search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை
    X

    நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை

    நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.
    நீண்டகாலமாக பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது தான் ‘விதியை வெல்ல முடியுமா?’. ‘முடியும்’ என்கிறார்கள் ஒரு சாரார். ‘முடியும் என்பதற்கு பின்னால் முயற்சியும் இருக்க வேண்டும்’ என்பது அவர்கள் கூற்று.

    ‘முடியாது’ என்பது இன்னொரு தரப்பினரின் வாதம். அவர்கள், ஊழ்வினை, பூர்வ புண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்கு துணைக்கு அழைக்கிறார்கள். ‘பிறப்பின் போதே அமர்ந்த கிரகங்கள் தான் ஒருவரின் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. எது எப்போது நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று’ என்பது அவர்களின் வாதம்.

    இவை ஒருபுறம் இருந்தாலும், கிரக பலன்களை சொல்ல வந்த ஞானிகள், பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்க முடியாது. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால், அதற்கு எதிர்முனையில் முடிவு ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நம்மை ஆளும் நவக்கிரகங்கள் நம்மை பாதிக்கும் போது, அதில் இருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம் தான் பரிகாரம்.

    வியாதி வருவது விதி என்று எடுத்துக் கொண்டால், மருந்து உண்டு நிவாரணம் தேடுவது விதியை வெல்லும் வழி. விதியை வெல்லும் வழியை இறை வழிபாட்டின் மூலமும், சில சமயம் மருந்துகளின் துணையோடும் வெல்ல முயன்றிருக்கிறது மனித இனம். அவர்கள் தான் நம் முன்னோர்கள்.

    ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். மனிதனுக்கு தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.

    அதனால்தான்...

    ‘கலையாத கல்வியும், குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும், கன்றாத வளமையுங்
    குன்றாத இளமையும், கழுபிணி யிலாத உடலும்
    சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
    மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்

    தொலையாத நிதியமும்..’ கேட்டு அம்பிகையிடம் வேண்டுதல் வைக்கிறார் அபிராமிபட்டர்.

    அப்படி அபிராமிபட்டர் ‘கழுபிணி இல்லாத உடல்’ என்ற ஒன்றை தர வல்லவர், தன்வந்திரி பகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வது போல், மருத்துவ கடவுள், இந்த தன்வந்திரி பகவான்.

    அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலில் இருந்து தோன்றியவர், தன்வந்திரி பகவான். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு அவதரித்தவர். நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.

    அதுமட்டுமல்ல.. மருந்து உண்பதற்கு நேரமும் இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள் கொடுத்த மகத்தான கொடை தான் பஞ்சாங்கம். அது வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை சொல்வதோடு நின்று விடவில்லை. இந்த காலக் கணிதத்தின் வாயிலாக சகலமும் அறியலாம்.

    அந்த பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலில் இருந்து, நாம் எடுக்க நினைக்கும் முத்து தான், அமிர்தகடிகை அல்லது அமிர்த நாழிகை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வியாதிக்கு மருந்து உண்ணும் நேரம். இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

    மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது.

    அந்த வகையில் அமிர்த நாழிகையை கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை, மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற வேண்டும். அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும் என்பது கவிகாளிதாசர் எழுதிய ‘உத்திரகாலாமிர்தம்’ என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.

    மருந்து உண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல் இருக்கிறது. எனவே அமிர்த நாழிகை தொடக்கம் முதல் முடிவு வரை 1½ மணிநேரம் இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால் கூட, அதன் மத்திம நேரத்தில் மருந்து உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த இடத்தில் இன்னொறு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.

    ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காக காத்திருக்க முடியாது. அதே போல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால் அந்த நோய் பூரணமாக குணமாகும்.

    மருந்து உண்ணும் நேரம்

    நோய்கள் குணமாக மருந்து உண்ண வேண்டிய அமிர்த நாழிகை நேரம் வருமாறு:-

    அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்

    பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்

    கார்த்திகை 50 முதல் 54 நாழிகைக்குள்

    ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்

    மிருகசீரிஷம் 30 முதல் 34 நாழிகைக்குள்

    திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்

    புனர்பூசம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    பூசம் 16 முதல் 20 நாழிகைக்குள்

    ஆயில்யம் 40 முதல் 44 நாழிகைக்குள்

    மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    பூரம் 30 முதல் 34 நாழிகைக்குள்

    உத்திரம் 33 முதல் 37 நாழிகைக்குள்

    ஹஸ்தம் 7 முதல் 11 நாழிகைக்குள்

    சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்

    சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்

    விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    அனுஷம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்

    மூலம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    பூராடம் 10 முதல் 14 நாழிகைக்குள்

    உத்திராடம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    திருவோணம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    சதயம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்

    உத்திரட்டாதி 18 முதல் 22 நாழிகைக்குள்

    ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்

    இந்த கால நேரத்தில் மருந்து உண்டால், நோய்கள் விரைவில் பூரண குணமடையும் என்பது நமது சித்தர்கள் கண்ட ராஜ வைத்தியமாகும். 
    Next Story
    ×