search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு சொன்ன உவமைகள் : நல்ல சமாரியன்
    X

    இயேசு சொன்ன உவமைகள் : நல்ல சமாரியன்

    எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு.
    லூக்கா 10 : 25..36

    திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

    அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

    அவர் மறுமொழியாக,
    ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’
    என்று எழுதியுள்ளது” என்றார்.

    இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

    அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:

    “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை⁕ எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.

    “கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

    இயேசுவிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அவரை எப்படியாவது மாட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் தான் கேள்விகளைக் கேட்டார்கள். அதிலும் குறிப்பாக, மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், பரிசேயர்கள், குருக்கள் போன்றவர்களுடைய கேள்விகள் இரண்டு சிந்தனைகளை உள்ளடக்கியனவாகவே இருந்தன.

    1. தங்களுடைய மறை ஆளுமையை, மத அறிவை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கம்.

    2. இயேசுவை அவரது வாயாலேயே மாட்ட வைக்க வேண்டும் எனும் சிந்தனை.

    இந்த கேள்வியும் அப்படிப்பட்ட‌ ஒரு கேள்வி தான். இங்கே கேள்வி கேட்ட நபர் திருச்சட்டத்தை அலசி ஆராய்ந்தவர். மத சட்டங்களின் சந்து பொந்துகளில் உலவியவர். அவருடைய கேள்வி “நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்பது.

    யூதர்களுடைய நம்பிக்கைப்படி, நிலைவாழ்வு பெறவேண்டுமெனில் மத சட்டங்களைக் கடைபிடித்தால் போதும். இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்காக அவன் அந்தக் கேள்வியை இயேசுவின் முன்னால் வைக்கிறான்.

    சட்ட வல்லுநருக்கு இயேசு சட்டத்தின் வழியிலேயே சென்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். “திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது ?”

    கேள்வி கேட்டவனுக்கு குஷி. இந்த ஏரியாவில் அவன் எக்ஸ்பர்ட். சட்டென சொல்லி விடுகிறான் பதிலை. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, உன்னைப் போல உனக்கு அடுத்திருப்பவனை நேசி. அது தான் திருச்சட்டத்தின் சாரம்சம் என்றான்.

    சரியாகச் சொன்னாய். அப்படியே செய், உனக்கு நிலைவாழ்வு கிடைக்கும் என்றார் இயேசு.

    எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு. இறைவனின் கட்டளைகள் மனிதனை அன்புசெய்வதில் தான் நிறைவு பெறுகின்றன.

    கேள்வி கேட்டவனுக்கு அத்துடன் திருப்தி வரவில்லை. தான் எல்லாமே பக்காவாக செய்து வருவதாக அவனுக்கு ஒரு தற்பெருமை. கேள்வி கேட்டவன் ஒரு யூதனாய் இருக்கலாம். அவன் தன்னுடைய நேர்மைத் தன்மையை வெளிப்படுத்தி விடும் நோக்கில் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

    “யார் எனக்கு அடுத்திருப்பவன்”, எனது அயலான் யார் ? யார் எனக்கு பிறன் ?

    அப்போது தான் இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்.

    வழியிலேயே கள்வர்களால் குற்றுயிராக்கப்பட்ட நிலையில் கிடக்கிறார் ஒரு மனிதர். ஒரு குரு, குருவுக்கு உதவி செய்யும் லேவியர் இருவரும் தற்செயலாய் அந்த வழியாய் வருகின்றனர். ஆனால் அவனைக் கண்டதும் விலகிச் சென்றனர். அவனுக்கு உதவ மத மனங்கள் முன்வரவில்லை. அப்போது அங்கே பயணமாய் வருகிறான் சமாரியன் ஒருவன். யூதர்களின் ஜென்ம விரோதி.

    அவன் அடிபட்டவனை நெருங்கி, முதலுதவி செய்து, விலங்கின் மீது ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டு சென்று, பணம் கொடுத்து, மீண்டும் தேவைப்பட்டால் தருவதாக உத்தரவாதமும் கொடுத்து கிளம்பிச் செல்கிறான்.

    இப்போது இயேசு கேள்வியை திருப்பிக் கேட்கிறார். அடிபட்டவனுக்கு யார் அயலான் ? “அவனுக்கு இரக்கம் காட்டியவனே” என்கிறான் திருச்சட்ட வல்லுநர். அவனுடைய வாயில் அந்த ‘சமாரியன்’ எனும் வார்த்தையே வரவில்லை. அந்த அளவுக்கு வெறுப்பு அவனுக்குள் இருந்தது.

    இயேசு சொன்னார், “நீயும் போய் அவ்வாறே செய்”

    தேவையில் இருக்கும் நபருக்கு உதவுபவனே அடுத்திருப்பவன். அதாவது இதயங்களால் அடுத்திருக்க வேண்டும், உடலாலோ, நில எல்லைகளாலோ அடுத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. மனித நேயத்தை மறுதலிக்கும் விஷயங்களில் இறைவன் இருப்பதில்லை.

    Next Story
    ×