search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமைகளை வழங்கும் திருமால் விரத வழிபாடு
    X

    பெருமைகளை வழங்கும் திருமால் விரத வழிபாடு

    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும்.
    “காக்கும் கடவுள்” என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் உண்டு. அவை: விஷ்ணு, நாராயணன், கோவிந்தன், மதுசூதனன், ஜனார்த்தனன், பத்மநாபன், ப்ரஜாபதி, வராகன், சக்ரதாரி, வாமணன், மாதவன், நரசிம்மன், திரிவிக்ரமன், ரகுநாதன், ஜலசாயினன், ஸ்ரீதரன்.

    பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை நாம் “பெருமாள்” என்று அழைக்கின்றோம். அவருக்காக கட்டிய கோவிலைப் “பெருமாள் கோவில்” என்று சொல்கின்றோம். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.

    இவ்வாறு பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரராகி நமக்கு 16 பேறுகளையும் வழங்கும் விஷ்ணுவை வருகிற வைகுண்ட வாசனுக்குரிய ஏகாதசித் திருநாளில் வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர்.

    மாதங்களில் புனிதமானதாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதனால் தான் “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள்.

    “வைகுண்ட ஏகாதசி” என்று வரும்பொழுது சொர்க்க வாசலைத் திறப்பார்கள். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.

    ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா?. அந்த விழா இந்த மார்கழி மாதம் வருகின்றது. திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நுழைய லட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பர்.

    அதேபோல் திருக்கோஷ்டியூர், திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், திருமோகூர் போன்ற சகல விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும்.

    ஏகாதசியன்று அவல், வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் மதியமும் இரவும் பலகாரம் செய்தும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொழுது, இறை தியானத்தையே மேற்கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக நீராடி பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

    அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இந்த மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் மஞ்சள் வண்ணப் பூ வைத்தால் மங்கலம் உண்டாகும். பூசணிப்பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். மஞ்சள் வண்ணப் பரங்கிப் பூவும் வைப்பர். கிருமிநாசினியாக சாணத்தின் மீது அதைப் பதித்து வைத்திருப்பர்.

    இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து “ஓசோன்” என்ற காற்று மண்டலத்தில் உள்ள காற்று நம் மீது படுவதால் ஆரோக்கியம் மேம் படுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாட்டை மேற்கொண்டால் திருமணம் கைகூடும். அதிகாலையில் இறைநாமத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து நலன்களும் நமக்குக் கிடைக்கும்.

    இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். வருங்காலம் நலமாகும்.

    விஷ்ணுவை வழிபட்டு, அவரது துணையாக விளங்கிச் செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்குச் சென்று லட்சுமி வருகைப்பதிகம் பாடினால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவார். அஷ்ட லட்சுமியின் படத்தையும் விஷ்ணு லட்சுமியோடு இணைந்திருக்கும் படத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது.

    எட்டுவகை லட்சுமியால் ஏராளமாக செல்வம்

    கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே

    வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும்ஆதி லட்சுமியே!

    வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்.

    யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே

    உனைத்துதித்தால்

    காணுமொரு போகமெல்லாம் காசினியில்

    கிடைக்குமென்பார்!

    தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்த கஜ லட்சுமியே

    வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்!

    அன்றைய தினம் அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் பூர்த்தியாகும். நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் அகன்று இனிய பலன் கிடைக்கும். வளர்ச்சியும் பெருமையும் வந்து சேரும். வாழ்க்கையில் சந்தோஷங்களை மட்டும் நாளும் சந்திக்கலாம்.
    Next Story
    ×