search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் கிரகம் தரக்கூடிய நோய்கள்
    X

    செவ்வாய் கிரகம் தரக்கூடிய நோய்கள்

    நவக்கிரகங்களில் முக்கியமானவரான செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம். இப்போது செவ்வாய் கிரகம் தரக்கூடிய நோய்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் யோகம் தரக்கூடிய வகையில் பலமாக அமைந்திருந்தால், சில நன்மைகள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் செயல்படுபவராக இருப்பார். அவருக்கு பெரிய அளவில் நோய் பாதிப்பு ஏற்படாது. அந்த ஜாதகர், மாட மாளிகை, அரண்மனை போன்ற வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெறுவார். பூமியால் யோகம் கிடைக்கும். அவருக்கு நிலத்தில் இருந்து புதையல், பொன், பொருள் கிடைக்கலாம். செவ்வாய் பலம் பெற்ற ஜாதகர் விவசாயத்தில் கொடிகட்டி பறப்பார். அந்த ஜாதகருக்கு பொதுமக்களிடம் நல்லபெயர், புகழ் கிடைக்கும்.

    மேலும் செவ்வாய் பலம் பெற்ற நபருக்கு, உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விசுவாசிகள் கிடைப்பார்கள். மனத் துணிவு மிகுந்தவராக இருப்பார். ராணுவம், போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கக்கூடும். அரசாள்பவர்களையே, அஞ்சாமல் கேள்வி கேட்கும் மனதைரியம் கொண்டவர்களாக இருப்பர். அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். சகோதரர் மற்றும் பங்காளிகளின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். ஒருவர் மருத்துவத் துறையில் நற் பெயர் எடுப்பதற்கு காரணமும், செவ்வாய் கிரகம்தான்.

    அதே போல் மருத்துவத் துறையில் புதிய புதிய படிப்புகளைப் படித்து, அதிமேதை பட்டம் பெறுவதற்கும், நவீன மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு அதிபதியாவதற்கும் வழிகாட்டு பவர் செவ்வாய் தான். மின்சார வாரியம், தீயணைப்புத் துறையில் உயர்பதவி கிடைக்க, செவ்வாய் பலமே முக்கியக் காரணம். முதுமை காலம் வரை ஒருவர் உழைப்பதற்கு, அதற்குரிய சக்தியைத் தருபவர் செவ்வாய் என்றால் அது மிகையல்ல. பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம், காற்றாலை மின் விசிறி அமைக்கும் தொழிலுக்கு அதிபதியாக்கும் ஆற்றல் படைத்தவர் செவ்வாய். ஒரு சிலருக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து திருமணம் நடைபெறும். அதற்கு காரணமான வரும் இதே செவ்வாய் பகவான் தான்.

    செவ்வாயால் வரக்கூடிய நோய்கள்

    ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் செவ்வாய். ஒருவரது நோய் தன்மை, அதன் வீரியம் பற்றி உணர வைப்பது செவ்வாய் கிரகம் தான். இவர் தான் விபத்து நடப்பதற்கும், விபத்தால் ரத்தம் வெளியேறி மரணம் சம்பவிக்கவும் காரணமானவர். செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம். பிறரின் ரத்தம் மூலம் வரக்கூடிய நோய்களுக்கும் இவரே மூலகாரணம்.

    ரத்தசோகை, ரத்த புற்றுநோய், மஞ்சள் காமாலை, காரசாரமான உணவுகளால் உண்டாகும் நோய்கள், உடல் மெலிவு, கல்லீரல் மூலம் உண்டாகும் நோய், உடல் உணர்வற்று போவது, அதிக உஷ்ணத்தால் உடலில் கொப்பளம், வெடிப்பு உருவாவது, மண்ணீரல் பாதிப்பு, ஆயுதங்களால் உடல் சிதைவு ஏற்படுவது, கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, தவறான சிகிச்சையால் மரணிப்பது போன்ற நோய்களுக்கும் செவ்வாயே காரணகர்த்தாவாக திகழ்கிறார்.

    அதுமட்டுமின்றி, தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் உண்டாகும் நோய்கள், வெடி விபத்து, வாகனத்தில் தீவிபத்தால் பாதிக்கப்படுவது, கிணறு வெட்டும் போது மண் சரிந்து பலியாவது, நோயால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது, இடி- மின்னலால் ஏற்படும் இறப்பு, துப்பாக்கி தயாரிக்கும் இடங்களில் உண்டாகும் விபத்து, பூமிக்காக.. நிலத்திற்கான பிரச்சினையில் ஏற்படும் கொலை, துரித உணவுகளால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றிற்கு செவ்வாய் தான் காரணம்.



    செவ்வாய் பாதிப்பிற்குரிய விதிமுறைகள்

    * செவ்வாய் பகை ராசியான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் நின்றிருந்தால், ரத்த சோகை, உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பது, உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும். தோல் அரிப்புகள் இருக்கும். இந்த ஜாதகர் சகோதர்களிடம் இணக்கம் இல்லாமல் இருப்பார்.

    * செவ்வாய் நீச்ச ராசியான கடகத்தில் நின்று இருந்தால், பல நோய்களுக்கு ஜாதகரே மூலக்காரணமாக இருப்பார். வசிக்கும் இடங்கள், தொழில் புரியும் இடங்களில் உண்டாகும் நோய்கள் தாக்கக்கூடும். மூச்சுக் கோளாறுகள் வரலாம்.

    * செவ்வாய் தனது பகை கிரகங்களான புதன், ராகுவோடு இணைந்து இருந்தால், புற்று நோய்கள் வரலாம். ரத்தத்தில் விஷக் கிருமிகள் உண்டாகும். நரம்புகளில் ரத்த அடைப்பு வரலாம். இவர்களது சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

    * செவ்வாய் பகைக் கிரகமான புதன், ராகு ஆகிய கிரங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தால், தோல் நோய்கள் வரலாம். புதிய நோய்கள் வரக்கூடும். ரத்தம் ஓட்டம் சீராக இல்லாமல் கை, கால் பிடிப்பு தலைவலி வரக் கூடும்.

    * செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர் செய்யும் கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்கள் வரக்கூடும். தெரிந்தோ தெரியாமலோ பிறரது தொற்று நோய் தாக்கக்கூடும். பூமி, மனை, காடு, தோட்டம் சிக்கல் தரக்கூடும்.

    * செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங் களுக்கான அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகருக்கு நரம்பு தளர்வு, ரத்தக் குழாய் வெடிப்புகள், இனம் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரக்கூடும். ஜாதகரின் சகோதரர்கள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.

    * செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தாலோ, அந்த ஜாதகரின் ரத்தம் சமயத்திற்கு உதவாமல் போகலாம். ரத்தம் கெட்டு போகும் நிலை ஏற்படக்கூடும். பற்களில் ஈறுகளில் ரத்தக் கசிவு உண்டாகும்.

    * செவ்வாய்க் கிரகமே லக்னத்திற்கு பாதகாதி பதியாக இருந்தால், அந்த ஜாதகருக்கு வெட்டுக் காயம், தீ காயம், விபத்துகள் மூலம் ரத்தம் வீணாகும். காற்றில் பரவும் கிருமிகள் உடலைக் கெடுக்கும். புரியாத நோய்கள் வரக் கூடும்.

    * செவ்வாய் பகை கிரகங்கள் மற்றும் பாதகாதி பதிகளின் கிரகப் பார்வை பெற்றிருந்தால், நினைத்தது போல் உடல் ஒத்துழைப்பு தராமல் போகும். ஏதாவது உடல்நலக்கேடு இருந்து கொண்டே இருக்கும். நோய்கள் போக்குவதில் உரிய அக்கறை இருக்காது.

    * செவ்வாய் அஷ்டவர்க்கத்தில் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், செவ்வாய் கிரகத்தால் ஏதாவது நோய்கள் வரக்கூடும். உடலில் போதுமான எதிர்ப்புகள் சக்திகள் இல்லாமல் இருக்கும்.

    - ஆர்.சூரியநாராயணமூர்த்தி 
    Next Story
    ×