search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை வரம் தரும் அருள்மிகு விசுவநாதர் கோவில்
    X

    குழந்தை வரம் தரும் அருள்மிகு விசுவநாதர் கோவில்

    திருச்சியில் உள்ள உறையூரை அடுத்த பாண்டமங்கலத்தில் அமைந்திருக்கும் விசுவநாதர் ஆலயம் குழந்தை பாக்கியத்தை அருளும் தலங்களில் ஒன்றாகும்.
    குழந்தை வேண்டி தவம் இருக்கும் தம்பதிகளின் மனக்குறையை நீக்கி, அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருளும் தலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. திருச்சியில் உள்ள உறையூரை அடுத்த பாண்டமங்கலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விசுவநாதர் ஆலயமும் இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று தான்.

    அது மட்டுமல்ல. வேண்டும் தம்பதியருக்கு ஆண் குழந்தை கிடைக்க அருள் செய்யும் தலமாக இது விளங்குகின்றது என்று மெய்சிலிர்க்க சொல்கின்றனர் பக்தர்கள்.

    மிகவும் பழமையான இந்த ஆலயம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் சிறு மண்டபம் உள்ளது. அதைத் தாண்டியதும் நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    உள்ளே கருவறையில் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கியும், அம்பாள்காசி விசாலாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள கருவறை அம்மன் சிலை மிகவும் சிறியது. அம்பாளின் உயரம் ஒன்றேகால் அடி என்பது இங்கு குறிப்பிடக் கூடிய விசேஷம்.

    கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் மேற்கில் விநாயகர், மகாலட்சுமி, முருகன், ஆதி விசாலாட்சியும், வடக்கில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு மூலையில் நவக்கி ரகங்களின் திருமேனிகளும் உள்ளன.

    கோவிலின் தலவிருட்சம் அரசமரம். கோவிலின் முன் உள்ள அரசமரம் 300 ஆண்டுகளைத் தாண்டியமரம் என்று சொல்கின்றனர். கோவில் 450 ஆண்டுகள் பழமையானது. இடையில் திருப்பணிகள் நடந்து புதுப்பிக்கப்பெற்று 3.9.1998-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் காலை, சாயரட்சை என இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

    இக்கோவிலின் கருவறையில் இருந்த காசி விசாலாட்சியின் விக்கிரகம் சிறிது சேதமடையவே, அதை மேற்கு பிரகாரத்தில் ஆதி விசாலாட்சி என்ற பெயரில் பிரதிஷ்டை செய்துவிட்டு, தற்போதுள்ள சிறிய அளவிலான அம்மன் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    முன்பெல்லாம் சிவராத்திரி அன்று இறைவனின் மேல் சந்திர ஒளிபடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கு மாம். நாளடைவில் கோவிலைச் சுற்றி நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டு விட்டதால், அந்தக் காட்சியை காண இயலவில்லை என இவ்வூர் முதியோர்கள் வருத்தத்துடன் சொல்கின்றனர்.

    திருவிழாக்காலங்களில் இறைவனையும், இறைவியையும் விதவிதமான உடைகளால் அலங்காரம் செய்து மகிழ்வது எங்கும் பழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உற்சவ அம்மனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று காய்கறிகளால் அற்புதமாக சாகம்பரி அலங்காரம் செய்வார்கள். அந்த காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    கோவிலின் தீர்த்தம் காசி விளங்கி நதி. நவராத்திரி, ஆண்டுப் பிறப்பு, பிரதோஷம் மற்றும் ஏனைய நாட்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவதுண்டு.

    அரச மரத்தை சுற்றி வந்து, இங்குள்ள அம்பாளையும் சுவாமியையும் விளக்கேற்றி வேண்டினால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆரவாரமான நகரை விட்டு ஒதுங்கிநின்று அருள்பாலிக்கும் இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் தரிசனம் செய்வதால் நம் மனதில் ஒரு தெய்வீக அமைதியும் நிம்மதியும் குடிகொள்வது உண்மையே.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
    Next Story
    ×