search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: தொழுகையின் சிறப்புகள்
    X

    நோன்பின் மாண்புகள்: தொழுகையின் சிறப்புகள்

    ஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
    இறைவழிபாடுகளில் தொழுகை முதலிடத்தை வகிக்கிறது. தொழுகை சுவனத்தின் திறவுகோல், இறைமார்க்கத்தின் தூண் என்றும், மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகையை பற்றியதாக இருக்குமென்றும், தொழுகை மறுமையில் மனிதனுக்கு ஒளியாக திகழும் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    இறைவனை வணங்க வாரத்தில் ஒருநாள் போதுமே. அல்லது காலையில் எழுந்த உடனும், இரவில் படுக்கச்செல்லும் முன்பும் அவனை வணங்கினால் போதுமே என்று நாம் எண்ணலாம். ஆனால் தொழுகை எதற்காகக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டால் இக்கேள்வி எழாது.

    நோன்பை போலவே தொழுகையும் ஒழுக்கழுள்ள, இறையச்சமுள்ள மனிதனை உருவாக்க இறைவன் வழங்கியுள்ள ஆன்மிகப்பயிற்சியாகும். மனிதன் தவறிழைக்கக்கூடியவன். அவனுக்கு இடப்பட்ட கட்டளைகளை மறக்கக்கூடியவன். சில வேளைகளில் இறைவனையேகூட மறந்து விடுவான். எனவே அவனுக்கு இறை நினைவூட்டி அவனை ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள மனிதனாக ஆக்கவே தொழுகை விதிக்கப்பட்டுள்ளது.

    மானக்கேடான தீய செயல்களிலிருந்து காக்கவே தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்கிறது குர்ஆன்(29:45). நல்ல மனிதனை உருவாக்க வேண்டுமெனில் இறைவன் அவனை கண்காணித்து கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும். தொழுகை அந்த வேலையை செய்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவனை வணங்குவதால் எப்போதும் இறை சிந்தனையில் மனிதனை ஆழ்த்தி தவறுகளிலிருந்து மனிதனை காக்கின்றது.

    தொழுகை மனிதனுக்கு மன அமைதியை தருகின்றது. இறைவனை நெருங்கி அவனிடம் முறையிடுவதால் உள்ளம் அமைதி பெறுகிறது. தொழுகையின் மூலம் இறைவனிடம் உதவி கோரும் வாய்ப்பு கிட்டுகிறது.

    தொழுகை சமத்துவம், சகோதரத்துவத்திற்காக இறைவன் செய்த ஏற்பாடாகும். நிறம், குலம், மொழி, செல்வம், அறிவு, அதிகாரம் இவற்றின் அடிப்படையில் எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதால் சமத்துவம் செயல்படுத்திக்காட்டப்படுகிறது.

    நீங்கள் இறைவனை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்துத் தொழுவது போல் தொழுவதே உயர் பண்பயாளனின் நிலை (இஹ்ஸான்) என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

    தொழுகையை அலட்சியாக்குபவர்க்கு கேடுதான் என்ற இறைவசனத்தையும்(107:4) இறைநம்பிக்கையும் இறை நிராகரிப்பையும் பிரித்து காட்டுவதே தொழுகைதான் என்ற நபிமொழியையும் நினைவில் கொண்டு தவறாது தொழுது வாருங்கள். சாக்குபோக்கு சொல்லி தொழுகையில் இருந்து நழுவி விடாதீர்கள்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×