search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்க வரும் சமுத்திரகனி
    X

    கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்க வரும் சமுத்திரகனி

    கார்ப்பரேட் அட்டூழியத்தை தோலுரித்து காட்டும் புதிய படத்தில் நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். #Samuthirakani #Pettikadai
    லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ‘பெட்டிக்கடை’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார்.

    கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர், அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன். இப்படம் குறித்து இவர் கூறும்போது, ‘நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள். ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக அண்ணாச்சி, பாய், செட்டியார் என்று எதோ ஒன்றை சொல்லி அழைப்போம்.

    அந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள்.



    சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர் கேடு. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே பெட்டிக்கடை.

    படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது’ என்றார்.
    Next Story
    ×