search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அல்லாஹ் பிழைகளைப் பொறுத்து மன்னிப்பை அருள்கிறான்
    X

    அல்லாஹ் பிழைகளைப் பொறுத்து மன்னிப்பை அருள்கிறான்

    நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாகவும், மிக்கக் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்ற இறை வசனம் அருளப்பட்டது.
    நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குத் தலைமையேற்றுச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போரின் போது கடும் வெயிலில் நபி(ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காகத் தம் எதிர்பார்ப்பான தொலைதூரப் பயணத்தையும் வெற்றியையும் அதிக எண்ணிக்கையிலான எதிரிகளைச் சந்திக்கவிருப்பதையும் முஸ்லிம்களுக்கு வெளிப்படையாக உணர்த்திவிட்டார்கள்.

    போரில் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகிவிடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு வஹீ வராத வரையில் போருக்கு வராதவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணும் அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம் பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில் காலத்தில் நபி(ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

    எல்லாரும் பயண ஏற்பாடுகளைச் செய்யும்போது இன்று செய்யலாம், நாளை செய்யலாம் என்று தனது பயண ஏற்பாட்டைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார்கள் கஅப் இப்னு மாலிக்(ரலி). முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு ஒரு காலை நேரத்தில் நபி(ஸல்) புறப்பட்டுவிட்டபோதும், பயண ஏற்பாடுகளைச் செய்து அவர்களை அடைந்துவிடலாம் என்று இருந்துவிட்டவர்கள். நிலை இழுபட்டுக் கொண்டே சென்று கடைசி வரை தபூக் போரில் கஅப் இப்னு மாலிக்(ரலி) கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தபூக் போரைத் தவிர மற்ற எல்லாப் போரிலும் கலந்து கொண்டவர்கள் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளாதவர்.

    உடல் பலமும் பொருள் வசதியும் இருந்தும் கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் போரில் கலந்து கொள்ளவில்லை. எல்லாரும் போருக்குப் புறப்பட்ட பின்னரே அவர்கள் மதீனா நகரைச் சுற்றி வரும்போது கவனித்தார்கள் நயவஞ்சகர் எனச் சந்தேகப்பட்ட மனிதர்களையும், இறைவனால் சலுகை வழங்கப்பட்ட முதியோர், பெண்கள் போன்ற பலவீனர்களையும் தவிர வேறெவரும் மதீனாவிற்குள் இல்லை. தாம் தவறு செய்துவிட்டதை உணர்ந்த கஅப்(ரலி), நபி(ஸல்) வருகைக்காகக் காத்திருந்தார்கள். பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது, என்பதை அறிந்த கஅப்(ரலி) உண்மையைச் சொல்ல காத்திருந்தார்கள்.

    நபி(ஸல்) வழக்கம்போல் பயணத்திலிருந்து திரும்பியவுடன் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக அமர்ந்தார்கள்.

    தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல் பின்தங்கிவிட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டுத் தாம் போருக்கு வராமல் போனதற்குச் சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். நபி(ஸல்) அவர்கள், அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

    அப்போது, அங்குக் கஅப் இப்னு மாலிக்(ரலி) சென்று சலாம் கூறி அமர்ந்தார்கள். 'போரில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் போருக்காக வாகனம் வாங்கி வைத்துகொண்டிருக்கவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கஅப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். “வாங்கி வைத்திருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத வேறு எவரேனும் ஓர் உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது பொய்யான சாக்குப் போக்குச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன்.

    எவராலும் வெல்ல முடியாத வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி என் மீது தங்களைக் கடுங்கோபம்கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன்.

    அதே சமயம் தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால், தற்போது அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. தங்களைவிட்டு நான் பின்தங்கிவிட்டேன்“ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் , “இவர் உண்மை சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, “சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறினார்கள்.

    “நயவஞ்சகர்களே! நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் உங்களுடன் கலந்திருக்க அல்லாஹ் நம்பிக்கையாளர்களை விட்டுவைக்க மாட்டான்” என்ற இறை வசனமும், 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள்.

    ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள்; அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீயவற்றுக்கு இதுவே பிரதிபலனாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்' எனும் வசனங்களும் அருளப்பெற்றபோது அந்தப் பொய்யர்கள் அழிந்து போனார்கள்.

    கஅப் இப்னு மாலி(ரலி) அவர்களைப் போன்றே ஆனால் பத்ருப்போரில் கலந்துகொண்ட முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும் உண்மையை உரைத்தவர்கள். இவர்களும் வேறு காரணங்களுக்காகத் தபூக் போரில் கலந்து கொள்ள முடியாமல் அல்லாஹ்வின் தீர்ப்புக்காகக் காத்திருந்தனர். மூவரிடமும் யாரும் பேசவில்லை, மக்கள் தவிர்த்தனர். இதே நிலையில் அவர்கள் ஐம்பது நாள்கள் இருந்தனர். அப்போது கஅப்(ரலி) அவர்களுக்கு 'ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து அவருடன் இணைய அழைப்பு வந்தது. கஅப்(ரலி) மறுத்துவிட்டு அல்லாஹ்வின் தீர்ப்புக்காகக் காத்திருந்தார்.

    “அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், அல்லாஹ் மன்னித்து விட்டான்; பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்வின் புகழ் அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்று மன்னிப்பவனாகவும், மிக்கக் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.

    உடனே கஅப்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! என் பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வத்தின் மீதான என்னுடைய உரிமையைவிட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அதைத் தர்மமாக அளித்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது' என்று கூறினார்கள்.

    ஸஹீஹ் புகாரி 3:56:2948, 3:55:2757, 5:64:4418, 5:65:4676, திருக்குர்ஆன் 3:179, 09:95, 96

    - ஜெஸிலா பானு, துபாய்
    Next Story
    ×