search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரிய விருத்தி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் குளிகை நேரம்
    X

    காரிய விருத்தி, கடன் பிரச்சனைகளை தீர்க்கும் குளிகை நேரம்

    குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.
    மனிதர்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் தாம் செய்யும் செயல்கள் விருத்தியுடையதாக இருக்க வேண்டும் என்பதே. ஒரு சிலருக்கு காரிய சித்தி, காரிய விருத்தி இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சிறு செயலை சாதிப்பது கூட, குதிரைக்கு கொம்பு முளைத்தது போல் ஆகிவிடும். அது ஏன் ஒரு சிலர் செய்யும் செயல் மட்டும் விருத்தியாகிறது? என்ற ரகசியம் தெரிய வேண்டுமா.

    காரிய விருத்தி நேரம் என்று ஒரு குறிப்பிட்ட கால நேரம் தினமும் உண்டு. அதனை குளிகை நேரம் என்பார்கள். அந்த குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    பலருக்கு தினமும் ராசி பலன் பார்க்கும் வழக்கம் உண்டு. அது பத்திரிகையோ, வார இதழோ, காலண்டரோ, டி.வி.யோ எதுவாக இருந்தாலும் குளிகை நேரம் என்று ஒன்றை குறிப்பிடுவதைக் காண முடியும். ராகு காலம், எம கண்டம் தெரிந்த அளவு, பலருக்கும் குளிகை நேரம் பற்றி தெரிந்திருக்காது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் ‘குளிகன்’ என்றும், இரவில் ஒரு குழந்தை பிறந்தால் ‘மாந்தி’ என்றும் சொல்லப்படுகிறது. குளிகன் என்பவர் சனி மற்றும் ஜோஷ்டா தேவியின் புதல்வன்.

    வாரத்தில் இருப்பது 7 நாட்கள். ஆனால் 9 நவக்கிரகங்கள் உள்ளன. 7 கிரகங்களுக்கு 7 நாட்கள் சென்று விடும். ஆனால் ராகு, கேதுவுக்கு கிழமை கிடையாது என்பதால், தினமும் 1½ மணி நேரம் ராகு காலம், எம கண்டமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அது போலத் தான் குளிகனுக்கும் தினமும் 1½ மணி நேரம் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.

    குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியைக் கொடுத்தால், அந்த கடன் விரைவில் அடைபட்டுவிடும். கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள், அல்லது சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் ஒரு பகுதியை செலுத்தினால் அந்த கடன் எளிதில் குறைந்து விடும். பெரிய பாக்கி இருக்கும் போது, சிறிய தொகையை வாங்க மறுப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட நிலையில் வீட்டில் சிவப்பு நிற உண்டியல் அல்லது சிவப்பு நிறத் துணியில், தினமும் குளிகை நேரத்தில் பணம் கொடுக்க வேண்டியவரின் பெயரை உச்சரித்து கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வர வேண்டும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.



    குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும், தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும். குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன், ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டது என்று ஒரு புராண கதையே உண்டு.

    குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனி பகவானை வணங்கும்போது மனதில் குளிகனையும் எண்ணி வழிபடலாம்.

    குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், அசுப காரியங்களுக்கு இது பொருத்தம் இல்லாததாகவும் கருதப்படுகிறது.

    குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்தால், அது எந்தத் தடையும் இல்லாமல் நடப்பதுடன், நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகன் என்ற மாந்தியின் நேரத்தை பயன்படுத்தி காரிய விருத்தி, காரிய சித்தி பெறுங்கள்.

    செய்யக்கூடியவை

    குளிகை நேரத்தில் செய்யக் கூடிய செயல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். சுபச் செயல்களான நகை, நிலம், வீடு, வாகனம் வாங்குவது. பத்திரப்பதிவு செய்வது. புதிய தொழில் தொடங்குவது. வங்கிக் கணக்கில் பணம் போடுவது. அடமானப் பொருளை மீட்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் தாராளமாகச் செய்யலாம். மேலும் விவசாயப் பணிகளான விதை விதைத்தல், நாற்று நடுதல், மகசூல் அறுவடை செய்தல் போன்ற செயல்களையும் செய்யலாம். இந்த கால நேரத்தில் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உண்டியலில் தினமும் பணம் போட்டு வந்தால், சேமிப்பு மலை போல் வளரும். புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம். பிறந்தநாள் கொண்டாடலாம். ஆயுள் ஹோமம் செய்யலாம்.

    செய்யக்கூடாதவை

    குளிகை நேரத்தில் செய்யக் கூடாத சில செயல்களையும் இங்கே பார்ப்போம். பெண் பார்க்கச் செல்வது, திருமணம் செய்தல், வேலைக்கு முயற்சி செய்வது, நேர்காணல்களை சந்திப்பது போன்றவற்றை குளிகை நேரத்தில் தவிர்க்க வேண்டும். அது போல் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, சவ அடக்கம் போன்ற அசுப நிகழ்ச்சியை இதுபோன்ற நேரத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதே போல் நோய்க்கு மருத்துவரை அணுகுவதற்கும் இது சரியான நேரம் அல்ல. கொடிய நோய்க்கு முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்ளவும் இந்த நேரம் சரியானது கிடையாது.

    பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
    Next Story
    ×