search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண வரம் அருளும் வீரமாகாளி அம்மன் ஆலயம் - புதுக்கோட்டை
    X

    திருமண வரம் அருளும் வீரமாகாளி அம்மன் ஆலயம் - புதுக்கோட்டை

    பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டு தாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல் தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.

    சிறிய கல் வடிவில் சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் பணி நடந்தது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்கள் அமைய செய்து முடித்தனர். ஆனால், அதன் வலது மேல்கரத்தில் ஒரு விரலில் பின்னம் ஏற்பட்டுவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் மனம் வருந்தினர். அப்போது அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருகிறேன். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. நான் இருக்க இன்னொரு வடிவம் தேவையா?’ என்றது.

    மேலும் ‘என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்றாள் தேவி.

    தான் கண்ட கனவை, அர்ச்சகர் ஊர் மக்களிடம் கூறினார். கனவில் சொன்னபடியே ஆட்டை நடக்க விட்டனர். அது ஓரிடத்தில் அமர்ந்த இடத்தில் தோன்றியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரமாண்ட கற்சிலை கிடைத்தது.

    அந்த சிலை எண் கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல் கரத்தில் ஒரு விரல் பின்னமடைந்து இருந்தது. ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது.

    அன்று இரவு மீண்டும் அர்ச்சகர் கனவில் வந்த அன்னை, ‘உங்கள் வீட்டு குழந்தைக்கு ஊனம் என்றால், தூக்கி வீசியெறிந்து விடுவீர்களா? நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள். இந்தக் கனவு அர்ச்சகருக்கு மட்டுமல்ல.. அந்த ஊரைச் சேர்ந்த அனைவருக்குமே வந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.

    பிறகென்ன முழுமனதோடு அன்னையின் பிரமாண்ட வடிவை நிறுவி வழிபடத் தொடங்கினர். அன்னையும் ஊர் மக்களுக்கு, காவல் தெய்வமாய் விளங்கி வருகின்றாள்.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் வடக்கு நோக்கிய வாசலைக் கொண்டு அமைந்துள்ளது. எளிய முன்முகப்பு மண்டபத்தின் வலதுபுறம், கருப்பசாமி மற் றும் விநாயகர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறை வாயிலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய வடிவ துவார பாலகியர்கள் காவல் புரிகின்றனர்.

    கருவறையின் இடதுபுற முகப்பில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய வடிவிலான தெய்வ சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. முதல் மரியாதை இவர்களுக்கே. இதைக் கடந்ததும், கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக, அருள் காட்சி வழங்குகின்றாள்.



    அன்னை பிரம்மாண்ட வடிவில் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி, வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள். வலதுபுறம் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் கொண்டும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, வரதம் தாங்கியும் காட்சி தருகின்றாள்.

    வலது காலை மடக்கி, இடது காலை அசுரனின் தலையை அழுத்தியும், சூலத்தால் குத்தியும் காட்சி அளிக்கின்றாள். அன்னையின் முகத்தில் சிறிய கோரைப் பற்கள் காட்சி தந்தாலும், அன்னை சாந்த சொரூபியாக காட்சி தருவது, அபூர்வக் கோலமாகும்.

    இந்த அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக, வீரமாகாளி திகழ்கிறாள்.

    வரம் வேண்டுவோர் அம்மனை நேரில் வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமண நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

    இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகின்றாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாக அமைகிறது. குழந்தை வரம் நிறைவேறியவர்கள் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயத்தைத் தரிசனம் செய்யலாம்.

    ஆடி மாதம் முழுவதுமே ஆலயத்திற்கு பிரம்மோற்சம்தான். 30 நாட்களும் சுற்றியுள்ள 16 கிராமத்தின் அனைத்து சமுதாயத்தினருக்கும், அரசுத்துறை ஊழியர் களுக்கும் தலா ஒவ்வொரு நாள் என, மாதம் முழுவதும் கச்சேரி, வாண வேடிக்கை என ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். இது தவிர, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அம்மனுக்கு உகந்த நாட்களாக போற்றப்படுகிறது.

    அமைவிடம் :

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும், இவ்வாலயம் அமைந்துள்ளது.
    Next Story
    ×