search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும்
    X

    சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும்

    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும்.

    ஒரு முறையாவது உங்களுக்குரிய சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று, ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதந்தோறும் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான பலன்களை காண முடியும்.

    சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும், பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நலம் காணுங்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி, சிவாலயமாகவே இருக்கும்.

    * அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய சித்தரின் பெயர் காளங்கிநாதர். இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்கு பெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ‘ஓம் குருவே சரணம்’ என மூன்றுமுறை கூறி, ‘ஓம் ஸ்ரீ காளங்கிநாதர் சித்த குருசுவாமியே சரணம்.. சரணம்..’ என முடிந்தளவு கூறலாம்.

    மற்ற நட்சத்திரக்காரர்களும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தருக்கான பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

    * பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருக்கு பழனி முருகன் சன்னிதியில் சமாதி உள்ளது.

    * கார்த்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தருக்கு உரியது. இவருக்கு சமாதியும் இல்லை. இவரது உடல் அழியவும் இல்லை. நேரடியாக கயிலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கட்கிழமை வெள்ளை ஆடை அணிந்து, வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

    * ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியவர் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    * மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரியவராக இரண்டு சித்தர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பாம்பாட்டி சித்தர். மற்றொருவர் சட்டமுனி சித்தர். இதில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் சமாதி ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

    * திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடாருக்கு உரியது. இவரது ஜீவசமாதி, நெருப்பு பிழம்பாக ஈசன் நின்ற திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.



    * புனர்பூச நட்சத்திரத்திற்குரியவர் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

    * பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தருக்கு உரியது. இவர் திருவாரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

    * ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சித்தர் அகத்தியர். இவரது ஒளிவட்டம் குற்றாலப் பொதிகை மலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது.

    * மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவரது ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

    * பூரம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ராமதேவ சித்தர். இவரது ஜீவ சமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை. நம் நாட்டினர் இவரை வழிபட அழகர் மலைக்குத் தான் செல்வார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்டாளையும் வழிபடலாம். அவரை ஸ்ரீவில்லிபுத்தூரில் வழிபட வேண்டும்.

    * உத்திரம் நட்சத்திரம் சித்தர் காகபுஜண்டருக்கு உரியது. இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.

    * ஹஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூராருக்கு உரியது. இவர் சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.

    * சித்திரை நட்சத்திரத்திற்கு உரியவர், சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவரது ஜீவ சமாதி உள்ளது.

    * சுவாதி நட்சத்திரத்திற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் இருக்கிறது.

    * விசாகம் நட்சத்திரத்திற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

    * அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகிக்கு உரியது. இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    * கேட்டை நட்சத்திரம் பகவான் வியாசருக்கு உரியது. இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.



    * மூலம் நட்சத்திரத்திற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

    * பூராடம் நட்சத்திரத்திற்குரியவரும் ராமேதவர் சித்தரே. இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.

    * உத்திராடம் நட்சத்திரத்திற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

    * திருவோணம் நட்சத்திரம் சித்தர் தட்சிணாமூர்த்திக்கு உரியது. இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    * அவிட்டம் நட்சத்திரம் சித்தர் திருமூலருக்கு உரியது. இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்.

    * சதயம் நட்சத்திரத்திற்கு உரியவர் கவுபாலர். இவரின் சமாதி எங்கிருக்கிறது என்பதற்கான தெளிவான குறிப்புகள் இல்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.

    * பூரட்டாதி நட்சத்திரத்திற்கான சித்தர் ஜோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.

    * உத்திரட்டாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவர் சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையின் ஒலியாக வந்து, இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.

    * ரேவதி நட்சத்திரத்திற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.

    மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மட்டும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். 
    Next Story
    ×