search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொருள் வரவை அதிகரிக்கும் புருஷோத்தமன் விரத வழிபாடு
    X

    பொருள் வரவை அதிகரிக்கும் புருஷோத்தமன் விரத வழிபாடு

    தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று வர்ணிக்கப்படும் அந்தப் புருஷோத்தமனை புரட்டாசி மாதத்தில் புகழ்பாடி விரதம் இருந்து வழிபடுவோம். பொருள் வரவை நாம் பெறுவோம்.
    வழிபாடுகள் தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது. நாளும் நல்ல பலன்கள் நடைபெறவும், விதியின் வலிமையை மாற்றவும், துன்பங்கள் விலகவும், மனம் அமைதி பெறவும் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம். முழு முதற்கடவுள் கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை எண்ணற்ற தெய்வங்களை வணங்கி வருகிறோம்.

    அவற்றில் கிழமைக்கேற்ற வழிபாடு, வாரத்திற்கேற்ற வழிபாடு, திதிக்கேற்ற வழிபாடு, மாதத்திற்கேற்ற வழிபாடு, வருடத்திற்கு ஒருமுறை வழிபடும் வழிபாடு என்று எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. இவை நீங்கலாக முன்னோர் வழிபாடு என்பது நம் முன்னேற்றத்திற்கு முதற்படியாக அமைகின்றது. இத்தனை வழிபாடுகளுடன் குல தெய்வ வழிபாட்டையும் நாம் அன்றாடம் மேற்கொண்டால் வாழ்வில் வளமும் நலமும் வந்து சேரும்.

    அந்த அடிப்படையில் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் புண்ணிய காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். பிறர் பொறாமைப்படும்படியும், திறமைக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவும் திகழ்வர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற தாரக மந்திரத்தை வாழ்வில் ஏற்று நடப்பவர்களாகவும் இருப்பார்கள். போற்றுதலுக்குரிய மாதம், புனிதமான மாதம் புரட்டாசி என்பதை அறிந்துகொள்ளுங் கள்.

    புரட்டாசி மாதம் என்றாலே பொன், பொருளை வழங்கும் புருஷோத்தமன் வழிபாடுதான் நினைவில் வரும். எல்லா சனிக்கிழமைகளைக் காட்டிலும் புண்ணிய மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தநாளில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டுவந்தால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். ‘அவதார புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்று அழைக் கிறார்கள்.

    விஷ்ணு அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் முக்கியமானது. காரணம் ராமன் ஒழுக்கம் தவறாமல், உத்தமனாக வாழ்ந்தது தான். ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து அதன் முன்னிலையில் எத்தனையோ வீடுகளில், கோவில்களில் ராமாயணம் படிக்கின்றார்கள். ராமாயணம் படிப்பவர்கள் மற்றும் படிப்பவர்களின் இல்லங்களிலும், அந்த ராமகாதையைக் கேட்பவர்கள் இல்லங்களிலும் காரியத் தடைகள் அனைத்தும் அகலும். மண மாலை சூடவும், மழலைகள் பிறக்கவும், தொழில் சிறக்கவும், தொல்லைகள் தீரவும், கடன் அகலவும், தனம் பெருகவும் ராமாயணம் படிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வது நல்லது. அதிலும் பட்டாபிஷேகத்தன்று கலந்துகொண்டால் ராஜயோகத்தோடு வாழும் அமைப்பு கிடைக்கும்.

    பூ மகளின் அருகிலிருக்கும் விஷ்ணுவை நோக்கி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஆலயம் சென்று வழிபாடு செய்து வந்தால் நாளும் நன்மைகள் நடைபெறும்.

    திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாள், அலர்மேலுமங்கைத் தாயார், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில், கூடலழகியப் பெருமாள் என சிறப்பு மிகுந்த எண்ணற்ற பெருமாள் கோவில்கள் இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி வன்புகழ் நாராயண சுவாமி கோவில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்றநாராயணப் பெருமாள், அரியக்குடி திருவேங்கடமுடையான், கீழச்சிவல்பட்டி சுந்தரராஜப் பெருமாள், கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் என அவரவர்களுக்கு அருகில் இருக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வாழ்க்கையும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கள். தவிர புரட்டாசி சனிக் கிழமைகளில் அன்னதானம், வஸ்திர தானம், சொர்ண தானங்களை மேற்கொண்டால் மேலும் பல நல்ல பலன்களைப் பெறலாம்.

    விஷ்ணு அலங்காரப் பிரியர் என்பதால், சனிக்கிழமைகளில் அவரை அலங்கரித்து அழகு பார்க்க வேண்டும். செந்தாமரை மலர் சூட்டி, பச்சைப் பட்டு அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது உகந்தது. அதே வேளையில் ராமதூதரான அனுமனுக்கும் விளக்கேற்றி, வடைமாலை அணிவித்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் துன்பங்கள், தடைகள் அகலும்.

    தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று வர்ணிக்கப்படும் அந்தப் புருஷோத்தமனை புரட்டாசி மாதத்தில் புகழ்பாடி வழிபடுவோம். பொருள் வரவை நாம் பெறுவோம்.

    புருஷோத்தமன் வழிபாடு நீங்கலாக.. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில், சிவாலயத்திற்குச் சென்று சனீஸ்வரர் சன்னிதியில் எள் தீபத்தை ஏற்றி, சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ‘சனி பகவானால் நெருங்க முடியாத தெய்வம்’ என்று விநாயகப் பெருமானையும், அனுமனையும் சொல்வார்கள். அவர்களை இடைவிடாது வழிபட்டு வந்தாலும் அற்புத பலன்கள் நமக்குக் கிடைக்கும். இந்த புரட்டாசி மாதம் ராமநாமத்தைச் சொல்லி நாளும் வழிபட்டால், ராமபிரானின் அருள் அதிகம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
    Next Story
    ×