search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் பேராலயம் முன்பு பக்தர்கள் வெள்ளத்தில் சிறிய தேர் பவனி வந்த காட்
    X
    வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் பேராலயம் முன்பு பக்தர்கள் வெள்ளத்தில் சிறிய தேர் பவனி வந்த காட்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர்பவனி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் ஆரோக்கியமாதாவை வழிபட்டு செல்வதால் வேளாங்கண்ணி, ஆன்மிக சுற்றுலா தலமாக திகழ்கிறது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது வேளாங்கண்ணி.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவையொட்டி பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவிலில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.

    சிறிய தேர்பவனியும் நடைபெற்று வருகிறது. இதை காண இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரோக்கியமாதாவை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகவும் வேளாங் கண்ணிக்கு வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கியமாதாவின் பெரிய தேர் பவனி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணி அளவில் நடைபெறு கிறது. பெரிய தேர்பவனி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேளாங்கண்ணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாளை 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 
    Next Story
    ×