search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆழ்வார் திருநகரி கோவில் - திருநெல்வேலி
    X

    ஆழ்வார் திருநகரி கோவில் - திருநெல்வேலி

    வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் ஆழ்வார் திருநகரி. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

    இங்கே கோவிந்த விமானம் என்கிற விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.

    வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. நம்மாழ்வாரின் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள இத்தலத்து இறைவனை, பிரம்ம தேவர், நம்மாழ்வார், மதுரகவிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் மற்றும் தாமிரபரணி நதி ஆகியவை ஆகும். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

    குருகு என்றால் ‘பறவை, சங்கு’ எனப் பல பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை, சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது. பிரளய காலம் முடிந்த பின் தோன்றிய முதல் தலம் என்பதால் ‘ஆதி ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.

    நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.

    கோவில் அமைப்பு :

    திருக்கோவில் ராஜகோபுரம் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் அமைந்துள்ளது. ஆதிநாதவல்லி, பரமபத நாதன், சக்கரத்தாழ்வார், தசாவதாரம், குருகூர் நாச்சியார், நம்மாழ்வார் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளத் தலமாகும். கட்டிட அமைப்பால் வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டிருந்தாலும், நம்மாழ்வார் காலத்திலேயே திருக்கோவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் விரிவு படுத்தல் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து உள்ளது.

    ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.

    நவதிருப்பதிகளில் குரு தலம் :

    இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.

    உற்சவ காலங்களில் ஆழ்வார், திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும், சேவாகாலம் நடைபெற்ற பின்னர் தைலக்காப்பு செய்யப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷ மாகும். மார்கழி திருவாதிரை அன்று ஆழ்வாருக்கும், ராமானுஜருக்கும் ஒரே ஆசனத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும், வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

    நவ கருட சேவை :


    நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5–ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
    Next Story
    ×