search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்: பெண்ணின் பெருமை
    X

    இஸ்லாம்: பெண்ணின் பெருமை

    பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளைச் சமூகத்தில் பதிய வைத்து, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நபிகள் நாயகம் மாற்றி அமைத்தார்கள்.
    பெண்கள் மனித இனத்தில் சரி பாதியாக உள்ளனர். பெண்களை மதிக்காத, அவர்களுக்குச் சம உரிமை வழங்காத ஒரு சமூகம் முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியாது. உலகம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எல்லாத் துறைகளிலும் கொடி கட்டிப் பறந்தாலும், பெண்களை இழிவாக, சுமையாக, போகப் பொருளாக பார்க்கும் நிலை நீடிக்கிறது. பெண்களைச் சுமையாகப் பார்த்ததன் விளைவாக இந்த நூற்றாண்டிலும் கருக்கொலை, சிசுக்கொலை தொடர்கிறது. இதன் காரணமாக நமது நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டே வருகிறது. இன்று ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற நிலை உள்ளது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டிலும் பெண்களைச் சுமையாகப் பார்க்கும் நிலை இருந்தது. “என் மகள் என் முன்னே இறக்க வேண்டும்; அவள் என்னை இழிவில் இருந்து காக்க வேண்டும்; மகளைப் புதைப்பது புனித செயல்” என்ற கருத்துகள் மக்களிடையே இருந்தன. பெண் குழந்தைகள் பிறந்தால், அதனை அவமானமாகக் கருதுவார்கள்; சினமுறுவார்கள். அந்தக் குழந்தைகளை உயிரோடு வைத்துக் கொள்வதா அல்லது புதைத்து விடுவதா என்று குழம்பி நிற்பார்கள். சமூகத்தை விட்டு ஒளிந்து கொள்வார்கள்.

    நபிகள் நாயகம் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.

    நபிகளார் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்து பேச்சு எழுந்தது. ஒரு தோழர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார்.

    “இறைத் தூதரே! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள்.

    சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.

    நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது.

    ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்னபோது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார்.

    அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்றபோது, நபிகள் நாயகம், “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.

    பின்னர் நபிகள் நாயகம் கூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள்.

    நபிகள் நாயகம் தாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தை களைக் கொல்லாதீர்கள்” (6:151) என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள். மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், “எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?” (81:8) என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதைக் கூறி மக்களை எச்சரித்தார்கள்.

    “ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தைகளுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டாமலும் இருந்தால், இறைவன் அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்” என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

    “ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து, அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்து, கருணை புரிந்து, எந்தவிதக் கேடும் செய்யாமல் இருந்தால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம்” என்றார்கள், நபிகள் நாயகம்.

    அருகில் இருந்த நபித்தோழர் கேட்டார்: “இறைத்தூதர் அவர்களே! இரு பெண் குழந்தைகள் என்றால்...?” அதற்கு நபிகளார், “இரு பெண் குழந்தைகள் என்றாலும் சரியே!” என்றார்கள்.

    ஆண்களும், பெண்களும் ஒரே மூலத்தில் இருந்தே படைக்கப்பட்டார்கள். எனவே இருவருமே கண்ணியத்திற்குரியவர்கள், சமமானவர்கள்.

    இவ்வாறு பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளைச் சமூகத்தில் பதிய வைத்து, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நபிகள் நாயகம் மாற்றி அமைத்தார்கள். பெண் சிசுக் கொலையை நிறுத்தியதோடு பெண்களுக்குப் பல உரிமைகளையும் வழங்கினார்கள். மண விலக்குப் பெறும் உரிமை, மறுமண உரிமை, பொருளீட்டும் உரிமை, சொத்துரிமை, வாரிசுரிமை, கல்வி உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை என ஆண்களுக்குரிய எல்லா உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்கினார்கள்.

    நமது நாட்டில் தொடரும் கருக் கொலை களையும், சிசுக் கொலைகளையும் தடுத்து நிறுத்தாவிடில், பெண்களின் எண்ணிக்கையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டு, பல சமூக பிரச்சினைகள் உருவாகும். இத்தீமைக்கு மூல காரணமான வரதட்சணை, சீர் வரிசைகள் ஆகியவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியும்.

    பெண்கள் சுமையல்ல; அவர்கள் சுமைதாங்கிகள்.

    - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்
    Next Story
    ×