search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேண்டியதை வழங்கும் வைக்கம் மகாதேவர் கோவில்
    X

    வேண்டியதை வழங்கும் வைக்கம் மகாதேவர் கோவில்

    வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் திகழ்கிறது.
    வைக்கத்தஷ்டமி நாளில் அன்னதானம் செய்து வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு :

    சிவபெருமானின் பக்தனான கரன் என்ற அசுரன், முக்தி வேண்டிக் கடுந்தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, ‘இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவனைப் பின் தொடர்ந்து செல்லும்படி புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் அனுப்பி வைத்தார்.

    ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயிலும் எடுத்துக் கொண்டு சென்ற அசுரன், பயணக் களைப்பால் சிறிது ஓய்வு பெறுவதற்காக வலது கையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்குப் பின்பு கீழே வைத்த சிவலிங்கத்தை அவன் எடுக்க முயன்றான். ஆனால், அது முடியாமல் போனது.

    அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், அந்தச் சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபடும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அவ்விடத்திலேயே தங்கிக் கொண்டார். அவர் அந்தச் சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.

    அசுரன் மீதமிருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏற்ற மானூர் என்னும் இடத்தில் சென்ற போது இடது கையில் இருந்த சிவலிங்கத்தை அங்கே மேற்கு நோக்கி நிறுவி வழிபாடு செய்தான். பின்னர் வாயில் எடுத்துச் சென்ற சிவலிங்கத்தை கடித்துருத்தி என்ற இடத்தில் கிழக்கு நோக்கி நிறுவி வழிபட்டான். இதன் மூலமாக அவனுக்கு முக்தி கிடைத்தது.

    பிற்காலத்தில் பரசுராமர் வான்வழியில் வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கீழே இறங்கி வந்த பரசுராமர், அந்தச் சிவலிங்கத்திற்காக பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினார். இது கரன் என்ற அசுரனால் வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாத முனிவரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்று வைக்கம் மகாதேவர் தல வரலாறு குறித்து, பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

    வேண்டியது கிடைக்கும் :

    இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு. இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரிய அனைத்து நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இக்கோவிலில் அம்மன் இல்லை என்றாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னிரண்டு நாட்கள் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    வைக்கத்தஷ்டமி :

    ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் ஆலமரத்தோடு கூடிய மேடையை ‘வியாக்ரபாதர் மேடை’ என்று அழைக்கிறார்கள். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கு, சிவபெருமான் இந்த இடத்தில்தான் காட்சி அளித்தார் என்றும், முனிவர் இறைவனிடம், தனக்குக் காட்சியளித்த நாளில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாக தல புராணம் தெரிவிக்கிறது.



    இந்தக் கோவிலில் வியாக்ரபாதருக்கு இறைவன் காட்சியளித்த நாளான, கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் ‘வைக்கத்தஷ்டமி’ என்ற விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலையாள நாட்காட்டியின்படி இந்த விழாவிற்கான தினம், விருச்சிகம் (கார்த்திகை) மாதம் பவுர்ணமியை அடுத்த அஷ்டமி நாளில் வருகிறது. இந்நாளில் இங்கிருக்கும் இறைவனை வழி படுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

    வனதுர்க்கை வழிபாடு :

    வைக்கம் மகாதேவர் கோவிலின் தெற்குப் பகுதியில் வனதுர்க்கை சன்னிதி ஒன்று இருக்கிறது. இந்தச் சன்னிதிக்கு மேற்கூரை எதுவும் இல்லை. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வந்த போது, அரக்கி ஒருத்தி அவருக்கு இடையூறு செய்து கொண்டே இருந்தாளாம். அவள் ஒரு கந்தர்வ கன்னி என்பதும், அவள் ஒரு சாபத்தால் அரக்கியாக மாறியிருப்பதும் முனிவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து வியாக்ரபாதர் அவளுக்குச் சாபவிமோசனம் கிடைக்க, விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். விநாயகப் பெருமானோ, திரிசூலி தேவியை அனுப்பி அரக்கியை மூன்று துண்டுகளாக்கி சாப விமோசனம் அளிக்கச் செய்தார். அந்த அரக்கியின் உடல்பகுதி விழுந்த இடத்தில்தான் வனதுர்க்கை சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இங்குள்ள வனதுர்க்கையை வழிபட்டால், மனிதர்களிடம் உள்ள அரக்க குணங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    வைக்கம் போராட்டம் :

    வைக்கம் மகாதேவர் கோவிலின் முன்பு, பக்தர்கள் வழி படுவதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட 108 குடும்பங்களின் வழிபாட்டுக்குரிய கோவிலாக மட்டும் இந்த ஆலயம் இருந்தது. இக்கோவில் அமைந்திருக்கும் வீதியில் ஈழவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துக் கேரளத்தில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டக்காரர் களின் வேண்டுகோளை ஏற்றுத் தந்தை பெரியாரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகனின் வெற்றிக்காக அன்னமிட்ட ஈசன்:

    சூரபத்மனையும், தாரகாசூரனையும் அழிப்பதற்காக முருகப்பெருமான் புறப்பட்டார். அவர் சூரர்களுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சிவபெருமான் வைக்கத்தப்பன் கோவிலில் வைக்கத்தஷ்டமி நாளில் அன்னதானம் செய்ததாக கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே இத்தலத்தில் வைக்கத்தஷ்டமி தினத்தன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதும், இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் தம்பதி சமேதராக கலந்து கொண்டு ஆசி வழங்குவார்கள் என்பதும் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த அன்னதான நிகழ்வை மலையாளத்தில் ‘பிராதல்’ என்று அழைக்கின்றனர். அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், எர்ணாகுளம் நகரில் இருந்து தெற்கே 33 கிலோமீட்டர் தொலைவிலும் வைக்கம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல இரு ஊர்களில் இருந்தும் அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    Next Story
    ×