search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்
    X

    கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்

    யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர்.
    பொருளாதாரப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த நரசிம்ம துதியை பாராயணம் செய்தால் கடன் பிரச்சனைகள் தீரும். இத்துதி நரசிம்ம புராணத்தில் உள்ளது. தினமும் இத்துதியை உளமாறப் படித்தால், அவரருளால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதியான புது வாழ்வு பெறலாம்.

    ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்

    தேவதா கார்யஸித்யர்த்தம் ஸபாஸ்தம்பஸமுத்பவம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    தேவதைகளின் காரிய வெற்றியின் பொருட்டு இரண்யனின் ராஜசபையில் உள்ள தூணில் தோன்றியவரும், மகாவீரரும் ஆன நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    மகாலட்சுமி தேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரே, பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம்
    வாரி வழங்குபவரே, மகா வீரரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    இரண்யனின் நரம்புகளை மாலையாகத் தரித்துக் கொண்டவரே, சங்கம், சக்ரம், தாமரைப்பூ, ஆயுதம் ஆகியவற்றைப் பூண்டவரே, வீரத்துக்கு வித்தானவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஸ்மரணாத் ஸர்வபாபக்னம் கத்ரூஜ விஷநாஸனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    நினைத்த மாத்திரத்திலேயே எல்லா பாவங்களையும் போக்கி அருள்பவரே, பாம்பு போன்ற
    விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாஸனம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    மிகுத்து ஒலிக்கும் சிம்ம கர்ஜனையால் எத்திசையிலிருந்தும் வரும் பயத்தை அழித்து ஒழிப்பவரே,
    அநியாய எதிர்ப்புகளை துவம்சம் செய்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    பிரகலாதனுக்கு வரமளித்து, அற்புத தரிசனம் அருளியவரே, லட்சுமியின் நாயகனே, அசுர ராஜனான இரண்யனின் மார்பைப் பிளந்தவரே, நரசிம்ம மூர்த்தியே, நமஸ்காரம்.

    க்ரூரக்ரஹை: பீடிதானாம் பக்தானாமபயப்ரதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    கேடுகள் விளைவிக்கும் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்களைப் பெற்ற
    பக்தர்களுக்கு அத்துன்பங்களை நீக்கி அபயம் அளிப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    வேத வேதாந்த யக்ஞேஸம் ப்ரஹ்ம ருத்ராதி வந்திதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    வேதம், உபநிஷத்து, யக்ஞம், இவற்றுக்கு ஈச்வரனாக விளங்குபவரே, ப்ரம்மா, ருத்ரன் போன்றோரால் வணங்கப்படுபவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

    ய: இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்க்ஞிதம்
    அந்ருணீ ஜாயதே ஸத்ய: தனம் ஸீக்ரமவாப்னுயாத்.

    யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர். நரசிம்மர் திருவருளால் தனப் பிராப்தி பெருகும் என்பது நிச்சயம். நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
    Next Story
    ×