பர், ‘சிலாதனே! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக் கொள்வாயாக. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்’ என அருளினார்.

    அவ்வாறே யாகம் செய்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாதமுனிவர், அதனுள் ஓர் அதிசய மூர்த்தியையும் கண்டார். அந்த மூர்த்தி நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரன் அணிந்த முடியும் கொண்டு விளங்கியது.

    அப்போது ஐயாறப்பர் அசரீரியாக ‘பெட்டியை மூடித்திற’ என அருள்வாக்கு கூறினார். அதன்படி சிலாதமுனிவர் பெட்டியை மூடி திறந்ததும், முந்தைய வடிவம் நீங்கி அதில் ஒரு அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு செப்பேசன் என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்று அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.


    ஒரே கல்லில் ஆன சோமாஸ்கந்தர்

    ‘இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது மகனை இழக்க நேர்ந்து விடுமே’ என சிலாத முனிவரும், அவரது மனைவியும் வருந்தினர். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலை அடைந்து அயனரி தீர்த்தத்தில் நீராடி காலின் மேல் காலை ஊன்றி கடும் தவம் செய்தார். அப்போது காட்சி தந்த இறைவன், 16 பேறுகளையும் கொடுத்தருளினார். பின்னர் செப்பேசன், ஐயாறப்பர் மீது கொண்ட பற்றினால் பல்வேறு உபதேசங்களை கேட்டறிந்து சிவகணங்களுக்கு (பாதுகாவலர்) தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் பெற்றார். இவரே நந்தியம்பெருமான் ஆவார்.

    சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.

    இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது. இதில் ஐயாறப்பரும், அறம்வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    அமைவிடம்: திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையிலிருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.

    கோவிலுக்குள் தண்ணீர் ஊற்று

    திருமழப்பாடி கோவிலில் சுந்தராம்பிகை, பாலாம்பிகை என 2 அம்மன் சன்னிதிகள் உள்ளன. இதில் பாலாம்பிகை சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. எந்த பக்கத்தில் இருந்து நாம் பார்த்தாலும், அந்த திருமேனி நம்மை பார்த்து புன்னகை செய்வது போன்று இருக்கும். தல விருட்சமான பனை மரத்தின் அருகே 4 நந்திகள் உள்ளன. அவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை குறிப்பதாக கூறப்படுகிறது. கோவிலின் உள் தளம் கொள்ளிடம் ஆற்றின் கரைக்கு சமமாக உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போதும், மழைக் காலங்களிலும் கோவிலுக்குள் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கும்.

    நவக்கிரகங்கள் இல்லை

    இந்தக் கோவிலில் சோமஸ்கந்தர் வடிவம், ஒரே கல்லினால் செதுக்கப்பட்டிருப்பது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. நவக்கிரகங்களின் சக்திகளை இறைவன் தனது ஆதிக்கத்தில் கொண்டிருப்பதால், இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னிதிகள் இல்லை. நவகோள்களின் காரணமாக பக்தர்களுக்கு ஏற்படும் சகல துன்பங்களையும் இறைவனே முன்னின்று தீர்த்து வரம் தருகிறார். பழமையான வெண்கல பாவை விளக்கு, மூலவர் சன்னிதியின் முன்பு உள்ளது. இதன் அருகேயுள்ள மூன்று குழிகளில் எள் தீபமிட்டு சாமியை மனம் உருகி வேண்டினால் சகல தோஷங்களையும் வைத்தியநாதசாமி அகற்றிவிடுவார் என்பதை ஐதீகம்.

    மாசிமக பிரம்மோற்சவம்


    அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளையும் வழங்கியருளும் தலம் இந்த ஆலயம் ஆகும். பாவி ஒருவன் இங்கு வந்தால் அவன் கயிலைக்கு செல்லும் பேறு பெறுவான். இந்தக் கோவிலில் இருந்து அன்னதானம் செய்தல், தண்ணீர்பந்தல் வைத்தல் முதலான அறங்களை செய்தால் பெருவாழ்வு வாழ்வர் என கூறப்படுகிறது. தினமும் காலை 7 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு 4 கால பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் மாசி மகத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது சாமி 10 நாட்கள் பல வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிப்பார். இறுதி நாளில் தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.
    Next Story
    ×