search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புராணங்களில் சாபங்கள் பற்றிய குறிப்புகள்
    X

    புராணங்களில் சாபங்கள் பற்றிய குறிப்புகள்

    புராணங்களை பார்த்தோம் என்றால், அதில் பல சாபங்களும், அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற செய்த பரிகாரங்கள் பற்றியும் குறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும்.
    இதிகாசங்களையும், புராணங்களையும் புரட்டிப் பார்த்தோம் என்றால், அதில் பல சாபங்களும், அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற செய்த பரிகாரங்கள் பற்றியும் குறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். சாபங்களில் 13 சாபங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை: பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் போன்றவை.

    பெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவது, உடன் பிறந்த சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியை கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது பெண் சாபம் ஆகும். இந்த சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

    பிரேத சாபம்: இறந்த ஒருவரின் உடலை வைத்துக் கொண்டு, அவரை இழிவாகப் பேசுவதும், பிரேதத்தின் உடலைத் தாண்டுவதும், இறுதிச் சடங்கை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை அவருக்கு வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் சாபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பிரேத சாபம் ஏற்பட்டவர்களின் ஆயுள் குறையும்.

    பிரம்ம சாபம்: பாடம் சொல்லிக் கொடுத்த குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாகப் பயன்படுத்துவது, தான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் மறைப்பது போன்ற செயல்களால் இந்த சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் வித்யா நஷ்டம் எனப்படும் கல்வி கற்க முடியாத நிலை உண்டாகும்.

    சர்ப்ப சாபம்: அவசியம் இல்லாமல் பாம்புகளை அடித்துத் துன்புறுத்துவது, அவற்றின் இருப்பிடங்களை அழிப்பது போன்ற செயலால் சர்ப்பசாபம் உண்டாகும். இதனால் கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, திருமணம் தடைபடும்.

    பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும் பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். இது பாலாரிஷ்ட சாபத்தை ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை உண்டாக்கும்.

    கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் தவிக்கும் பசுவிற்கு தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.



    பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை அடிக்கடி காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பூமிக்குள் போட்டு புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை ஏற்படுத்தும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

    கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். இந்த சாபத்தால் நீர் கிடைக்காமல் அவசதிப்படுவார்கள்.

    விருட்ச சாபம்: மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும்.

    தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவுகளுக்குள் விரிசல் உண்டாகும்.

    ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்ற செயல்களால் ஏற்படும். ரிஷி சாபத்தால் வம்சம் அழியும்.

    முனி சாபம்: எல்லை தெய்வங்கள் மற்றும் சின்னச் சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு வரலாம்.

    குலதெய்வ சாபம்: இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறந்து போவதால் ஏற்படுகிறது. இந்த சாபத்தின் காரணமாக குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்து கொள்ளும்.
    Next Story
    ×