search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்புதங்களை செய்யும் ஆண்டவர்
    X

    அற்புதங்களை செய்யும் ஆண்டவர்

    பிரியமானவர்களே! ஜெபவேளையில் அல்லது, வேதத்தை வாசிக்கும் போதோ உங்களிடம் ஆண்டவர் என்ன சொல்லுகிறாரோ அல்லது உணர்த்துகிறாரோ உடனே அதற்கு கீழ்ப்படியுங்கள்.
    பிரியமானவர்களே! இயேசுவின் நாமத்தில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

    நம் தேவன் அற்புதர். உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்யும்படிக்கே மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றும் அற்புதமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார். இந்த தேவன் உங்கள் வாழ்வில் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார்.

    வேதம் சொல்லுகிறது, ‘ஆராய்ந்து முடியாத பெரிய காரியங் களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்’ (யோபு.9:10).

    அன்று கானாவூர் கல்யாண வீட்டிலே முதல் அற்புதத்தை செய்த ஆண்டவர் உங்கள் குடும்பத்திலும் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார்.

    இயேசுவுக்கு முதலிடம்

    ‘இயேசுவும் அவருடைய சீடரும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்’. (யோவான் 2:2)

    கானாவூரிலே திராட்சரசம் குறைவுபட்ட போது அந்த திருமண வீட்டிலே இயேசு அற்புதம் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா? இயேசு அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு உங்கள் குடும்ப வாழ்வில் அற்புதங்களை செய்ய வேண்டுமானால், அவருக்கு முதலிடம் கொடுங்கள்.

    ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அவரோடு பேசுங்கள். அவர் வாசற்படியில் நின்று தட்டுகிறவர். அவருக்கு உங்கள் உள்ளக்கதவைத் திறந்தால் அவர் உங்களுக்குள் உலாவி உங்களோடு வாசம் பண்ணுவார். உங்கள் குடும்பத்தில் வருகிற எல்லா போராட்டங்களையும் அவரே பொறுப்பெடுத்து நடத்தி உங்களுக்கு அற்புதம் செய்வார்.

    இயேசுவிடம் சொல்லுங்கள்

    ‘திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்’ (யோவான் 2:3).

    திருமண வீட்டில் ஒரு குறைவு ஏற்பட்ட போது இயேசுவின் தாயார் இயேசுவிடம் சொன்னார்கள். உடனே ஆண்டவர் குறைவுகளை நிறைவாக்கி ஒரு அற்புதம் செய்தார்.

    உங்கள் குடும்ப வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினையோ, போராட்டமோ, வியாதியோ, நஷ்டமோ ஏற்பட்டால் உடனே ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணுங்கள்.

    இன்று அநேகர் மனுஷரைத் தேடி ஓடுகிறார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்குமா என அவர்களையே நோக்குகிறார்கள்.

    ஆனால் ஆண்டவரை நோக்கிப் பார்த்து, அவரிடம் உங்கள் பிரச்சினைகளையும், குறைவுகளையும் சொல்வீர்களேயானால் நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு அற்புதங்களை செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார்.

    இயேசுவுக்கு கீழ்ப்படியுங்கள்

    “இயேசு வேலைக்காரரை நோக்கி: ‘ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள்’ என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்” (யோவான் 2:7).

    கானாவூர் கல்யாண வீட்டிலே வேலைக்காரர்கள் ஆண்டவர் என்ன சொன்னாரோ அதன்படி செய்ததால்தான் சாதாரண தண்ணீர் ருசியுள்ள திராட்சரசமானது.

    பிரியமானவர்களே! ஜெபவேளையில் அல்லது, வேதத்தை வாசிக்கும் போதோ உங்களிடம் ஆண்டவர் என்ன சொல்லுகிறாரோ அல்லது உணர்த்துகிறாரோ உடனே அதற்கு கீழ்ப்படியுங்கள்.

    கர்த்தர் நல்லவர். நிச்சயம் உங்கள் குடும்ப வாழ்வில் கர்த்தர் பெரிய அற்புதங்களை செய்து உங்களை சந்தோஷப்படுத்துவார். சிறிய காரியமோ, பெரிய காரியமோ தேவனுக்கு நீங்கள் கீழ்ப் படிந்தால் பெரிய பெரிய அற்புதங்களை தேவன் உங்கள் வாழ்வில் செய்வார்.

    இந்த மாதத்திலேயே கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கி உங்களை சந்தோஷப்படுத்துவார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    Next Story
    ×