search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி
    X

    நடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி

    நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார். #ActressAbductionCase #Dileep #Mohanlal
    கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    நடிகை கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பிரபல நடிகர் திலீப்பை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் திலீப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். திலீப் கைது செய்யப்பட்டதும், அவர், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நீக்கப்பட்டார்.

    திலீப்பை நீக்கியபோது, நடிகர் சங்க தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகினார்.

    அவருக்கு பதில் நடிகர் மோகன்லால், மலையாள நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு நடந்த சங்க கூட்டத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

    நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க மலையாள நடிகைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே நடிகர் சங்கத்தில் நடிகை பலாத்கார விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்பட 3 பேர் ராஜினாமா செய்தனர்.

    இந்த நிலையில் திலீப்பை நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டதை அறிந்ததும் மேலும் சில நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மலையாள படவுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.



    நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதுபற்றி நேற்று கொச்சியில் நடிகர் சங்கத்தலைவர் மோகன்லால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் திலீப், சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை சங்கம் ஏற்றுக் கொண்டது. இது நடிகர் சங்க நிர்வாகிகள் மூலம் நடந்துள்ளது.

    நடிகை விவகாரம் தொடர்பாக அம்மாவில் இருந்து விலகிய நடிகைகள் மீண்டும் சங்கத்தில் சேர வேண்டுமென்றால் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

    மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறுபவர்கள் அதை நடிகர் சங்கத்தில் முறையாக புகார் அளிக்க வேண்டும். அதன் பேரில் நடிகர் சங்கம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ActressAbductionCase #Dileep #Mohanlal

    Next Story
    ×