search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் - விஷால் ஆவேசம்
    X

    நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் - விஷால் ஆவேசம்

    அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார். #NeetExam #Neet #Vishal
    நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்றே மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார்.

    இன்று காலை தேர்வெழுத மகாலிங்கம் சென்றுவிட்ட நிலையில், ஓட்டலில் இருந்த அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக தமிழக அதிகாரிகள் குழு கேரளா விரைந்துள்ளதாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். 



    நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    Next Story
    ×