search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 14-ந்தேதி நடக்கிறது
    X

    கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 14-ந்தேதி நடக்கிறது

    ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடக்கிறது.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுக நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு குருத்தோலை பவனி வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இது ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் ‘குருத்தோலை ஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது.

    அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை அவர்கள் கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதைத் தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை, மக்கள் நேர்ச்சையாகவும், காணிக்கையாகவும் ஆலயங்களுக்கு வழங்குவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 14-ந் தேதி குருத்தோலை பவனி நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து ஈஸ்டர் வரை உள்ள 7 நாட்களும் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி போன்ற தினங்கள் அனுசரிக்கப்படும். 
    Next Story
    ×