search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னேற்றம் தரும் முன்னோர் விரத வழிபாடு
    X

    முன்னேற்றம் தரும் முன்னோர் விரத வழிபாடு

    இந்த மகாளய புண்ணிய காலத்தில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள முடியும்.
    புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரையிலான காலத்தை ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள். இது பித்ருக்களை (முன்னோர்கள்) வழிபடுவதற்கு உகந்த காலமாகும். இந்த ஆண்டு மகாளயம் இன்று (25-9-2018) செவ்வாய்க்கிழமை தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை உள்ளது. இந்த நாட்களில் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். மகாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும், சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால், அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்றைய தினம் செய்கின்ற தர்ப்பணத்தில் நாம் விடும் எள் மற்றும் தண்ணீரை, சுவேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுவதாக நம்பிக்கை.

    மனிதர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் ஐந்து என்று சொல்லப்படுகிறது. அவை பிதுர்யக்ஞம் (தர்ப் பணம் மூலமாக முன்னோர்களுக்கு உணவளிப்பது), தேவயக்ஞம் (யாகங்கள், ஹோமங்கள் மூலமாக தேவர்களுக்கு உணவளிப்பது), பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது.

    வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும், நமது முற்பிறப்பு பாப புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில், பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று.

    பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால், அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சுபகாரியத் தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். மேற்படி துர்பலன்களால் அவதிப்படுவோர்களுக்கு அருமருந்தாக அமைந்திருப்பது தான் இந்த மகாளய புண்ணிய காலம். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள முடியும்.

    நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றவர்கள். அவர்களுக்கும், நம் முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிரயாச்சித்தமாகவும் மகாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது. இந்த மகாளயபட்ச பதினைந்து நாட்களிலும், பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதாக ஐதீகம். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்கிறார்கள்.

    அதன் மூலம் அவர்கள் திருப்தி யடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மகாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளய பட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். சிறியதாகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக்கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோட்சனம் செய்யலாம். அதாவது பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். உங்கள் முன்னோர்களின் திதியன்று அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு உணவிடலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் வழங்கலாம். 
    Next Story
    ×