search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரித்திரப் புகழ்பெற்ற உடன்படிக்கை
    X

    சரித்திரப் புகழ்பெற்ற உடன்படிக்கை

    இறைஅருளால் நடந்த அந்த ஹூதைய்பிய்யா உடன்படிக்கையும், நபிகளாரின் முன்யோசனையும் தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.


    இஸ்லாம்,





    அண்ணல் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினா வந்த பின்னர், ஏகத்துவ பிரச்சாரம் உலகெங்கும் வேகமாக பரவியது. ஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபிகளாருக்கு, இறையில்லமான கஅபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். அவர்களுடன் தோழர்களும் இணைந்துகொண்டார்கள்.

    முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் மக்கா நோக்கி வருகிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் இறைமறுப்பாளர்களான குறைஷியர்கள் கலங்கினர். ஏற்கனவே பலவீனமாய் இருந்த அவர்கள் மீண்டும் போர் செய்ய திராணியின்றி சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பினர்.

    இந்த நிலையில் நபிகளாரின் குழு மக்காவின் எல்லையை வந்தடைந்தது. உஸ்மான் (ரலி) அவர்களை சமாதான தூதுவராக மக்காவிற்கு அனுப்பினார்கள் நபி (ஸல்) அவர்கள்.

    குறைஷியர்கள் தங்கள் தூதுவராக உருவாஸ் இப்னு மசூது என்பவரை நபிகளாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர், நபிகளாரிடம், “நீங்கள் இந்த ஆண்டு கஅபாவில் பிரார்த்தனை (உம்ரா) செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது. எங்களது கொள்கைகளுக்கு மாறுபட்ட கருத்துள்ள உங்களுக்கு எங்கள் ஆலயத்தை உரிமை கொண்டாட அனுமதியில்லை. ஆனால் குறைஷியர்களின் ஆலோசனைப்படி இதற்காக நாம் போர் செய்ய வேண்டாம். வேண்டுமென்றால் ஓர் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம்” என்றார்.

    இந்த நிலையில் மக்காவுக்கு நபிகளார் சார்பில் தூதுவராய் சென்ற உஸ்மான் (ரலி) அவர்களை குறைஷியர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று ஓர் வதந்தி பரவியது. இதை அறிந்த நபித்தோழர்கள் அனைவரும் கொதித்து எழுந்தார்கள்.

    உமர் கத்தாப் (ரலி) அவர்கள், “அண்ணலே எனக்கு அனுமதி வழங்குங்கள். நான் எதிரிகள் அனைவரையும் அழித்து விடுகிறேன்” என்று வாளை உயர்த்தினார்கள். அப்போது வீரம் நிறைந்த சஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானாரின் கைகள் மீது தங்கள் கைகளை இணைத்து வாக்குறுதி அளித்தனர்.

    அந்த காட்சியைக் கண்டு மகிழ்வுற்றவனாக அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான்:

    “இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்”. (திருக்குர்ஆன் 48:18)

    அந்த வசனங்களை வஹியாய்ப் பெற்ற நபிகள் நாயகம் அவர்கள், அதன் அர்த்தங்களை உடன் இருந்தவர்களிடம் விளக்கி கொண்டிருந்தார்கள். அப்போது, மக்காவிலிருந்து செய்தி வந்தது. ‘உஸ்மான் (ரலி) நலமாக இருக்கிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று தகவல் கிடைத்தது.

    வாக்குறுதி அளித்த அத்தனை சஹாபா பெருமக்களின் வீரம் மிக்க உறுதியை அறிந்திருந்த அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒரு கண் ஜாடை காட்டியிருந்தால் போதும்; அத்தனை எதிரிகளும் பதர்களாய் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.

    ஆனால் கருணையின் பிறப்பிடமான நபியவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் போரை விரும்பவில்லை. எதிரிகளின் பிணங்களைத் தாண்டி மக்கா நகர் நுழைய அவர்கள் விரும்பவில்லை.

    மாறாக அமைதியான முறையில் எதிரிகள் அனைவரும் அன்போடு அவர்களை வரவேற்க, ஆனந்தமாய் உள் நுழையவே விரும்பினார்கள். அதனால் எதிரிகளின் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

    ஹூதைய்பிய்யா என்ற இடத்தில் அந்த உடன்படிக்கை நிறைவேறியதால் அதற்கு ‘ஹூதைய்பிய்யா உடன்படிக்கை’ என்ற பெயர் அமைந்தது. அன்று தொட்டு இன்று வரை இது போன்ற ஒரு சிறந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படவில்லை என்று சரித்திர ஆசிரியர்கள், வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அண்ணலாரின் தெளிவான சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும், எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ராஜதந்திரமும் நிறைந்த ஒரு ஆச்சரியமான உடன்படிக்கை என்று இன்றளவும் ஹூதைய்பிய்யா உடன்படிக்கை போற்றப்படுகின்றது.

    இந்த உடன்படிக்கையின் விதிகள் இருசாராரின் அனுமதியோடு எழுதப்பட்டன. ஆனால் எல்லா நிபந்தனைகளும், எதிரிகளுக்கே சாதகமாக அமையக்கூடிய வகையில் தான் உடன்படிக்கை விதிகள் இருந்தன. ஆனாலும் அண்ணலார் கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஞானத்தின் வெளிப்பாடாய் அது அமைந்தது என்பது பின்னர் நிரூபணம் ஆனது.

    புஜபலம் அதிகம் பெற்றிருந்தும், எதிரிகளை எளிதாக வெல்லக் கூடிய வலிமை பெற்றிருந்தும், உமர், அலி, முவாயிய்யா போன்ற வீரர்கள் உடன்படிக்கையின் விதிகள் அனைத்தையும் எதிர்த்த போதும், உற்றத் தோழர்கள் அதனை விரும்பாத போதும், அதன் விதிகள் கடுமையாக தங்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற நிலையிலும் அண்ணல் நபிநாதர் (ஸல்) அந்த உடன்படிக்கையில் தன் முத்திரையைப் பதித்தார்கள்.

    காரணம்- அவர்களின் நோக்கம், மக்காவை வெற்றி கொள்வது மாத்திரம் அல்ல. மக்காவில் உள்ள எதிரிகள் மத்தியில் இஸ்லாத்தின் தத்துவங்களை நிலைக்கச் செய்ய வேண்டும் என்பதே. அதோடு, மக்காவில் உள்ளத்தளவில் அல்லாஹ் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்கள் வெளிப்படையாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு அது வழியை ஏற்படுத்தி தரும் என்றும் கருதினார்கள்.

    அவர்கள் எண்ணம் உண்மை என்பது விரைவில் நிரூபணமானது. ஹிஜ்ரி 9-ம் ஆண்டு அண்ணலார் மீண்டும் மக்கா நோக்கி பயணமாகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான சஹாபாக்களோடு அவர்கள் சென்றபோது, மக்காவின் வழிகள் திறந்தே கிடந்தன. எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. எதிரிகளாக இருந்தவர்களும் மனம்மாறி நல்வாழ்த்துச்சொல்லி அண்ணலாரை வரவேற்றார்கள்.

    “கஸ்பா” என்ற ஒட்டகையின் மீது அமர்ந்தவர்களாக, ஆஷா கோலுடன், கருப்பு தலைப்பாகை அணிந்தவர்களாக கம்பீரத்துடன் மக்காவில் நுழைந்தார்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள்.

    கத்தியின்றி, ரத்தமின்றி, எதிரிகளும் இன்றி, எதிர்ப்பும் இன்றி, அங்கிருந்த மக்கள் எல்லாம் இஸ்லாத்தைத் தழுவிய நல்லடியார்களாய் மாறிய நிலையில் நபிகளார் மக்காவில் நுழைந்தது மாபெரும் நிகழ்வல்லவா!

    இறைஅருளால் நடந்த அந்த ஹூதைய்பிய்யா உடன்படிக்கையும், நபிகளாரின் முன்யோசனையும் தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது. இது தொடர்பாக இறங்கிய திருக்குர்ஆன் வசனம் இது:

    ‘அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும் புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது)! அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம். (திருக்குர்ஆன் 48:25).

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி 
    Next Story
    ×