search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அண்ணலாருக்கு அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள்
    X

    அண்ணலாருக்கு அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள்

    “உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை. அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான் என்பதைத் தெரிந்து கொள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் பயணத்தில் இருந்தபோது, இரவின் கடைசி நேரம் எட்டியதும் எல்லோருக்கும் தூக்கம் வரவே, பயணக் களைப்பில் தூங்கிவிட்டனர். காலையில் ஒவ்வொருவராகத் தூக்கத்திலிருந்து எழுந்தனர். நபி(ஸல்) அவர்களின் தூக்கத்திலேயே அவர்களுக்குச் செய்தி வரும் என்பதால் நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்களைத் தூக்கத்திலிருந்து தாமாகவே விழிக்கும் வரை அவர்களை யாருமே எழுப்பமாட்டார்கள்.

    நபி(ஸல்) அவர்களின் தோழர் உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து ஸுப்ஹ் தொழுகை அதாவது காலை நேரத் தொழுகை தவறிப்போனதை உணர்ந்தவர்களாக ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று சப்தமாக முழங்கிக் கொண்டே இருந்தார். அந்தச் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள்.

    தொழுகை தவறியதைப் பற்றிச் சொன்னதும், ‘அதனால் எந்தப் பாதிப்புமில்லை. இங்கிருந்து புறப்படுவோம்’ என்று சொல்லி அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி இருக்கும் தண்ணீரை வைத்து ஒதுச் செய்தனர். தொழுகைக்கான அழைப்புக் கொடுக்கப்பட்டு, மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.

    தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ‘எல்லாருடனும் சேர்ந்து கூட்டுத் தொழுகையில் நீ ஏன் கலந்துக் கொள்ளவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த நபர் “எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. என்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தண்ணீர் இல்லை” என்று கூறினார். “மண்ணில் தயம்மும் செய். அதுவே உனக்குப் போதுமானது” என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.

    பின்னர்ப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று “தாகமாக இருக்கிறது, தண்ணீர் இல்லை” என முறையிட்டனர். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, இரு தோழர்களை அழைத்து, “நீங்கள் சென்று தண்ணீரைத் தேடுங்கள்” என்று கூறினார்கள். அவர்கள் சென்று தேடும்போது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள்.

    அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள். “தண்ணீர் எங்கே கிடைக்கிறது?” என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். “தண்ணீர் ஒரு நாள் பயணத் தூரத்தில் இருக்கிறது” என்றாள். “அப்படியானால் நீ அல்லாஹ்வின் தூதரிடம் புறப்படு” என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். “மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?” என்று அப்பெண் கேட்டாள். “ஆம்” என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.

    “அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் செல்லுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

    விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையானவர் கடைசியாக வந்தார், அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கியது.

    அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் அத்தோல் பையில் இருப்பது போன்றும் தண்ணீர் குறையாதது போன்றும் இருந்தது. “அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் கட்டி அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் “உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை. அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான் என்பதைத் தெரிந்து கொள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் சென்று நிகழ்ந்த ஆச்சரியமான விஷயத்தை விவரித்தாள். அவள் சந்தித்தவர் இந்த வானத்திற்கும் இந்தப் பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் இறைத்தூதராக இருக்க வேண்டும் என்றாள்.

    பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண்ணின் குடும்பத்தை அணுகி “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்

    இஸ்லாமின் அற்புதங்களால் இஸ்லாத்தை மக்கள் ஏற்றனர், போற்றினர்.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 1:7:344

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×