search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனந்தம் அருளும் அங்காரக சதுர்த்தி விரதம்
    X

    ஆனந்தம் அருளும் அங்காரக சதுர்த்தி விரதம்

    செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும்.
    வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒருநாள்… நர்மதையில் நீராடிக்கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்திவந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார்.

    இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி அரவணைத்து வளர்த்தாள். குழந்தையின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு ‘அங்காரகன்’ என்று பெயர் சூட்டினாள்.

    அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒருநாள், ‘`அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!’’ என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ‘`குழந்தாய்… உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!’’ என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.

    அங்கு முனிவரைச் சந்தித்தவள், ‘’முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக்கொண்டார்.

    அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்துவைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

    இதன் பிறகு… தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். ‘தவமே சிறந்த வழி’ என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார். அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது.

    மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாதக் கமலங்களை பணிந்த அங்காரகன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றியதுடன், சில வரங்களையும் வேண்டினான்.

    ‘`விக்னராஜனே… நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வமங்கலமான திருவுருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், ‘மங்களன்’ என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!’’ என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.

    அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ‘’அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், ‘அங்காரக சதுர்த்தி’யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்னங்களை அடியோடு விலக்குவேன்!’’ என்று அருளி மறைந்தார்.

    விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் அந்த விநாயகருக்கு, ‘மங்கள விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

    இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்… விரைவிலேயே, நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.

    எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது. 
    Next Story
    ×