search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
    X

    காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு

    அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும் என்று பரியேறும் பெருமாள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராம் பேசினார். #PariyerumPerumal #PaRanjith
    நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இயக்குநர் ராம் பேசியதாவது,

    எனக்கு ஒரு கவிதையில், நான் வாசித்த காட்சி ஞாபகம் வருகிறது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.

    மாரி செல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். திருநெல்வேலி என்ற ஊரையும் எனக்கு அறிமுகப்படுத்தியவன் மாரி செல்வராஜ். என் பாட்டன் அப்பன் வாழ்ந்த அந்த திருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும், என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.



    இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.

    Next Story
    ×