search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய் தீர்க்கும் பசு வழிபாடு
    X

    நோய் தீர்க்கும் பசு வழிபாடு

    ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி, தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஒரு முறை ரமண மகரிஷியைத் தேடி, ஒரு செல்வந்தர் வந்தார். அவர் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்பவர். மிகவும் கருமி. அவருக்கு உடல் முழுவதும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனையோ வைத்தியர்களிடம் எல்லாம் இந்த நோய் பற்றி காட்டியும், அவர்கள் கொடுத்த மருந்து எதற்கும் நோய் குணமாகவில்லை. ஒரு கட்டத்தில் அந்த செல்வந்தருக்கு, உடலில் ஆடைகளே அணிய முடியாத அளவுக்கு, நோயின் தீவிரம் அதிகமானது. எரிச்சல் மற்றும் வலியால் துடித்துப் போனார்.

    அவருக்குத் தெரிந்தவர்கள், ரமண மகரிஷியைப் போய் பார்த்தால், ஏதாவது தீர்வு சொல்வார் என்று சொன்னதைக் கேட்டுதான், திருவண்ணாமலையில் இருந்த ரமணரைத் தேடி வந்திருந்தார் அந்த செல்வந்தர்.

    செல்வந்தரைப் பார்த்ததும், ‘நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து. உன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு ஏழை எளியோருக்கு தான, தர்மங்கள் செய். ஆசிரமத்தில் உள்ள கோ - சாலையில் ஒரு மண்டலம் வேலை செய். பசுக்களை குளிப்பாட்டு, சாணத்தை அள்ளிப்போடு, கோ-சாலையை சுத்தம் செய்!’ என்றார்.

    ஏதாவது மருந்து சொல்வார் என்று வந்தால், இவர் என்ன பசுக் கூடத்தில் போய் வேலை பார்க்கச் சொல்கிறார்? என்று அந்தச் செல்வந்தருக்குத் தோன்றினாலும், சரி என்று ஒப்புக்கொண்டார். ஆசிரமத்தின் கோ-சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். சரியாக ஒரு மண்டலம்.. அதாவது 48 நாட்கள் கழித்துப் பார்த்த போது, அவரது உடலில் இருந்த தோல் நோய், இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது. அவர் பரிபூரண குணம் பெற்றிருந்தார்.

    பசுக்களின் மூச்சுக் காற்றை சுவாசிப்பது, சஞ்சீவினியைவிட சிறந்த மருந்து என்பதை ரமண மகரிஷி உணர்ந்திருந்தார்.

    தீராத தோல் நோய் உள்ளவர்கள், கவுரவக் குறைச்சலாக எண்ணாமல், உங்கள் அந்தஸ்தை கொஞ்சம் தூக்கி தூர போட்டுவிட்டு, ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவுப் பணியை செய்து பாருங்கள். கோ-சேவையின் மகத்துவம் புரியும்.



    உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு, பசுவைத் தவிர.

    ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி, தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள். தோல் நோய் குணமாகாதா என்ன?..

    ஒரு பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின், முன்னோர்களில் 7 தலைமுறையினர் முக்தியடைவார்களாம்.

    அதிகாலையில் எழுந்தவுடன் யாரிடமும் பேசாமல்,

    ‘சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
    பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே’

    என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்குமாம்.

    பசு காயத்ரி மந்திரம்:

    ‘ஓம் பசுபதயேச வித்மஹே
    மகா தேவாய தீ மஹி
    தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்’
    Next Story
    ×