search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன் ஜென்ம பாவம் போக்கும் தாமோதரப் பெருமாள் விரதம்
    X

    முன் ஜென்ம பாவம் போக்கும் தாமோதரப் பெருமாள் விரதம்

    அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும்.
    வில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.

    இவ்வாலயம், தென்கலை வைணவத்தலங்களுள் சிறப்புமிக்கத் தலமாகவும், வைகானச ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவிலாகவும் விளங்குகிறது.

    திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், இங்கு அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று.

    கை, கால் சுத்தம் செய்து கொண்டு, முதலில் பலி பீடத்தையும், கொடிமரத்தையும் வணங்கி, பூமி நமஸ்காரம் செய்து வெளிப்பிரகாரம், அஷ்டதிக் பலி பீடங்களையும் வலம் வந்து மீண்டும் கொடிமரத்தை வணங்கி தாயார், கண்ணன், ராமர் சன்னிதிகளை வணங்கி, ஆண்டாள், ஆழ்வார்களையும் வணங்கி, வலம்வந்து மீண்டும் கொடிமரத்தை வணங்கி, ‘பெரிய திருவடி' கருடனை வணங்கி, ஜய, விஜயர்கள் உத்தரவு பெற்றுக்கொண்டு கருவறையிலுள்ள பெருமாளை வணங்கி, பிறகு ‘சிறிய திருவடி' அனுமனை வழிபடவும்.

    அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை வழிபடுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தை களுக்கு தானம் தருவது சிறப்பு.

    மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம் இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.
    Next Story
    ×