search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கைமேல் பலன் தரும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்
    X

    கைமேல் பலன் தரும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்

    எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.

    கன்றுக்குட்டியானது ஓரிடத்தில் இருந்துகொண்டு தன் தாயை காணாமல் ‘அம்மெ’ என்று கத்தினால், அவ்வொலி தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இறங்கிவந்து கன்று பக்கத்தில் வந்து நிற்பது போலவே ‘நரசிம்மா!’ என்றழைத்தால் அக்கணமே தேடிவந்து அருள்புரிவான் என்று நரசிம்மரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் பொய்கை ஆழ்வார்.

    நரசிம்மம், மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நான்காவது என்பது தர்மம், அர்த்த, காம நிலைகளைக் கடந்து மோட்சநிலையை அடைவதனைக் குறிக்கும். மோட்சத்தையே சுலபமாகத் தரும் நரசிம்மர், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே வழங்கிடுவார். சிங்க முகமும், மனித உடம்பும் கலந்த மாறுபட்ட வடிவில், அகோபிலம் என்னும் மிகஉயர்ந்த மலைப்பகுதியில், பவநாசினி நதிக்கரையில் மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தில் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இந்த க்ஷேத்திரம் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் உள்ளது.

    பிரகலாதனைப் போன்று ஆழ்ந்த பக்தியும், மிகுந்த உடலுறுதியும் இருந்தால் மட்டுமே உயர்ந்த மலைப்பகுதியில், காட்டுக்குள் உள்ள இந்த க்ஷேத்திரத்துக்குச் சென்று நரசிம்மரை தரிசனம் செய்யமுடியும். ஆனால் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, சமதளமான-வேளாண்மைப்பகுதியான கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார்.

    பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது. இச்சிறுவனின் தாத்தா காசியப்பர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, பூமியில் நீடித்திருந்தது வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. அப்போது காசியப்பரால் நரசிம்மரை தரிசனம் செய்ய இயலாமல் போயிற்று.

    ஆகவே தன் பேரன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம சொரூபத்தை தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோ‌ஷன் என்ற முனிவர் ஆகியோரும் தவமிருந்தனர்.

    முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, மகாவிஷ்ணுவின் அசரீரி ஒலித்தது. “பொதிகைமலையில்-மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடருங்கள். நரசிம்மர் தரிசனம் காண்பீர்கள்!” என்பதே அசரீரி வாக்கு.

    புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தார். ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து தம் இதயக்கதவைத் திறந்தார் மகாவிஷ்ணு. அக்கணமே, ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் வடிவில் அவதார சொரூபியாகக் காட்சி கொடுத்தார். சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், “பக்தப் பிரபுவே! தாங்கள் இந்த க்ஷேத்திரத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டியதும் “அப்படியே ஆகட்டும்!” என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார்.

    நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம்.

    சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.

    ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.

    மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்ததை செப்பனிட்ட கல்திருப்பணி ரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வாலயம், தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது.

    அக்காலத்தில், ராணுவத் தலைமை இடமாக விளங்கிய- கீழப்பாவூரில் இருந்த ‘முனைஎதிர் மோகர்’ படைப்பிரிவிலுள்ள 2 ஆயிரம் வீரர்களின் துணைகொண்டு, சிற்றரசுகளை வென்று பேரரசனாக முடிசூட்டியுள்ளான். முதலாம் மாறவர்மன் திரிபுவன் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய மன்னன். தாம் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஆண்டில் இத்திருக்கோவிலுக்கு நித்யபூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான்.

    இம்மன்னன் இங்குள்ள பெருமாளுக்கு ‘முனைஎதிர் மோகர் விண்ணகர்’ என்னும் பெயரும் உண்டு. ‘முனைஎதிர் மோகர்’ என்பதற்கு ‘போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ என்பது பொருளாகும்.

    போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நரசிம்மர் கோவில் அருகிலேயே 1,700 ஏக்கர் நன்செய் நிலத்தை வளப்படுத்தும் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஏற்படுத்தி, அதற்கு ‘முனைஎதிர் மோகப்பேரேரி’ என்று பெயர் சூட்டியுள்ளான்.

    அரசு வெளியிடும் பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோக நாணயங்கள் வெளியிடும் பகுதி என்பதையும், போருக்குத் தேவையான ஆயுதங்கள் செய்யப்பட்ட பகுதி இவ்வூர் என்பதையும் இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோவில் நினைவூட்டுகிறது. ஆகவே இங்கு நரசிம்மரை வழிபாடு செய்தால், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரசாளும் யோகம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.

    ஒரு ஆலயத்திலுள்ள சுவாமிக்கு எந்தளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது.

    பழுதடைந்த இந்த திருக்குளம் திருப்பணி செய்யப்பட்டு, 19.1.2018 வெள்ளிக்கிழமை அன்று தடாகப் பிரதிஷ்டை நடைபெறுகிறது. சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன.

    சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும். வியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது.

    நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் முழு அருளுக்குப் பாத்திரமாகலாம் என்று மங்களகிரி புராணம் கூறுகிறது. இங்கு நரசிம்மர் உக்ரமாக உள்ளார்.

    உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம்.

    கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில், நரசிம்மர் திரிபங்க நிலையில், ஹிரண்ய சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்தில், 16 திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். சூரியனும் சந்திரனும் வெண்சாமரம் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, தலையில் கிரீடத்துடன் காட்சிதரும் நரசிம்மரை நாரதர், பிரகலாதன், அவனுடைய தாய், தாத்தா காசியப்ப மகரிஷி ஆகியோர் சரணடைந்து வணங்கி நிற்க, அவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் நரசிம்மர்.

    வழிபடும் முறை : நரசிம்மர் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகு, கன்னிமூல கணபதியை வணங்கி, வேங்கடாஜலபதி-நரசிம்மரை 16 முறை பிரதட்சணமாக வலம்வந்து வழிபாடு செய்து, அருகிலுள்ள வாலி பூஜை செய்து வழிபட்ட சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கினால்தான் க்ஷேத்திர வழிபாடு நிறைவு பெற்று முழுப்பலனும் கிட்டும்.

    இத்தலம் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.

    தகவலுக்கு : அர்ச்சகர் இரா. ஆனந்தன் - 94423 30643.
    Next Story
    ×